எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களை வல்லினம் இலக்கிய இதழுக்காக நான் எடுத்த நேர்காணல் [நன்றி : வல்லினம்]
*
கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும் மிகமிக நெருக்கமானார்கள்.
எங்கள் உரையாடலின் நீட்சியாக ஒரு நேர்காணல் எடுக்கலாமா என்று கேட்டேன். வாட்சாப்பின் ‘வாய்ஸ் நோட்‘ செயலி வழியாக, பத்து நாள் காலத்தில், நாகர்கோயிலில் அவர்களும் பாசலில் நானுமாக, கிடைத்த நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்குமாகக் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டோம். அவ்வாறு நிகழ்ந்தது இந்த நேர்காணல்.
அங்கே இப்போது பெய்யும் துலாவர்ஷ மழையின் இடைவிடாத ஓசை, ரயில்சப்தங்கள், நாய்களின் குரைப்புகள், வரப்போகும் தீபாவளியின் வெடிச்சப்தங்கள் அருண்மொழியின் குரலுக்குப் பின்னணியாக அமைந்தன. உற்சாகம் குன்றாமல் அருண்மொழி பேசிக்கொண்டே இருந்தார். வெளியே மேகம் படர்ந்த வேளிமலை ஓங்கி நிற்க உள்ளே உணவு மேஜையில் அமர்ந்தபடி அவர் பேசுவதாக ஒரு கற்பனைச்சித்திரம் மனதில் தோன்றியது.
‘அருண்மொழிநங்கை’ என்பது ஒரு தனித்துவமான பெயர். எதை உத்தேசித்து அப்பா உங்களுக்கு அந்தப்பெயரை வைத்தார்?
‘அருண்மொழிநங்கை’ நிச்சயமாக ஒரு தனித்துவமான பெயர்தான். அப்பா தமிழாசிரியர் அல்ல, சரித்திர ஆசிரியர். ஆனால் தமிழ் மேல் பயங்கரமான பற்று. ராஜராஜசோழனின் இரண்டு மகள்களுக்கு அருண்மொழிநங்கை, அம்மங்கை என்று பெயர். முதல் மகளின் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்தார். ராஜராஜனுக்கே அருள்மொழிவர்மன் என்று பெயர் உண்டே. என் அப்பாவினுடைய தமிழ்ப்பற்றை உலகத்துக்கு பறைசாற்ற ஓர் ஊடகமாக நான் இருந்திருக்கிறேன், இல்லையா? உயிருள்ள ஓர் ஊடகம். [சிரிப்பு] அப்பாக்கள் இப்படித்தான். தங்களுடைய விருப்பங்களைக், கனவுகளை குழந்தைகள் மேல் தானே ஏற்றிவைப்பார்கள்.
ஆனால் சின்ன வயதில் உங்கள் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்.
ஆமாம். சிறுவயதில் என் பெயரின் பழந்தமிழ்த்தன்மை, செவ்வியல் தன்மை, எனக்குப் பிடிக்கவில்லை. சின்ன வயதில் நாம் பெரும்பாலும் நவீனமான பெயர்களைத்தானே விரும்புவோம். ஆறாவது ஏழாவது படிக்கும்போது சுஜாதா கதைகளை மிகவும் விரும்பிப் படிப்பேன். சுஜாதா அவருடைய கதாநாயகிகளுக்கு லீனா, அபர்ணா, அனிதா என்று மிக நவீனமான பெயர்களை வைப்பார். அப்படி எவ்வளவோ சின்னச்சின்ன அழகான பெயர்கள் இருக்கும்போது இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக, ஏதோ பிராட்டியார் பெயர் போல் ஒலிக்கும் பழைய பஞ்சாங்கம் மாதிரி ஒரு பெயரை அப்பா நமக்கு வைத்துள்ளாரே என்று இருக்கும். எங்கு போனாலும் பெரிய பெயரைச் சொல்வது கூச்சமாக இருக்கும். அருள்மொழியா, அருண்மொழியா என்று குழப்பம் வரும். என்னப்பா வச்சிருக்கிங்க பெயர், ஒன்றரை முழம் நீளத்துக்கு என்று திட்டுவேன். அப்போது அப்பா, இதன் அருமை உனக்கு இப்போது தெரியாது என்று மட்டும் சொல்லிச் சிரிப்பார்.
கல்லூரி படிக்கும்போது சில பழந்தமிழ் கவிதைகளையும் வாசித்தேன். அப்போது அந்தக் கவிதைகளின் சொல்நயம், ஓசை நயம் – தமிழுக்கென்று ஒரு ஒலிநயம், உச்சரிப்பு அழகு இருக்கும் இல்லையா… அந்த அழகு என்னை ஈர்த்தது. அப்போது கொஞ்சம் என் பெயர் மேல் ஒரு அஃப்பினிட்டி உருவானது. ஆனால் அதிகமாக விரும்ப, வெளியிலிருந்து ஒருவர், அதுவும் ரொம்பப் பிடித்த ஒருவர் வந்து ‘உன் பெயர் எவ்வளவு அழகான பெயர்’ என்று சொல்லவேண்டியிருந்தது.
ஜெயமோகன் கடிதம் எழுதியபோதா?
ஆம். ஜெயன் எனக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் ‘தூங்கும் நேரத்தைத் தவிர உன் பெயரை மனதில் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன்’ என்று எழுதியிருந்தார். என்ன சொல்ல? அது ஒரு உச்சாடனம். இப்போது நாம் கடவுளை வணங்கும் முறை என்றாலே சகஸ்ரநாமம், ராமஜெயம் என்று பெயர் உச்சரிப்பதுதானே? ‘உன் பெயரை நான் இடைவிடாது உச்சரிக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது எனக்கு ரொம்பவும் சிலிர்ப்பாக இருந்தது.
அப்போது ஒரு கவிதையும் கூட அனுப்பியிருந்தார். எனக்கு அந்தக் கவிதையும் மிகவும் புதுமையாக இருந்தது. பிரமிளினுடைய கவிதை. அந்தக் கவிதையின் பெயரே ‘உன் பெயர்’.
சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
“அப்பாடா’ என்று
அண்ணாந்தேன்…
சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.
பித்துநிலையில எழுதினாற்போல் இருக்கும். பெயரையும் பாம்பையும் மயக்கி எழுதியிருப்பார். பெயர் ஒரு விஷமுத்தத்தை நமக்குத் தருகிறது. பாம்பு மாதிரிதான். காதலின் வலியும் இன்பமும் கலந்த உணர்வை அப்படித்தானே சொல்ல முடியும். ‘இன்று, இடையறாத உன் பெயர்’ என்ற பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நிமிஷம் கூட நிறுத்த முடியாத உன் பெயர், உன் நினைவு. எனக்கு அந்தக் கவிதை ரொம்பப் பிடித்திருந்தது; ரொம்பவும் ரசித்தேன்… [சிரிப்பு] அப்புறம் ஆகா, இப்படி ஒரு லவ் லெட்டர் நமக்கு வருதே என்று பெருமையாகக் கூட இருந்தது.
இது 1991-ல் அல்லவா?
ஆம், மார்ச் 1991.
இப்போது இத்தனைக் காலத்துக்குப் பிறகு உங்கள் பெயர் உங்களுக்கு என்னவாகப் பொருள்படுகிறது?
உண்மையிலேயே இப்போது மிகவும் தனித்துவமான, அழகான, உச்சரிக்க இனிமையான பெயராகத்தான் தோன்றுகிறது. என் பெயரை வைத்து நான் பெருமைதான் படுகிறேன். ஒரு குழந்தைக்கு ஒரு பெயர் வைக்கும்போது, அந்தப் பெயரின் அர்த்தம் தரும் கனத்தை அந்தக் குழந்தை சுமக்க முடியாமல் இருக்குமில்லையா? அந்தப் பெயருக்கு, அந்த மொழிக்கு, பயங்கரமான அர்த்தம் இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து வளர்ந்து, அதன் தனித்துவம் மலரும் போதுதான், அந்தக் குழந்தை அந்தப்பெயரை உணர்ந்தறிந்து நிறைக்கிறது என்று தோன்றும். அப்படி நான் வளர்ந்து, என் ஆளுமையெல்லாம் கொஞ்சம் முதிர்ச்சி ஆகித்தான் என் பெயரும் நிரம்பியது என்று நான் நம்புகிறேன். என் பெயருக்கான அர்த்தம் ‘இனிமையான சொற்கள் நிறைந்த மொழியை பேசும் பெண்’. சமஸ்கிருதத்தில் இதற்கு நிகராக ‘சுபாஷிணி’ என்ற பெயரைச் சொல்வார்கள்.

உங்கள் பெயரை முதன்முறை கேட்டபோது ஒரு எழுத்தாளரின் மனைவிக்கு எத்தனை பொருத்தமான பெயர் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு எழுத்தாளருக்கும் அது மிகப் பொருத்தமானப் பெயர் என்று இப்போது தோன்றுகிறது. சின்ன வயதில் எப்போதாவது எழுதவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதா? அப்போது ஏதும் எழுதிப்பார்த்ததுண்டா?
‘விட்டு வந்த இடம்’ கட்டுரையில் எழுதியிருப்பேன். ‘நீல ஜாடி’ மொழிபெயர்க்கும்போது எழுதலாமே என்று ஒரு சின்ன ஆசை வந்தது. ஏனென்றால் அவர்களும் [எழுத்தாளர் ஐசக் தினேசென்] ஒரு பெண்தானே? இவ்வளவு அழகாக எழுதியிருக்கிறாரே? நாமும் எழுதிப்பார்க்கவேண்டும் என்று இருந்தது.
அப்புறம் திருமணமான பிறகு ஜெயனும் நானும் நண்பர்களும் சேர்ந்து டி.எஸ்.எலியட்டை மொழிபெயர்த்தபோது எழுதவேண்டும் என்று ரொம்ப ஆசை வந்தது. ஒரு கட்டுரையில் ஓர் எழுத்தாளர் என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் பட்டியல் போடுகிறார். அவன் மரபார்ந்த இலக்கியங்களை படித்திருக்கவேண்டும், தன் மொழியிலும் உலக இலக்கியத்திலும் அதே காலகட்டத்தில் எழுதுகிறவர்களைப் படித்திருக்கவேண்டும், இரண்டு பிராந்திய மொழிகள் தெரிந்திருக்கவேண்டும், உலக மொழி ஒன்று தெரிந்திருக்கவேண்டும் என்றெல்லாம் பட்டியல் போடுவார். அதெல்லாம் படித்தபோது தலை சுற்றியது. எழுத்தாளராக இருப்பது இவ்வளவு கஷ்டமா என்று!
திருமணத்திற்கு முன்னால் ஏதும் எழுதினீர்களா? பள்ளி, கல்லூரி காலத்தில்?
[சிரிப்பு] ஆமாம், கொஞ்சம். கல்லூரி இரண்டாம் வருடத்திலேயே வானம்பாடி கவிதைகளை வாசித்துக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன். ஓரிரு வரிகள் ஞாபகம் இருக்கிறது. ‘மேய்ச்சல் நிலமாம் உலகத்தில், இறைவன் படைத்தான் மந்தைகளை, மந்தைகள் தனது பசியாற…’ இப்படி வரும். இதே ரிதமிக் பேட்டர்னில். அது ஒரு நீள்கவிதை. இந்த மந்தையிலிருந்து ஒரு குட்டி ஆடு மட்டும் கோபித்துக்கொண்டு போய்விடும். கோபம் என்று இல்லை, அது புரட்சிகரமான ஆடு. வித்தியாசமாக சிந்திக்கும். வித்தியாசமாக சிந்திக்கும் ஆடு வேறு யார்? இந்த அருண்மொழிதான்…
பிறகு சங்கக்கவிதைகளுக்குள் இறங்க ஆரம்பித்தேன். சங்கக்கவிதைகள், பெரியாழ்வார், நம்மாழ்வார் எல்லாம் படிக்கப் படிக்க மொழியினுடைய அழகு தெரிந்து… சங்கக்கவிதை பாணியிலேயே நாம் ஒன்று எழுதிப்பார்ப்போம் என்று நினைத்தேன். ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’ பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன நின் பவளக் கூர்வாய்’ போன்ற அழகழகான வார்த்தைகள் எனக்குள் இறங்கின. அப்படியே குறிஞ்சி திணைக்கு, மருதத்திற்கு, முல்லைக்கு என்று நானாக ஒவ்வொரு திணைக்கும் இரண்டு, மூன்று கவிதைகள் எழுதினேன். சங்கப் பாணி கவிதையில் ஆசிரியப்பா, வெண்பா எதுவுமே வராதே? நம் மனம் போனப்படிக்கு எழுதலாம்.
ஆனால் அதில் நான் எடுத்துக்கொண்ட கான்செப்ட்தான் சரியில்லை போல. அந்தக் கவிதைகளை ஒரு நோட்புக்கில் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஜெயனை மூன்றாவது முறை சந்திக்கும்போது கொஞ்சம் துணிச்சலோடு அந்த நோட்டை எடுத்து காட்டினேன். ஜெயன் உண்மையிலேயே அவர் சிரிப்பை அடக்கக் கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் முகத்தை பார்த்தபோதே தெரிந்தது. ‘வார்த்தைகள்லாம் நல்லாத்தான் இருக்கு அருணா, ஆனால் கான்செப்ட்தான் கொஞ்சம் பழசுடீÓ என்றார். மெல்லிய சமாதான தொனியில், நான் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதுபோல்தான் சொன்னார். ஆனால் முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டே இருந்தது. அப்போது முடிவு பண்ணினேன், இனிமேல் இந்த டிராக்ல போகக்கூடாது என்று. அது ஒரு கன்னி முயற்சி.
இப்போது ஓர் எழுத்தாளராக உங்களுடைய ஆதர்சங்கள் யார் யார்? எழுதும்போது ‘இவர்களைப்போல் ஒரு கதை எழுதிவிடவேண்டும்‘ என்று யாரையேனும் மனதில் நிறுத்திக்கொள்வதுண்டா?
கதை என்றால் சிறுகதையைச் சொல்கிறீர்களா, நாவலையா? நாவலாசிரியர்களில் ஆதர்சங்கள் பலர். சிவராம காரந்த் [மண்ணும் மனிதரும்], எஸ்.எல். பைரப்பா [ஒரு குடும்பம் சிதைகிறது], அதீன் பந்தோபாத்யாய் [நீலகண்ட பறவையைத் தேடி], தாராசங்கர் பானர்ஜி [ஆரோக்ய நிகேதனம்], குரதுலைன் ஹைதர் [அக்னி நதி]. யதார்த்தவாத நாவல்களிலேயே ஒரு விசாலமான காலத்தையும் நிலத்தையும் மக்களையும் அடையாளப்படுத்தியவர்கள் இவர்கள். உலக இலக்கியம் என்றால் எல்லா பெரிய மாஸ்டர்களுமே ஆதர்சம்தான், தல்ஸ்தாய், தஸ்தோயெவெஸ்கி, ஹெர்மன் ஹெஸ், ஹெர்மன் மெல்வில் [மோபி டிக்], கஸாண்ட்சாகிஸ் எல்லோரும்.
ஜெயமோகன்?
ஜெயமோகன் இதில் விசேஷமான கேட்டெகரி, இப்போதைக்கு அவரை தள்ளி வைத்து விட்டு மற்றபடி என் பொதுவான அபிப்பிராயங்களைச் சொல்கிறேனே.
சரி, சிறுகதையில் யாரை பிடிக்கும்? நீங்கள் இப்போது எழுதியுள்ள கதை–கட்டுரைகளுக்கு முன்னோடியென்று மனதில் யாரையும் நிறுத்தியுள்ளீர்களா?
சிறுகதை என்று எடுத்துக்கொண்டால் தமிழிலேயே மாஸ்டர்கள் இருக்கிறார்கள். புதுமைப்பித்தன் எனக்குத் தீராத ஆச்சரியம் கொடுக்கக்கூடிய ரைட்டர். அவர் முயன்று பார்க்காத வடிவிலான சிறுகதையே இல்லை. ஒரு பக்கம் கயிற்றரவு, கபாடபுரம் மாதிரியான கதைகள். செல்லம்மாள் மாதிரியான கதைகள். அதே சமயம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் மாதிரி கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். பேசுபொருள், யுக்தி, சொல்லும்முறை என்று எல்லாவற்றிலுமே நிறைய வேரியேஷன் காட்டியிருக்கிறார் அல்லவா.
பிறகு, கச்சிதமான, மிகமிக கூர்மையான சிறுகதைகளை எழுதியவர் என்றால் அது அசோகமித்திரன்தான். உலகளவிலுள்ள மாஸ்டர்களுடன் அவரை இணைவைக்கலாம். அந்தளவுக்கு பெரிய மாஸ்டர் அவர், என்னைப் பொறுத்த வரை. உண்மையில் அசோகமித்திரன் மாதிரி ஒரு கதை எழுதிவிடுவதுதான் எல்லா எழுத்தாளர்களின் கனவாக இருக்குமென்று நினைக்கிறேன். அவ்வளவு subtle-ஆக, அவ்வளவு நுட்பமாக, கம்மியான வார்த்தைகளை சொல்லி – தீராத வியப்பில்லையா? அப்புறம் திஜா, சுந்தர ராமசாமி, கி.ரா, அழகிரிசாமி இவர்களுடைய சிறுகதைகளும் பிடிக்கும். மலையாளத்தில் பால் சக்காரியா, பஷீருடைய சிறுகதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கன்னடத்துல விவேக் ஷன்பாக்.
இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளின் வடிவத்துக்கு நான் இமிடேட் பண்ணும் எழுத்தாளர்கள் என்றால் அதிகமாக பஷீர், அ.முத்துலிங்கம், அசோகமித்திரன். அசோகமித்திரன் பதினெட்டாவது அட்சக்கோட்டில் செகந்திராபாத் நாட்களை எழுதுவாரே? அந்த வகைமாதிரியில்தான் நான் முயன்று பார்க்கிறேன்.
உலகளவில செக்கவ், ரே பிராட்பரி, ரேமண்ட் கார்வர், ஐசக் பாஷெவிஸ் சிங்கர், இடாலோ கால்வினோ, மார்குவேஸ்… மார்குவேஸ் சில நீள கதைகளை சிறப்பா எழுதியிருப்பாரு. இப்பக்கூட நினைவுக்கு வர்ர ஒரு கதை, ‘The Trail of Your Blood in the Snow’. சொல்புதிதில் செங்கதிர் அதை அழகாக மொழிபெயர்த்திருந்தார். ‘உறைபனியில் உன் குருதியின் தாரை’ என்ற பெயரில். பிறகு ஐசக் தினேசனின் fairy-tale பாணியிலான கதைகள், இவ்வளவும் என் மனசுக்கு பிடித்தமானது. ஆதர்சம் என்றால், இந்த பாணியிலெல்லாம் நான் இன்னும் எழுதிப்பார்க்கவில்லை, ஆனால் என் மனதிற்குள் இவர்களெல்லாம் இருக்கிறார்கள்.
‘கதை‘ என்று ஏன் கேட்டேன் என்றால், உங்கள் வலைதளத்தில் இடம்பெறும் கட்டுரைகள் எல்லாவற்றிலும் ஓர் அசலான புனைவுத்தன்மை உள்ளது. நினைவுக்குறிப்புகள், memoirs, என்பதை வெறுமனே சம்பவ அடுக்கு என்று எழுதாமல், ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு சிறுகதையின் வடிவைக் கொடுத்துள்ளீர்கள். இந்தப் புனைவம்சத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
முதல் காரியம், இதை எழுதத்தொடங்கும் போதே என் மனதில் இரண்டு, மூன்று நிபந்தனைகளை நானே போட்டுக்கொண்டேன். முதல் விஷயம் இது அனுபவம், ஆனால் அனுபவம், அனுபவமாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது. இரண்டாவது நிபந்தனை, அருண்மொழியுடைய அனுபவம் வெறுமனே அருண்மொழியின் அனுபவமாக மட்டும் நின்றுவிடக்கூடாது. என்னதான் வட்டாரத்தன்மை இருந்தாலும் ஏதாவது ஒரு புள்ளியில் எல்லாருமே இணைந்து கொள்ளக்கூடிய விதத்தில் அது அமையவேண்டும், உலகளாவிய தன்மை ஒன்று அதில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அப்புறம் இந்த கட்டுரைகளிலேயே மூன்று பேட்டர்ன், மூன்று வகைமைகள் இருக்கு. விட்டு வந்த இடம், கண்ணீரும் கனவும், சின்ன சின்ன புரட்சிகள், மாயச்சாளரம் எல்லாவற்றிலுமே ஒரு பரிணாம வளர்ச்சிய சொல்லியிருக்கேன். இசை ரசனை, வாசிப்பு ரசனை, சினிமா ரசனை எல்லாம் எனக்குள்ள வளர்ந்த பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டுரைகள்ல காட்டியிருப்பேன். அதுப்பக்கறம் இரண்டாவதா, என் மனம் கவர்ந்த ஆளுமைகளைப் பற்றி எழுதினேன். ‘அரசி’யில் என் ராஜம்மா பாட்டி, ராவுத்தர் மாமா, பட்டாணி, ‘நிலை’ வடிவேல் மாமா, இந்த மாதிரி. மூன்றாவது கதை. கதைன்னா, என் அனுபவங்கள்ல ஒரு கதையை புகுத்தி, ஒரு புனைவின் சாத்தியத்தைப் பரிசீலிக்கிற அம்சத்தோடு வந்த கட்டுரைகள்.

‘வானத்தில் நட்சத்திரங்கள்’ மூன்றாவது வகையான கட்டுரை இல்லையா. அற்புதமான கதைத்தருணம் ஒன்று இருக்குமே அதில்.
ஆமாம், வானத்தில் நட்சத்திரங்களில்ல அது சாத்தியமாச்சு. ஏன்னா அதுல பரிணாம வளர்ச்சி ஏதும் கிடையாது. ஒரு பதினாலு வயசு பெண்ணுக்கும், ஒரு ஒன்பது வயசு பையனுக்கும் ஒரு மிகப்பெரிய வாழ்க்கை அறிமுகமாகுது. அதைத்தான் அது சொல்ல வருது. அதுவரைக்கும் அவங்க கேள்விப்படாத இயேசு என்ற ஒருத்தர் அவங்களுக்கு அறிமுகம் ஆகிறார். ஒரு நாடக வடிவுல ஜீஸசோட எசென்ஸ் அவங்களுக்குள்ள இறங்குற தருணம். அதைச்சொல்லிப்பார்க்கலாம் என்று நினைத்தேன்.
இது ஒரு மூணு நாள் அனுபவம். நாடகத்துக்கு போறதுக்கான தூண்டுதல், அந்த தயாரிப்பு, அங்க போறது, அங்க அடையற அனுபவம், அவ்வளவுதானே. இந்த சம்பவம் இப்படி மூணு நாள்ள நடக்குறதுனால இதில் ஒரு சிறுகதை வடிவம் முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று ஆசைப்பட்டேன்.
சிறுகதை வடிவம்னா அதுக்கு மனசுல ஒரு சட்டகம் போட்டீங்களா? அனுபவத்துல புனைவ எங்க புகுத்தணும்னு எப்படி தீர்மானிச்சீங்க?
அதுக்கு ஒரு ஸ்கெலிட்டன் உருவாக்கிக்கிட்டது உண்மைதான். இந்தக் கட்டுரைகளில் ஒரு 70% உண்மைச் சம்பவம். அந்த ஸ்கெலிட்டனை மூடுகிறேன் இல்லையா, அதில்தான் புனைவின் அம்சம் கலந்திருக்கிறது. அந்த உரையாடல்கள் அப்படியே நிகழ்ந்திருக்குமா என்றால் இல்லை. ஆனால் அந்த வகையான உரையாடல்கள் எங்கள் வீட்டில் நிகழ சாத்தியம் உண்டு. அந்த பேட்டர்னை வைத்துக்கொண்டு உரையாடல்களை எழுதும்போது நிகழ்த்திக்கொள்கிறேன். அதில் புனைவின் அம்சம் உள்ளது. அப்புறம் கடைசியில் ஒரு ‘ஜம்ப்’ வருகிறதில்லையா, அங்கே ஒரு புனைவு எட்டிப்பார்க்கிறது.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் என் எல்லா கட்டுரைகளையும் படித்தார். உடனுக்குடன் எனக்கு குறிப்போ, வாய்ஸ் நோட்டோ அனுப்புவார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தன. ‘எங்க புனைவும் உண்மையும் கலக்குதுன்னு கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளருக்கு முக்கியமான சவால் அதுதான். அந்த சவாலில் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள்,’ என்று அவர் சொன்னார். மேற்கில் இந்த genre இருக்கு, இப்படி எழுதுகிறார்கள் அருண்மொழி என்றார். நான் சொன்னேனல்லவா, பஷீர், அசோகமித்ரன், அ.முத்துலிங்கம்தான் இந்த வகைமையில் எனக்கு முன்னோடிகள். அதுவும் முத்துலிங்கம் சாரின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் எல்லாம் கிட்டத்தட்ட இந்த மாதிரித்தான். அவர் இந்த வகைமையை ‘truth, but more truth – உண்மை, மேலும் கூடிய உண்மை’ என்று சொன்னார். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. வானத்தில் நட்சத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால் புனைவுக்குரிய எல்லா உத்திகளுமே நீங்க அதுல experiment பண்ணியிருப்பீங்க. உரையாடல், வர்ணனை, எல்லாமே.
ஆமாம், ‘வானத்தில் நட்சத்திரங்கள்’ எழுதியபோது எனக்கு எல்லாமே செய்து பார்க்க ஆவலாக இருந்தது. உரையாடலை நிகழ்த்திப்பார்த்தேன். கதை மாந்தர்களைச் சொல்லிப்பார்த்தேன். சூழல் சித்தரிப்பு, வர்ணனைகள் எல்லாம் செய்து பார்த்தேன். அந்தத் திருவிழாவின் மனநிலையை உருவாக்கிப் பாத்தேன். எதெல்லாம் எனக்கு வருகிறது, வரவில்லை என்று நானே பரிசீலித்துப் பார்த்தேன்.
அதில் கொஞ்சம் போதப்பூர்வமாக செய்த அம்சம், அதன் இரண்டாம் பாகம் கனமாக இருக்கப்போகிறது என்பதால், முதல் பாகத்தை இயல்பா, நகைச்சுவை இழையோட, அந்த குடும்பத்தின் சூழலை வர்ணிக்கவேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் சஸ்டெயின் ஆகும். இங்கிருந்தே அந்தக் கனத்தைக் கூட்டிவிடக்கூடாது. ஜாலியா, லைட்டா ஆரம்பிச்சு, போகப்போக கனம் கூடி அந்த முடிவில் சென்று நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.
அந்த உணர்வை என்னால் குடுக்க முடிகிறதா? என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது. அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விடுகிறது. அன்று அந்த நாடகம் நடந்த மைதானத்தில் இருந்த 75% பேர் அழுதார்கள். அத்தனை பவர்ஃபுல்லான நாடக வடிவம். முதன்முதலாக எனக்கு இயேசு அறிமுகமானது அப்போதுதான். ஒரு நூல் வழியாக படிச்சிருந்தாலும் நான் இவ்வளவு உலுக்கப்பட்டிருப்பேனா என்று எனக்குத் தெரியாது. இயேசு, நாடகம் வழியாக எனக்குள்ளையும் என் தம்பிக்குள்ளையும் இறங்கினார். அந்தக் கண்ணீர் – பைபிளில் ஒரு வரி வரும், ‘உங்கள் கறை படிந்த ஆன்மாவை கண்ணீரால் சுத்திகரியுங்கள்’ என்று. இந்த குழந்தைகள் கறை படிந்த ஆன்மா கிடையாதுதான். ஆனால் இயேசு செய்யாத பாவத்துக்காக, மனிதகுலத்துக்காக, ரத்தம் சிந்தியவர் இல்லையா? நாம நேரடியா அதில ஈடுபடலன்னாலும் மனிதக்குலம் முழுவதும் அந்த பாவத்த கொஞ்சம் கொஞ்சம் தனக்குள்ள ஏத்துக்கணும். ஒரு பிராயச்சித்தமா கண்ணீர் சிந்தணும், அப்படின்னு நான் நினைக்கிறேன். அப்போ அந்த மொத்த பாவத்துக்காக, அவன் மேல் இழைக்கப்பட்ட துரோகத்துக்காக, ஒவ்வொரு மனுஷனும் கொஞ்சம் கண்ணீர் விடுறான். அந்தக் கண்ணீர் இருக்கில்லியா, அதை எப்படியாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
அப்புறம் அந்தக் கண்ணீரோட போக முடியாது. அந்தக் கண்ணீர் முடிஞ்சு, தூய்மையாக, பாவத்தினால் வரும் இந்த உணர்ச்சிய கழுவினப்பிறகு ஒரு வெளிச்சம் வரும் இல்லையா, அந்த உணர்ச்சிய கொண்டு வரணும்னுதான் இந்த நட்சத்திரங்கள பார்க்குற சீன வைச்சேன். அது கண்டிப்பா புனைவோட ஒரு டச் தான். ஆனால் அதை நான் வேண்டி வேண்டி செய்யல, அதான் ஆச்சரியம். கோடைக்காலப் பின்னிரவில் திறந்த ரிக்ஷாவில் போகிறார்கள் என்றதுமே அந்த நட்சத்திரம் நிறைந்த வானம் வந்துவிட்டது. அந்த முடிவு அந்தத் தருணத்தில் எனக்குத் தோன்றியதுதான். அதுதான் புனைவின் மாயம் என்று நினைக்கிறேன். அது என்னை இழுத்துக்கொண்டது.
அதன் பிறகு நுரை, யசோதை முதலிய பதிவுகளில் நிறைய கதை மாந்தர் வரத்தொடங்கினார்கள். நிறைய உரையாடல்கள். அந்த வடிவம் என்னை மிகவும் ஈர்த்தது. அதற்குள் போய்விட்டேன்.
ஆமாம். அந்த கட்டுரைகள் எல்லாமே நல்ல சிறுகதைகளை வாசிக்கும் அனுபவத்தை கொடுத்தன. ஆனால் முழுக்கவும் புனைவென்று நினைக்கும்படியும் இல்லை. ஓர் அசல் நினைவு, எப்போதோ நடந்த உண்மை, என்ற உணர்வு இருந்துகொண்டே இருந்தது.
எழுதும்போது கட்டுரை கட்டுரையாக மட்டும் இருக்கக்கூடாது, புனைவாகவும் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். சூழல் எல்லாமே கொஞ்சம்தான் ஞாபகம் இருக்கும், அதை நான் இட்டு நிரப்புவேன். அது எந்த வகையிலேயும் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும், அதை மட்டும் நான் பார்த்துக்கொள்வேன். நம்பகமாகக் கொடுக்கவேண்டும், அதுதான் சவால். அதை நிறைவேற்றினேனா தெரியவில்லை.
ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏதாவது ஒரு சாராம்சம், மையம் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த சாராம்சம், மையம் நாம் உருவாக்குவதுதான். நாம் எழுத ஆரம்பிக்கும்போதே அந்த மையம் தெரிந்துவிடும். என்னைப்பொறுத்தவரை, எந்த மனிதனுக்கும் நிகழும் அனுபவம் இயல்பிலேயே தன்னுள் ஒரு சாராம்சத்தைத் தேக்கிவைத்துக்கொண்டுள்ளது. இது என்னுடைய ‘பெட் தியரி’ என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த சாராம்சத்தின் புள்ளியைக் கண்டுபிடிப்பது மட்டும்தான் நம்முடைய வேலை. நான் ஒரு சம்பவத்தை எழுதும்போதே இதற்கான சாராம்சம் எங்கே என்று தேடுகிறேன். ஒன்று நானே வேண்டுமென்று தேடுகிறேன், இல்லை அதுவாக நிகழ்கிறது. நான் அந்த சாராம்சத்தைத் தொட்டு சரியாக அதை நிகழ்த்திவிட்டேன் என்றால் அது வெற்றிகரமான கட்டுரையாக இருக்கிறது.
நீங்கள் வலைத்தளம் எழுதத் தொடங்கியபோது, ஏன் நினைவுகுறிப்புகள் எழுதலாம் என்று எடுத்தீர்கள்? இவர்களைப்பற்றி, இந்த இந்த நிகழ்வுகளைப்பற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று திட்டம் போட்டு எழுதினீர்களா?
நினைவுகுறிப்புகள் எழுத வேண்டும் என்று நினைத்து கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்கவில்லை சுசித்ரா. தொடங்கும்போது இசை பற்றி எழுதலாம், வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பு ஏதாவது பண்ணலாம் என்றுதான் நினைத்தேன். ஆரம்பத்திலிருந்து நான் ஒரு secondary writer மாதிரித்தான் என்ன உணர்ந்துகொண்டிருந்தேன். கிரியேட்டிவா செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வரவில்லை.
ஆனால்’ மரபிசையும் காவிரியும்’ எழுதிய பிறகுதான் ஜெயன் சொன்னார். “அருணா இது வேறொரு genre-ல் போகுது, இது ரொம்ப நல்லா இருக்கு, இந்த டிராக் நல்லா இருக்கு, இதுல போ,” என்று. அப்போது தளத்தில் வெளியிடுவதற்கு முன்னாலேயே உங்களுக்கும் அனுப்பினேன் அல்லவா? நீங்கள் எனக்கு ரொம்ப உற்சாகமா, ஆரவாரமான வரவேற்பு கொடுத்தீங்க. ஒரு நாவலோட முதல் அத்தியாயம் மாதிரி இருக்குன்னு சொன்னீங்க. எனக்குள்ள ஒரு நம்பிக்கையை விதைச்சது அது. அதுக்கப்புறம் தான் வலைத்தளம் தொடங்கலாம்னு இறங்கினேன்.
பிளாக தொடங்கி முதல் மூணு கட்டுரைகள போட்ட உடனே, சரி, நம்ம பரிணாம வளர்ச்சிய எழுதுவோம்னு நினைச்சேன். வாசிப்பு ரசனை, இசை ரசனை, எல்லாம் எப்படி வளர்ந்து வந்ததென்று சொல்வோம் என்று இறங்கினேன். அப்படி சொல்லி வரும்போதே, ஒரு அனுபவம் நினைவுக்கு வந்து, இதைச் சொல்லிப் பார்ப்போமே என்று வந்தது. அதைச் சொன்னவுடனே, சின்ன வயதை தொடக்கத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தேன். ஒவ்வொருத்தரும் கேரெக்டராக எனக்குள் வந்தார்கள். வில்ஃபுல்லா முன்னால திட்டம் போடல. பள்ளி நாட்கள பத்தி சொன்னதுமே மனோகர் சார், ஜோதி டீச்சர் வந்தாங்க. அத்தை வந்தார்கள். அத்தை பற்றிச்சொன்னதும் அத்தையின் நிச்சயம். கல்யாணம். அப்படியே பாட்டி, ராவுத்தர் மாமா என்று தன்னால் எல்லாரும் உள்ளே வந்தார்கள். நாம் ஒரு சின்ன வாசல்தான் திறக்கிறோம். அப்புறம் அங்கிருந்து தொறந்து தொறந்து ஒவ்வொண்ணா போய் பார்ப்பதுதான் அது. ஒண்ணு இன்னோண்ண பயங்கரமா கொக்கிப் போட்டு இழுத்துட்டு வந்திருச்சு. ஒரு நினைவு இன்னொரு நினைவ கிளறி விட்டிருச்சு. இவ்வளவு வரும்னு எனக்குத் தெரியாது. உண்மையில உள்ளுக்குள்ள இவ்வளவு இருக்குன்னு தெரியாது. எழுத எழுதத்தான் கிளம்பி வருது அது. என்ன சொல்ல? அது பயங்கரமான ஒரு பிராசஸ். எனக்கு இப்ப நினைச்சாலும் வியப்பா இருக்கு.
பெண்கள் அதிகமும் சிறுவயது நினைவுகள், குடும்ப வாழ்க்கைச் சித்திரங்கள்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அது ஒரு பொத்தாம்பொதுவான பார்வை. நான் இப்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் எழுதவருவதால் சிறுவயது நினைவுகளிலிருந்து தொடங்குகிறேன். அது இயல்பானதுதான். பெண்கள் என்று மட்டும் அப்படி சொல்லிவிடமுடியும் என்று தோன்றவில்லை. பெரும்பாலான ஆண் எழுத்தாளர்களை எடுங்க? சிறுவயது நினைவுகளை எழுதாதவங்க இருக்காங்களா? செகந்தராபாத் கதைகள் வழியா அசோகமித்திரன் சிறுவயதைத்தான் எழுதினார் இல்லையா?
தல்ஸ்தாய் கூட Childhood, Boyhood, Youth எழுதித்தான் எழுத வந்தார்.
ஆமாம். கொஸாக்குகள்ல வர்ர ஓலெனினும் போரும் அமைதியும்ல வர்ர ராஸ்டோவும் இளம் வயது தல்ஸ்தாய் தானே. சோனியா, மரியா எல்லாரும் அவருடைய அத்தைகள்தான். அதே மாதிரி தஞ்சை எழுத்தாளர்கள் பெரும்பாலும் பெண்கள் உலகத்தைத்தான் எழுதினாங்க. மோகமுள்ல இசையைப்பற்றி வருவதனால் ஒரு பொதுவான தளம் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி திஜாவினுடைய பின்னாள் கதைகளை எடுத்துக்கொண்டால் – செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே, எல்லாமே முழுக்க முழுக்க பெண்கள் உலகம் தான். அதில திஜா பேர எடுத்துட்டு ஒரு பெண் எழுத்தாளரோட பெயரைப்போட்டா அவங்க எழுதினா மாதிரிதான் இருக்கும், இல்லையா? லா.ச.ரா, கு.ப.ரா எல்லாரும் கூட அக்ரகார வாழ்க்கையத்தான் எழுதினாங்க, அதிலும் அதிகம் பெண்களப் பத்தித்தான் எழுதினாங்க, இல்லையா? அதனால இதை பெண்களுக்கு மட்டுமான குற்றச்சாட்டா வைக்கமுடியாதுன்னு நான் நினைக்கறேன்.
அப்புறம் முதன்முதல்ல எழுதவறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கை, அவன் வாழ்ந்த சூழல், இல்லையா? அதைத்தான் அவன் சொல்லியாகணும். எல்லாருமே பெரும்பாலும் ஒரு biographical novel-லத்தான் தொடங்கறாங்க. இதை எழுதுவது தான் இயல்பான பரிணாமமா இருக்குது. ஆனால் இங்கருந்து அடுத்த களத்துக்குப் போகணும், அதுதான் விஷயம்.
இதை விட்டு வித்தியாசமான களங்கள்ல எழுதற ஆண் எழுத்தாளர்களே ரொம்ப கம்மியாத்தான் இருந்திருக்காங்க. கிரா அவருடைய நாவல்கள்ல ஒரு பெரிய வாழ்க்கைச் சித்திரத்த காட்டியிருக்கிறார். யுவன் சந்திரசேகர் அவருடைய குள்ளச்சித்தன் சரித்திரம், வெளியேற்றம் போன்ற நாவல்ல ஒரு metaphysical பார்வைய முன்வைக்கிறார். சுரா எழுதிய புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ. சில குறிப்புகள் இரண்டுமே socio-political novels என்று சொல்லலாம். ஆனால் அவரே கூட கடைசி காலத்துல ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ எழுதினார். அது பியூர்லி ஒரு biographical நாவல்தான். முழுக்க முழுக்க அவருடைய இளமைக்கால நினைவுகள், அப்பா பத்திதான். சிவராம காரந்தோட மண்ணும் மனிதரும்ல வர்ர ராமன் காரந்தேதான். அதே மாதிரி ஒரு குடும்பம் சிதைகிறது நாவல்ல குடும்பம் மொத்தமும் இறந்து கடைசியா அந்த சாமியாரோட போற குட்டிப்பையன் பைரப்பாதான். ஆக தொடக்கமோ முடிவோ, எப்படியும் ஒரு ரைட்டர் இளமைக்காலத்துக்கு வந்து சேரறாங்க. இதில ஆண், பெண்ணுன்னுலாம் வித்தியாசம் ஒண்ணுமில்ல.
ஆனால் பெண்களும் வேறு களங்கள்ல எழுதணும்னுதான் நான் நினைக்கிறேன். குடும்பப்பிரச்சனைகள்ல உழன்றுகிட்டு, அதுக்குள்ள சுத்திச்சித்தி வர்ரது எனக்கு உவப்பானது கிடையாது. என்னுடைய ஆதர்சம் குரதுலைன் ஹைதர் மாதிரி எழுதுணும். எவ்வளவு விசாலமா எழுதினவங்க. அக்னி நதியில பௌத்தம், முகலாய காலம், பிரிட்டிஷ் காலகட்டம், பிரிவினைன்னு எவ்வளவு களங்களைத் தொடுவாங்க அவங்க. அந்த மாதிரித்தான் பெண்கள் முயற்சி பண்ணணும்னு நான் நினைப்பேன். அதுக்கு அவங்க படிப்பும் ஒண்ணு இருக்கு. குரதுலைன் ஹைதர் லக்னோவுல பெரிய குடும்பத்துல பிறந்தவங்க. நல்ல யூனிவர்சிட்டியில படிச்சவங்க, லண்டன் கேம்பிரிட்ஜில படிச்சுருக்காங்க. பெரிய வாய்ப்புகள் கிடைச்சவங்க. அதனால அவங்க உலகம் விரிஞ்சு பறந்து இருந்திருக்கு. பெண்கள் தங்கள குறுக்கிக்கக்கூடாதுன்னுதான் என் எண்ணம். அதுதான் என் ஆசையும் கூட.

‘ஜெயமோகனின் சாயல் சிறிதும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரைகள்‘ என்று பலரும் ஒரு பாராட்டாக சொல்லியிருக்கிறார்கள். உங்கள் எழுத்தில் ஜெயமோகனின் தாக்கம் இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த தாக்கத்தைத் தவிர்க்க நீங்கள் ஏதும் விசேஷமாக மெனக்கட்டீர்களா?
ஆமாம். அதை எல்லோரும் பாராட்டாக சொல்கிறார்கள். ஆனால் அதை நான் பிரக்ஞைப்பூர்வமாகத் தவிர்க்க விரும்பவில்லை. அதைப்பற்றி நான் மனதிற்குள் நினைப்பதும் இல்லை. அவருடைய மொழி பிரயோகங்கள், phrases, வெளிப்பாடு, அதை வேண்டுமென்றால் நான் தவிர்த்திருக்கலாம். மத்தப்படி ஜெயமோகன் எல்லாரையும் பாதிக்கும் அளவுக்கு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தோட நிழல்ல இருந்துகிட்டு அவரோட தாக்கம் சுத்தமா இல்லாம என்னால வர முடியாது, இல்லையா… அது ஏதாவது ஒரு வகையில் இருக்கும், பார்க்கமுடியாத விதத்துல இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் ஒன்று. இப்போது நான் சொல்லும் களம் ஒன்று இருக்கிறதில்லையா… அது ஜெயமோகன் எழுதியதிலிருந்து முற்றிலுமாகப் புதிய களன். தஞ்சை மண், அதனுடைய மனிதர்கள் வேறு, வாழ்க்கை வேறு, எங்களுக்குள் புழங்கிக்கொள்ளும் வார்த்தைகள் வேறு. குடும்ப அமைப்பிலுள்ள உறவுகளுடைய சிஸ்டம் வேறு. அவங்க இதுல அப்படிக் கிடையாது. ஜெயனின் புறப்பாடு, அனந்தன் கதைகள் எல்லாம் எடுத்துக்கிட்டா, அவங்க குடும்பத்துல நடக்குறதெல்லாம் பாருங்க. இப்ப ஜெயனுக்கும் அவங்க பாட்டிக்கும் உள்ள உறவு எனக்கும் என் பாட்டிக்கும் உள்ள உறவு மாதிரி இல்ல. அவங்க வேற மாதிரி பாட்டி. ரொம்ப பர்சனல் அட்டாச்மெண்ட் இல்லாத தனியா குடும்பத்தில் இருக்கக்கூடிய மெஜெஸ்டிக்கான பாட்டி. அவங்களுக்கு ஜெயன் பேரன், அவ்வளவுதான். ஒரு பர்சனல் உறவு இருக்குறமாதிரி சொல்லமாட்டாரில்ல. அப்புறம் அவங்க குடும்பம் இன்னும் கொஞ்சம் கூட விவசாயம் சார்ந்து இருக்காங்க. அதோடில்லாம குடும்பச்சூழல் இப்படி அமையல. குடும்பத்துக்குள்ள உட்காருறது, டிஸ்கஸ் பண்றது, அப்பா அம்மா குழந்தைகளோட பேசிக்கிறது. அவங்க வீட்ல பையன் சாப்பிட வந்திட்டானா, தூங்க வந்திட்டானா, அப்படி மட்டும்தான் கேப்பாங்க. இங்க அப்படி இல்ல. அந்த லைஃப்ஸ்டைல் வேற. ஆகவே நான் எழுதுறது எல்லாமே புதுசா தோணலாம் உங்களுக்கு.
அப்புறம் மொழி. நாம் சாம்ஸ்கி சொன்ன மாதிரி மொழி அப்படீங்குறது மொழி மாத்திரம் அல்ல. It is a way of expression. நீங்க ஒண்ண எப்படி சொல்றிங்க, எதை அடுக்கா வரிசைப்படுத்தறீங்க, ஒரு சூழலை வர்ணிக்கும்போது எத உங்க மனசு பிரதானப்படுத்துது, எல்லாமே மொழி தான். எந்த கூறுகளை எடுக்குது, அதை எப்படி அடுக்குது, அதை எப்படி வெளிப்படுத்துது. இந்த மூணுமே way of expression, மொழிதான் என்று சொல்றாரு. இப்படி ஒவ்வொரு மைண்டும் ஒவ்வொரு பேட்டர்ன்ல இருக்கும்னு நினைக்கிறேன். அவர் யோசிக்கிற மாதிரி நான் யோசிக்க மாட்டேன் இல்ல? இப்போ நாம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போறோம், ஒரு நிகழ்ச்சி நடக்குது, நாம பாக்குறோம், நாலஞ்சு வருஷம் கழிச்சு நாம ரெண்டு பேரும் அதை எழுதினோம்னா சுத்தமா வேற வேறாத்தானே இருக்கும்.
வெளிப்பாடுங்குறதுல, எதை எதை நம்ம மனசு உள்ள எடுக்குதுன்றது ஒண்ணு, எதை நாம் வெளிப்படுத்துகிறோம் என்பது ஒன்று. ஒவ்வொரு கிரியேட்டிவ் மைண்டும் இந்த விஷயத்துல வேற வேற மாதிரித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு ஜாலி கேள்வி… ஒரே வீட்டில் இரண்டு எழுத்தாளர்களாக வாழ்வது எப்படி இருக்கிறது?
[கலகலவென்று சிரிப்பு] ஆமாம் சுசித்ரா. என்ன சொல்ல? நீங்க ஜாலி கேள்வின்னு கேட்டீங்க இல்ல? எனக்கு செம்ம ஜாலியா இருக்கு. உண்மையிலேயே ரொம்ப கலகலப்பா இருக்கு. சாதாரணமாவே நாங்க ரொம்ப ரொமாண்ட்டிக்கான கப்பிள்தான். ஆனா இப்ப எழுத ஆரம்பிச்சத்திலெருந்து ரொமான்ஸ் கொஞ்சம் கூடுதலா போயிடுச்சு [சிரிப்பு] அது ஏன்னா, அவர் பார்க்காத ஒரு முகம் இதுல இருக்குல்ல? இதுவரைக்கும் இவள எங்க ஒளிச்சு வச்சிருந்தான்னு ஒரு இது. நாம பார்த்ததுல இவள இதுவரைக்கும் காணுமே, இப்ப எந்திரிச்சு வாராளே புதுசா ஒருத்தி, அப்படி நினைப்பாரில்ல?
பொதுவாவே செம ஜாலியா இருப்பேன் வீட்ல. ஒரே டான்ஸ், பாட்டுன்னு குதிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன். அஜி கூட சொல்வான், சரியான பந்து மாதிரி இருக்கம்மான்னு. எந்தக் கவலையும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மேல எனக்கு நீடிக்காது. நான் கவலையெல்லாம் ரொம்ப மனசுக்குள்ள எடுத்துக்கற ஆளெல்லாம் கிடையாது. சாதாரணமாவே மகிழ்ச்சியா இருக்குற தருணங்களை நானே உருவாக்கிக்குவேன்.
அப்படி இருக்கும்போது இதை எழுத ஆரம்பிச்சபோது வாழ்க்கை உண்மையிலேயே இன்னும் வண்ணமயமாயிடிச்சு. ரொம்ப ரொம்ப கலர்ஃபுல்லா… இந்த வயசானவங்க கேட்டராக்ட் பண்ணிக்கிட்ட பிறகு, உலகம் இன்னும் கொஞ்சம் பிரகாசமானதுபோல் இருக்குன்னு சொல்வாங்கல்ல, அந்த மாதிரி. இன்னும் கொஞ்சம் ஜாலியா.
நான் எப்பவுமே enthusiastic-ஆக இருக்குறது அவருக்குப் பிடிக்கும். இப்ப அவருக்கு என்ன பார்க்கும்போதெல்லாம் ஹேப்பினெஸ் கூடுது, செம்ம ஹேப்பியா இருக்கோம் ரெண்டு பேரும். பலவித திட்டங்கள போடுறது, இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றது, டௌட்ஸ் கேக்குறது, நான் எழுதறப்ப இப்படி ஆயிட்டேன், எனக்கு தானா வருதுன்னு என்னோட பரவசங்கள பகிர்ந்த்துகிறது, அதெல்லாமே சந்தோஷம்தான்.
சின்ன வயது அருண்மொழி புதிய புதிய அனுபவங்களுக்கு அறிதல்களுக்கு வேட்கைகொண்டவளாக, உற்சாகமானவளாக இருந்திருக்கிறாள். உங்கள் வாழ்க்கையில் அந்த அறிதல் ஆசையெல்லாம் நிறைவேறியதென்று சொல்வீர்களா?
[சிரிப்பு] ஆமா, சின்ன வயசு அருண்மொழி ஒரு firebrand தான். அந்த அறிதல்வேட்கையெல்லாம் இருந்துக்கிட்டுத்தான் இருக்கு, இல்லாம போகல. எனக்கு எப்படின்னா, ஜெயன கல்யாணம் பண்ணத்துக்கு அப்பறமே, அவ்வளவு புத்தகங்கள் அறிமுகமாயிடுச்சி. அப்புறம் பக்கத்திலேயே ஒரு ஆசிரியர வைச்சுக்கிட்டு நான் இருந்திருக்கேன். எல்லா வித சந்தேகங்களையும் நான் கேட்டுப்பேன், எல்லாத்துக்கும் எனக்கு பதில் கிடைச்சுடும்.
நான் 1991 தொடங்கி 1998 வரைக்கும் பயங்கரமா படிச்சேன். விட்டு வந்த இடத்துலதான் எழுதியிருப்பேனே. ரஷ்ய இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், இந்திய இலக்கியம், எல்லாத்தையும் படிச்சேன். நீங்க சொல்ற வேட்கை, தேடல் எல்லாமே அதில satisfy ஆயிடிச்சு. வேட்கைன்னா என்ன, உலகத்தை அறிஞ்சிக்கற வேட்கை புத்தகம் மூலமா தீந்திரும் இல்ல?
அப்புறம் ஜெயன் பயணத்தை ரொம்ப விரும்பக்கூடியவர். எனக்கும் பயணங்கள் ரொம்ப பிடிக்கும். பலவிதமான புதிய அனுபவங்கள் பிடிக்கும். அவர் போற இடத்துக்கெல்லாம் நானும் பயணம் போனேன். அப்பறம் வெளிநாட்டு பயணம். 2006 தொடங்கி நாங்க வெளிநாட்டுப் பயணம் போக ஆரம்பிச்சோம். ஒரு ரெண்டு மூணு பயணத்திலத்தான் என்ன விட்டுட்டு போயிருப்பாரு. ரொம்ப தவிர்க்கமுடியாத சூழல்ல நான் வரலன்னு சொன்னபோது மட்டும். மத்தபடி எல்லா பயணங்கள்லயும் என்ன கூட்டிட்டு போயிருக்காரு. அது எல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு. அந்த அனுபவங்கள் எதையுமே நான் மிஸ் பண்ணதில்ல. அதனால ஓரளவு எல்லாமே satisfy ஆயிடுச்சுன்னுதான் சொல்லணும். ஒரு நிறைவான வாழ்க்கை தான். அதுக்கு மேல என்ன இருக்கு?
‘கண்ணீரும் கனவும்‘ பதிவில், வணிக இலக்கியத்திலிருந்து சீரிய இலக்கியத்திற்கு நீங்கள் வந்து சேர்ந்த பாதையை விவரிக்கிறீர்கள். ‘வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. கதையும் இப்படியல்லவா இருக்கவேண்டும்‘ என்று உணர்ந்ததைக் கூறுகிறீர்கள். அந்த காலத்தில் உங்களுக்குள் வாழ்க்கையை பற்றிய கேள்விகள், குழப்பங்கள், தேடல்கள் இருந்தனவா?
சின்ன வயசிலிருந்தே நான் சூழல ரொம்ப உள்வாங்குவேன். மனிதர்கள விரும்பி கவனிப்பேன். நிறைய பெரியவங்க குழந்தைகள பொருட்படுத்தவே மாட்டாங்க. குழந்தைகளுக்கு ரொம்ப சென்சிபிளானா ஒரு மைண்ட். மனுஷங்களோட போலித்தனங்களெல்லாம் ஊடுருவிப் பார்த்திடும். அப்படி மனிதர்களை பார்த்துப் பார்த்து நான் பழகினேன்.
பதினாலு வயசுல ஆலத்தூரிலிருந்து மதுக்கூரிலும் பட்டுக்கோட்டையிலும் என்னைத்தூக்கிப் போட்டது கடல் தண்ணீரிலிருந்து மீனை வெளியே தூக்கிப்போட்டது மாதிரி இருந்தது. மதுக்கூரில் ஒரு கிராமத்தன்மையே இல்லை. கசகசவென்று, ஒரு விரிந்த தன்மை இல்லாத ஊர் அது. மாலையானா மனைவிகளை தெருவில இழுத்து போட்டு அடிக்கும் குடிகார கணவன்மார்கள் எங்கள் வீட்டு எதிரிலேயே குடியிருந்தார்கள். வாழ்க்கையோட harsh reality பலதும் நான் கண்முன்னால பார்த்தேன். ஆனால் கதைகள் வேறெதையோ ஒன்றை பேசிக்கொண்டிருந்தன.
அப்போது புனைவிலிருந்து கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்தேன். இந்துமதி, சிவசங்கரி, வாசந்தி போன்றவர்களிடமிருந்து ஒரு தூரம் உருவானது. அப்புறம் பாலகுமாரன் பெரிய சலிப்பைக் கொடுத்தார். கல்லூரியில அசோகமித்திரனை படித்த பிறகு தான் மீண்டும் புனைவுக்குள் தீவிரமாக வந்தேன். ஒரு சின்ன மிடில் கிளாஸ் லைஃப்ல இவ்வளவு வெரைட்டி காண்பிக்குறது, அதை அத்தனை நுட்பமாக, குறைந்த வார்த்தைகளில் சொல்கிறார் என்று பயங்கர ஈர்ப்பாக இருந்தது.
அதுவரை சோவியத் புத்தகங்களை நிறைய படித்தேன். ரஷ்யாவில் இப்படி புரட்சி நடந்திருக்கிறதே, மொத்த சமுதாயத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறதே, அப்படி நமக்கும் நடக்கும், இங்கும் ஏழை-பணக்காரன் வித்தியாசம் அழியும் என்று நம்பினேன்.
தத்துவார்த்தமான கேள்விகள் இருந்ததா?
இல்ல, அப்போதைக்கு எனக்கு அந்த மாதிரி தேடல்கள் இல்ல. பாட்டி வழியாக கடவுள் என்ற கான்செப்ட் எனக்கு அறிமுகமாயிருந்தது. அதே சமயம் அறிவியலை ரொம்ப நம்பினேன். குறிப்பாக சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’ எனக்கு பெரிய வழிக்காட்டி.
அதன் பிறகுதானே நவீன இலக்கியம் அறிமுகம் ஆனது? சீரிய இலக்கியக்காரர்கள் ஒரு குறுங்குழுவாக, நக்சலைட் போல, தலைமறைவாக இயங்கியவர்களெனச் சொல்லியிருப்பீர்கள்.
அது அந்த காலகட்டத்தின் நிலைமை என்று நினைக்கிறேன். அப்போது நிகழ், கல்குதிரை மாதிரியான சிறுபத்திரிகைகள் வெறும் 300 பிரதிகள் அச்சிடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் தொகை அப்போது 8 கோடி இருத்திருக்கலாம். அதில் 300 பிரதியென்றால் நான் நினைத்தது கிட்டத்தட்ட உண்மைதானே? குறுங்குழுதானே? [சிரிப்பு] சுஜாதா தப்பித்தவறி வெகுஜனப் பத்திரிக்கை எதிலோ அசோகமித்திரனை பற்றி வாய்விட்டதனால் நான் கேள்விப்பட்டேன்.
ஆனால் 1990ல், நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே, இந்த நிலைமை மாறியது. ஐராவதம் மகாதேவன் தினமணியின் ஆசிரியராக பொறுப்பேற்ற உடனேயே தமிழ்மணி என்று ஒரு சப்லிமெண்ட் கொண்டு வந்தார். அதில் தான் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி கட்டுரைகளை படித்தேன்.
அப்புறம் ‘91-ல் சுபமங்களா ஆரம்பித்தார்கள். அது ஒரு இடைநிலை இதழ். எல்லா தீவிர எழுத்தாளர்களோட பேட்டியும் அதில் வந்தன. அது வரை ‘சுந்தர ராமசாமி’ என்ற பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு அவருடைய முழு பேட்டியையும் கண்டது எவ்வளவு பரவசத்தை தந்திருக்கும் என்று உங்களுக்குப் புரியலாம்.
அப்போது சுஜாதா ஒரு நல்ல பணியை ஆற்றினார். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் எதில் எழுதினாலும் இந்த சீரியஸ் ரைட்டர்ஸ பத்தின ஒரு லைன் எழுதுவார். ‘அசோகமித்திரன் கணையாழியில்’ அப்படின்னு ஒரு வரி எழுதுவார். நல்லா படிக்குற வாசகனுக்கு கணையாழின்னா என்னன்னு ஆர்வம் வரும்.
பெண்களுக்கு சீரியஸ் இலக்கியம் அறிமுகமாக தடைகள் இருந்ததா நினைச்சீங்களா?
பெண்கள்ன்னு இல்ல, நான் வாசித்த காலத்தில் ஆண் வாசகர்கள் இருந்தாலும் இதே பாடு பட்டுத்தான் உள்ளே நுழைந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பொதுவா அப்போ இருந்த டிரெண்டே அப்படித்தான். மூடி மறைச்சு, அட்ரெஸ் கண்டுபிடிச்சு, சந்தா கட்டி, அந்த இதழ வரவழைக்குற ஒரு தன்மைதான் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது கணையாழி, நிகழ், முன்றில், கனவு, கல்குதிரை இவ்வளவுக்கும் நான் சந்தா கட்டிக்கிட்டிருந்தேன்.

மார்க்ஸ், ஜெபி, ராமகிருஷ்ண ஹெக்டே, மொரார்ஜி தேசாய் எல்லாருமே உங்களுக்கு பிடித்த அரசியல் நாயகர்களாக இருந்திருக்கிறார்கள். உங்களுக்கு நிறைய அரசியல் கவனிப்பு அந்த வயதில் இருந்ததென்றே தெரிகிறது. ‘தீ போல் எரிந்து கொண்டிருந்த அந்த அருண்மொழியின் பரிசுத்தமான இலட்சியவாதம் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பும் கூடÓ என்று ‘சின்னச் சின்ன புரட்சிகள்‘ கட்டுரையில் எழுதியிருக்கிறீர்கள். இன்று உங்களிடம் அந்த லட்சியவாதம் இருக்கிறதா?
அது ஒரு காலகட்டத்தோட பிரதிபலிப்புன்னுதான் எனக்குத் தோணுது. எல்லா மனுஷங்களும் சமமா, ஏற்றத்தாழ்வில்லாம இருக்குற ஒரு சமூகம்ன்னா அது ஒரு பெரிய கனவுதான், இல்லையா? அப்போது அதற்கு உவப்பா இருந்த ஒரே தியரி சோசியலிசம், கம்யூனிசம் தான். ஆகவே இயல்பாவே இப்படிப்பட்ட கனவிருந்த அனைவரும் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள். அந்த அலையில் நானும் அடித்துச்செல்லப்பட்டேன். என் வயசும் அதற்கு ஒரு காரணம்.
பிறகு கிழக்கைரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிலும் படிப்படியாக கம்யூனிச ஆட்சிகள் விழுந்தன. இறுதியாக ரஷ்யாவும் சிதறுதேங்காய் மாதிரி சிதறி உடைந்தது. அந்த நிதர்சனத்தைப் பார்த்தேன். அப்புறம் வயதாக ஒரு முதிர்ச்சியும் வந்தது. எந்த ஒரு சித்தாந்தமும் உலகத்தை அப்படியே நெம்புகோல் வச்சு திருப்பற மாதிரி புரட்டிப்போட முடியாது என்கிற பட்டறிவு நமக்கு கொஞ்சம் காலம் பிந்தித்தான் கிடைக்கிறது. குறிப்பா இது எந்தளவுக்கு வன்முறையில போய் முடியுது, எத்தனைப்பேர காவு வாங்கியிருக்கு என்றெல்லாம் யோசிக்கும்போது நம் நம்பிக்கை குறையத்தொடங்குகிறது. அதுக்குன்னு இலட்சியவாதமே இல்லாமல் இருக்கவும் முடியாது.
இன்று என்னிடம் அப்போதுபோல் தூய்மையான கனவுத்தன்மை வாய்ந்த இலட்சியவாதம் இல்லையே ஒழிய, என் மனதில் வேறொரு இலட்சியவாதத்தை நம்பிக்கொண்டுதான் இருக்கிறேன். இலட்சியவாதம் என்பதைவிட, நேர்மறைவாதம் என்று அதைச் சொல்லலாம். ஹியூமானிட்டி போற பாதை மேல் ஒரு தீர்க்கமான நம்பிக்கை இருக்கிறது எனக்கு. போர், பஞ்சம், நோய், பேரழிவு, எவ்வளவோ வந்தாலும் மனிதகுலம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். அந்த நேர்மறைத்தன்மையே ஒரு இலட்சியவாதம்தானே…
சின்ன வயசுல அப்பா சொல்லி நிறைய அரசியல கவனிச்சேன். பிறகு நரசிம்மராவ் காலத்துக்கப்புறம் நடந்த ஊழல்கள், பேரங்கள் எல்லாமே அரசியல் மேல பெரிய சலிப்ப கொடுத்துச்சு. எத்தனையோ இசங்கள் பரிசீலிக்கப்பட்டிருச்சு. மத அதிகாரத்த கையில எடுத்துக்கிட்ட அரசுகள், சர்வாதிகார அரசுகள், கம்யூனிசம், முதலாளித்துவம்… சீனாவுல இருந்தது போல ஒரு ரிஜிட் கம்யூனிசம். அங்க என்ன நடக்குதுன்னு இப்பத்தான் கொஞ்சம் திரை விலகி தெரிய வருது. அமெரிக்காவுல முதலாளித்துவ அரசு. அமெரிக்காவோட அதிகாரத்த ஒரு பத்து மல்டிநேஷனல் கையில வச்சிருப்பானா? நமக்கு தெரியுறது ஜோ பைடனோட முகம் தான? அந்த மாதிரி எவ்வளவோ பார்த்தாச்சு.
இப்ப என்ன தோணுதுன்னா, இன்று உலகத்துக்குத் தேவை நடைமுறை இலட்சியவாதம். அதிலே சிறந்த வடிவம் ஜனநாயகம்தான்னு நினைக்கிறேன். தோல்வியோ வெற்றியோ. பேச்சுவார்த்தை நடந்துகிட்டே இருக்க அதுதான் வழி. அதிலும் காந்தி கனவு கண்ட சமூகம்தான் நம் இலட்சியவாதமாக இருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. அதிகாரம் மையமாகவே கூடாது. கிராமங்கள்ல கூட அதிகாரத்த பிரிச்சுக்கொடுன்னு சொல்றாரில்ல? ஒரு மையத்துல அதிகாரம் குவியவே கூடாது.
அப்பா திராவிட இயக்கத்தில் இருந்தார், ஆகவே சின்ன வயதில் கடவுள் வழிபாடு, பண்டிகைகள் என்று பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் வெண்முரசு பற்றி நீங்கள் அளித்த பேட்டியின் நிறைவில் எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த பரிணாமம் எப்படி நிகழ்ந்தது? கடவுள் அப்போது உங்களுக்கு என்னவாக பொருள்பட்டது? இப்போது?
அப்பா தீவிரமான, மூர்க்கமான நாத்திகராக இருந்தார். எங்கள் வீட்டில் கடவுள் உருவம் இருக்காது, குத்துவிளக்குக்கூட இருக்காது. தீபாவளி கொண்டாட மாட்டோம் என்பதால் அந்த நாட்களில் அழுதுவடியும் எங்கள் வீட்டில். ஆனால் ராஜம்மா பாட்டியுடன் திருவிழா, கோயில் எல்லாவற்றுக்கும் போவேன். அந்தப்பக்கம், புள்ளமங்கலம் பாட்டி வீட்டுக்குப் போகும்போது ஏப்ரல், மே மாதங்களில் எல்லா குலதெய்வங்களுக்கும் கொடை நடக்கும். திருவாரூர் போனால் வீதிவிடங்கர் ஆலயம், கமலாலயம், எல்லாம் போவோம். தேரோட்டம் பார்ப்போம். அதெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையில் நிறைய இழக்கிறோம் என்று எனக்குத் தோன்றும். சின்ன வயசு அருணா அனுபவத்துக்காக ரொம்ப ஏங்கறவன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அப்பான்னால இவ்வளவு மிஸ் பண்றோமேன்னு இருக்கும். அப்படிப்பார்க்கும்போது, கடவுள் இல்லன்னு சொல்றாங்க பாத்திங்களா? அவங்க பிள்ளைங்களுக்கு கொடுக்காம விடுறது கடவுள்ன்ற கொள்கைய மட்டுமில்ல… இந்த ஹேப்பினெஸ், இந்த வண்ணமயமான உலகத்த குழந்தைங்களுக்கு இல்லாம பண்ணிடறாங்க. திருவிழான்னா கோயிலுக்கு போகுறது மட்டும்தான் திருவிழாவா? அது சொந்தமும் சமூகமும் சேர்ந்து அனுபவிக்கற ஒரு பெரிய கொண்டாட்டம் இல்லையா. அது ஒரு பெரிய இழப்புதான். அதை நான் அப்பவே உணர்ந்தேன்.
அதனால, வளர வளர எனக்கு பக்தி ஜாஸ்தியாய்டிச்சு. அப்பா என்ன சொல்றாங்களோ, அதுக்கு நேர்மாறா நடந்துக்கணும்னு இருந்துச்சுபோல. ஒரு வயசுக்கப்புறம் அப்பாவ மறுதலிப்போமில்ல… அப்பா எனக்கு எவ்வளவோ சொல்லிக்கொடுத்திருக்காங்க, லாஜிக்கலா எல்லாத்துக்கும் பதில் சொல்வாங்க. ஆனால் இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் அப்பாவ என் மனசுக்குள்ள நான் மறுதலிச்சேன். மதுரைல கல்லூரிக்குபோன உடனே மாசத்துக்கு இரண்டு முறை மீனாட்சி கோயில் போயிடுவேன். எனக்கு அந்தக்கோயில் அவ்வளவு பிடிக்கும். இழந்ததையெல்லாம் திரும்ப பெறணும்னு வெறியோட இருந்தேன்.
கல்யாணமானதும் சொல்லவே வேண்டாம். ஜெயன் பக்திமான்ல்லாம் இல்ல, ஆனால் கலை அனுபவத்தைத் தரக்கூடிய கோயில்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் பிறந்து வளர வளர எல்லா பண்டிகைகளையும் கிராண்டா கொண்டாடுவோம். எதெல்லாம் செய்யாம சின்னபிள்ளையில நான் இழந்தேனோ எல்லாமே என் பிள்ளைங்களுக்கு கொடுக்கணும்னு நினைச்சேன்.
ஆனால் கடவுள்ன்ற கான்செப்ட் மாறியிருக்கு. சிவன், விஷ்ணு, முருகன் எல்லாமே நாம கொடுக்கற உருவம்தானே? எனக்கு குமாரகோயில் முருகன் செண்டிமெண்டா பிடிச்சுப்போன கடவுள். என் கல்யாணம் அங்கத்தான் நடந்தது. பிள்ளங்களுக்கு எல்லா சடங்கும் அங்கத்தான் செஞ்சோம். இப்பக்கூட நினைச்சா அங்க போயிருவேன். ஆனால் அது முருகன்தானான்னா, இல்ல. அந்த அனுபவத்த மனசு இழக்க விரும்பல. அதுக்கு முருகன்னு ஒரு உருவத்த கொடுத்துக்குது.
அப்புறம், இப்பக்கேட்டா இந்துமதம் சொல்ற பிரம்மம்ற கோட்பாட்டை நான் ரொம்ப நம்பறேன். இந்துமதம் சொல்ற பிரம்மமும், பௌத்தம் சொல்ற மகாதம்மமும் மற்ற மதங்கள் சொல்ற ஒரே இறையும் ஒண்ணு தான்னு தோணுது. ஒரு great cosmic order இருக்குன்னுதான் தோணுது. அப்படி மாபெரும் நியதி ஒண்ணுதான் இந்த பிரபஞ்சத்த ஒருங்கிணைவோட, ஒத்திசைவோட, ஒழுங்கமைவோட இயக்குதுன்னு நம்பறேன்.
இப்ப நாம பேசிக்கிட்டு வர்ரப்ப ஒண்ணு தோணுது. உங்களுக்கும் உங்க அப்பாவுக்குமான உறவு ரொம்ப தனித்துவமான ஒண்ணு அப்படீன்னு. கட்டுரைகள் வழியாகவே உருவாகுற சித்திரம் அது. உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்குமான உறவு எப்படிப்பட்டது?
ஒரு love-hate relationship – ன்னு வெச்சுக்குங்களேன். சின்ன பிள்ளையா இருக்கும்போது பயங்கர அட்மிரேஷனோட பாப்பேன். அப்பாவுக்கு எல்லாத்த பத்தியும் தெரியும். ஒரு சபையில அவரோட கருத்துதான் ஸ்தாபிக்குற மாதிரி நிக்கும். அப்போல்லாம் ஆகா, நம்ம அப்பா, அப்படீன்னு இருக்கும். ஒரு எட்டாவது ஒன்பதாவது படிக்குறப்பதான் அப்பாவுக்கு இருக்குறது கொஞ்சம் பழமையான பார்வைன்னு தோண ஆரம்பிச்சது. அப்புறம் திராவிட அரசியல் அப்பா மேல ரொம்ப தாக்கத்த ஏற்படுத்திச்சு. ஒரு குறிப்பிட்ட சமூகத்துமேல வெறுப்ப வளத்துக்குறது, கடவுள் மறுப்பு, இதெல்லாம் சின்ன ஒரு நெருடல உருவாக்கிச்சு. அதெல்லாம் நான் விவாதிச்சிட்டே இருப்பேன். ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பிரியம் இருந்துகிட்டே இருக்கும். பிரியத்துக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.
ஒரு 35-40 வயசு ஆனத்துக்கப்புறம்தான் நம்ம அப்பா நமக்கு என்ன கொடுத்திருக்கார்ன்னு தொகுத்துக்க ஆரம்பிக்கிறோம். என் வயசுக்காரங்களோட அப்பாக்களவிட எங்க அப்பா ரொம்ப லிபரலான ஒருத்தராவே இருந்திருக்கிறார். ஏழாவதிலேயே சைக்கிள் கத்துக்க சொன்னார். ஒன்பதாவதிலேயே டூ வீலர் ஓட்டுவேன். எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க. இப்ப அதெல்லாம் உங்களுக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் 80-கள்ல கிராமத்துல அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அப்பா அந்த மாதிரி எல்லாத்திலெயுமே ஃபார்வர்டா தான் யோசிப்பாங்க. பொம்பள பிள்ளைன்னா தனியா போகணும், வரணும், எல்லா விஷயங்களிலேயும் ஈடுபடனும், தனியா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும்னு நினைப்பாரு. அப்படித்தான் என்ன வளத்தாங்க. அதனால இப்ப வரைக்கும் யாரோட பழகுறதுக்கும் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்ல. என் ஆளுமையிலேயே அந்த போல்ட்னெஸ் இருக்கு. அது அப்பா மூலமா வந்ததுதான்.
உங்கள் கட்டுரைகளில் தஞ்சை மண்ணின் வாழ்க்கை, பேச்சு, எல்லாம் இடம்பெறுகிறது. ஒரு பெரிய காலமாற்றின் சாட்சிப்போல உள்ளன உங்கள் கட்டுரைகள். திருமணமான பிறகு நீங்கள் அந்த நிலத்தை விட்டு வந்துவிட்டீர்கள். இன்று உங்கள் பார்வையில் அந்த நிலம் எப்படி இருக்கிறது?
நான் என் கட்டுரைகளில் 70கள்–80கள் காலக்கட்டத்தைத்தானே எழுதுகிறேன்? அப்போது பழைய தஞ்சை மாவட்டம் இப்போது போல மூன்று மாவட்டங்களாக [தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்] பிரிக்கப்படவில்லை. அதில் இரண்டு வகைப்பாடு சொல்லப்பட்டது. கீழத்தஞ்சை, மேலத்தஞ்சை. கீழத்தஞ்சை முழுக்கமுழுக்க டெல்டா பகுதி. கிழக்குப்பக்கம் உள்ள தஞ்சை, கடற்கரையை ஒட்டியுள்ள தஞ்சை. மன்னார்குடி, கும்பகோணம், நன்னிலம், வேதாரண்யம், வேளாங்கன்னி, எல்லாமே கீழத்தஞ்சை. மேலத்தஞ்சை என்பது நான் இப்போது எழுதும் பகுதி. ஆலத்தூர், பட்டுக்கோட்டை, ஊருணிபுரம், திருவோணம், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை. கீழத்தஞ்சையை விட மேலத்தஞ்சை கொஞ்சம் கூட வறண்டபகுதி என்று கருதப்பட்டது.
அப்போது இருந்த தஞ்சை இப்போது இல்லைதான். நான் சொல்லும் காலகட்டம் மிகவும் வளமான ஒரு பீரியட். காவிரி பொய்யா நதியா ஓடிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் 1995-96 வாக்கில் நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் முடிந்து நிலைமை மாறியது. எப்போதும் போல காவிரியில் தண்ணீர் வராமல் ஆனது. விடுவதில் முறை வைத்தார்கள். பாதி நேரம் தண்ணீர் வந்தாலும் தாமதமாகவே வரும். நிறைய பிரச்சனைகள். தஞ்சை மாவட்டத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது. எந்த ஒரு கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்துவது தண்ணீர்தான். நதிதான். காவிரி பிரச்சனை வந்த பிறகு நான் கண்ட தஞ்சையே வேறு.
அதன் பிறகு குறுவைக்கு மட்டும் தான் தண்ணீர் வரும். முன்னால மூன்று போகம் விளைந்த மண் அது. குறுவை, சம்பா, தாளடின்னு சொல்வாங்க. குறுவைன்னா குறுகியக்கால பயிர். மூன்று மாதம். சம்பான்னா அடுத்தக்கால பயிர். நாலரை மாதம் போகும். தாளடின்னா தாள்-அடி – வைக்கோல அறுத்த பிறகு ஒரு சாண் அப்படியே இருக்கும். அது மேல உளுந்து, பயறு தெளிப்பாங்க. இதுதான் சிஸ்டம். அல்லது நெல் போடாதவங்க கரும்பு போடுவாங்க. பருத்தி போடுவாங்க. நான் பார்த்த காலத்துல மண்ண இப்படி முப்போகம் விளைய வைப்பாங்க.
95-96க்கு பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் வயல்கள் பாதி தரிசாகத்தான் கிடக்கும். விவசாயத்தை கைவிட்டவங்க பாதி உண்டு. நிலத்துல வருமானம் வராம வித்துட்டு ஃபாரின் போனவங்க பாதி உண்டு. குறுவிவசாயிங்க நிலத்த வித்துட்டு கூலிகளா போனதையும் கேள்வி பட்டிருக்கேன். இன்று கீழத்தஞ்சை தமிழ்நாட்டிலேயே மிகவும் வறுமை நிறைந்த ஒரு பகுதி என்று சொல்லலாம். அந்த பழைய செழுமையெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. நான் மரபிசையும் காவிரியும்ல சொல்வேன்ல, மூங்கில்கள் நிறைந்த பாதைகளெல்லாம், இப்ப கருவேலம் ஆக்கிரமிச்சிருக்கு. பார்க்கவே பகீர்ன்னு இருக்கும்.
இந்த மாற்றம் தண்ணியால மட்டும் தானா?
தண்ணியாலன்னு நான் யூகிக்கிறேன். ஆனால் இன்னும் சமூகப்பொருளியல் காரணிகள் இருக்கலாம்.
ஆனால் 2017-18 போல நிலைமை கொஞ்சம் மாறியதுபோல் தோன்றியது. அப்போது அம்மாவை தஞ்சாவூரில் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஏழெட்டு நாள் போய்வந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு பக்கம் காவிரி தண்ணீருடன் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மறுபக்கம் குளங்களெல்லாம் தூர்வாரி, கரையெல்லாம் உயர்த்தி நல்ல நிலமையில் இருந்தது. அது மனசுக்குச் சந்தோஷமா இருந்தது.
தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்ததால் இயல்பாக மரபிசை அறிமுகம் உங்களுக்கு கிடைத்ததைப்பற்றி எழுதியுள்ளீர்கள். நிறைய இசை கேட்பீர்களா? இசையில் பயிற்சி உண்டா?
கண்டிப்பா இசையில எனக்கு பயிற்சி கிடையாது. சின்ன வயசுல ரொம்ப ஆசை இருந்தது, பாட்டு கத்துக்கணும்னு. ஆனால் பதினாலு வயசு வரைக்கும் அட்ட கிராமத்துல இருந்தேன். அங்க பாட்டு சொல்லித்தர்ரவங்க யாருமே கிடையாது. அதனால அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல. அப்பாகிட்ட அடிக்கடி சொல்வேன் நான். அப்பா என்ன கர்ணாட்டிக் மியூசிக் படிக்கவெச்சிருக்கலாமில்ல, நான் நல்லா பாடுவேன்ல்ல? அப்படீன்னு. அது ஒரு சின்ன ஏக்கம் எனக்கு உண்டு எப்பவுமே.
ரசனை எனக்கு குஞ்சிதய்யர் மூலமாகவே விதைக்கப்பட்டிருந்தது, எழுதியிருக்கிறேனே. ஆனால் முறைப்படி கேட்க பழகியது எப்போதுன்னா, கல்யாணத்துக்கு பிறகுதான். அதுவரைக்கும் டேப் கூட எங்களுக்கு பெரிய விஷயம்தான். ரேடியோ வந்ததும் அரங்கிசை கேட்பேன். பிறகு டேப் வாங்கி கேட்டோம், நானும் ஜெயனும். ‘மலையில் பிறப்பது’ கட்டுரையில எழுதியிருப்பேனே. அப்போ நாங்க தர்மபுரியிலிருந்து இங்க பத்மநாபபுரத்துக்கு மாற்றலாகி வந்திருந்தோம். அவ்வளவு கலெக்ஷன்ஸ்… காசெட்டே ஒரு 70-80, அப்புறம் சீடிக்கு மாறினப்பிறகு சீடி வாங்கினோம். அப்புறம் வேலைப்பளு கூடியபோது இசை கேட்பது கொஞ்சம் குறைந்தது. அடுக்களையில் வேலை பார்க்கும்போது பின்னால் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கென்றே உட்கார்ந்து கேட்க நேரமில்லாமல் போனது.
சமீபத்தில் ரொம்பவும் தீவிரமாக கேட்டது இந்த கொரோனா காலகட்டத்தில்தான். ஜெயன் வெண்முரசு முடித்தபோது பயங்கரமான வெறுமையான கொந்தளிப்பான ஒரு மனநிலைக்குப் போனேன். அப்போது மிகத்தீவிரமாக இசைக்குள் நுழைந்தேன். கர்னாட்டிக்கிலிருந்து ஹிந்துஸ்தானிக்கு போனேன். அப்போதுதான் கிஷோரி அமோன்கார் எல்லாம் கேட்டது. படே குலாம் அலிகான், பண்டிட் வெங்கடேஷ் குமார்… அந்த ஜூலையிலிருந்து டிசம்பர் வரைக்கும். பித்து பிடிச்ச மாதிரி ஒரு ஆறு மாசம் கேட்டேன். அப்போது தான் எழுத்துக்கான உத்வேகமும் வந்தது. மரபிசையும் காவிரியும் எழுதினேன்.
கடந்த ஏப்ரல் மாதம் உங்கள் தம்பி, உங்கள் கட்டுரைகளில் சின்னப்பையனாக இடம்பெறும் லெனின் கண்ணன் இறந்துபோனார் என்று அறிகிறோம். அந்த பேரிழப்பின் பின்னணியில் இந்தக் கட்டுரைகள் இன்னும் கனம்கொள்கின்றன.
ஆம், என் தம்பி லெனின் கண்ணன் சமீபத்தில் மறைந்தான். அதை நான் கட்டுரைகளில் சேர்க்கவில்லை. ஏன் சேர்க்கவில்லை என்றால், நினைவுக்குறிப்புகள்ல பால்யகாலத்தத்தான எழுதறேன். தற்போது நடப்பதை அங்கே கொண்டு போய் வைக்கவேண்டாம் என்று நினைத்தேன். அதில வர்ர தம்பி சிரிச்சுட்டிருக்கற ஒரு பையன். பால் வடியுற முகத்தோட இருப்பான். யசோதை கட்டுரையில ஒரு கிரிட்டிக்கல் ஸ்டேட்ல போயிட்டு மீண்டு வருவான்ல? அப்பக்கூட இப்ப நடந்தத போய் அங்க வைக்கக்கூடாதுன்னு தோணிச்சு.
தம்பி இறந்ததுக்கு முன்னாலேயே முதல் கட்டுரையை எழுதிட்டேன். மரபிசையும் காவிரியும். மார்ச் 30ஆம் தேதி அவன் படிக்கட்டில் கீழே விழுந்தான். ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். நினைவு திரும்பாமலேயே ஏப்ரல் 8-ஆம் தேதி இறந்தான். கபாலம் அடிபட்டு ஹெமரேஜ் ஆயிடுச்சு. அந்த எட்டு நாளும் நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் மாறி மாறி வந்துட்டிருந்துச்சு. பொழச்சிருவான்னு வேண்டுனோம். எட்டாம் நாள் அவன் இறந்து போனான் என்று சொன்னதும் நாங்க நொறுங்கிப் போயிட்டோம். என் தம்பி அவன்.
காரியமெல்லாம் முடிச்சு ஏப்ரல் 21-22 தேதி போல் தான் ஊருக்கு வந்தேன். வீட்டில யாருமே சரியில்ல. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. ஜெயன் குமரித்துறைவி எழுதி முடிச்ச வெறுமையில இருந்தார். அஜிக்கு கொரோனா, ஆசாரிபள்ளத்துல இருந்தான்.
ஏப்ரல் 23-24 வாக்கில் எனக்கு ஒரு நினைப்பு வந்தது. இல்ல, இந்த ஃபீல நான் பெருக்கிக்கக்கூடாது. இழப்பு இழப்புதான். ஆனால் அதுக்குள்ள போயிடக்கூடாது, அதிலிருந்து மீள்றது ரொம்ப கஷ்டமாயிடும்.
அப்போது ஜெயனுக்கு சுந்தர ராமசாமி சொன்னது நினைவுக்கு வந்தது. எனக்கு சொன்னது மாதிரி இருந்துச்சு. ஜெயன் அவங்க அம்மா-அப்பாவை இழந்த நாட்கள் எப்படி இருந்திருக்கும்ன்னு யோசிங்க. நின்னிட்டிருக்குற தரைத்தளமே இளகிக் கீழே போனமாதிரி இருக்குமில்ல? அப்போ சுந்தர ராமசாமி சொன்ன ஒரே விஷயம், நீங்க எழுதுங்க, கிரியேட்டிவா எழுதினா மட்டும்தான் இதிலெருந்து வெளிவர முடியும்.
சுந்தர ராமசாமி ஜெயனுக்கு சொன்னதைத்தான் ஜெயன் எனக்கு சொன்னார். நீ எதிலாவது முழுமூச்சா இன்வால்வ் ஆகணும். இல்லைன்னா இதிலெருந்து வெளிவர முடியாதுன்னு சொன்னார். நானே ஒரு நாள் ராத்திரி முழுக்க முழிச்சிருந்து யோசிச்சு பார்த்தேன். இந்த ஃபீலிங் பெருகிப்பெருகி வரும். துக்கத்த பெருக்கிக்குறதுல என்ன இருக்கு? ஒரு பெரிய இழப்புதான். அதுக்குள்ள நம்ம மைண்ட விட்ற கூடாதுன்னு தோணிச்சு.
ஏப்ரல்-25ஆம் தேதி வலைத்தளத்த ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்ட்ட சொல்லி டிசைன் பண்ணேன். ஏற்கனவே எழுதிய கட்டுரைகள் ஒரு இரண்டு மூணு வாரம் வந்துச்சு. அப்போ நான் எனக்கே ஒரு கம்பல்ஷன் மாதிரி விதிச்சிகிட்டேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை கண்டிப்பா எழுதி பிரசுரிக்கணும்ன்னு.
அந்த கட்டுரைகள்ல உங்க சின்ன வயசு தம்பி ரொம்ப இயல்பா வந்தார்.
ஆமா, சின்ன சின்ன புரட்சிகள்லையே வந்திருவானே! உண்மையிலேயே அதெல்லாம் எழுதறப்ப இப்ப உள்ள தம்பி, அந்த இழப்பு, எதுவுமே எனக்குத் தெரியல. என் தம்பி ஒரு காலகட்டதுல உயிரோட எங்கெயோ இருக்கான். நான் அவன் கூட அங்க போய் பேசி விளையாடிக்கிட்டு இருக்கேன் அப்படீன்ற மாதிரி ஒரு ஃபீல் வருது. என் தம்பி பழைய லெனின் கண்ணன் மாதிரி என் கூட வரான், போறான் அப்படீங்கும்போது அந்த இழப்பை ஏதோ ஒரு வகையில் என் மனசு ஈடுகட்டிக்குதுன்னு தான் நினைக்கறேன். நான் அவனோட ஞாபகங்களையெல்லாம் அகழ்ந்தெடுத்து பயங்கரமா பற்றிக்கிட்டேன்னு தான் சொல்லணும். அந்தத் தம்பிய நான் இன்னும் இன்னும் ஒளிமிகுந்தவனா பார்த்திக்கிட்டிருந்தேன். இந்த இறப்பே மறந்து போற அளவுக்கு.
ஆறு மாசம் இந்த எழுத்துல நான் என்ன தீவிரமா மூழ்கடிச்சிக்கிட்டேன் இல்ல? அது அந்த இறப்போட துயர கரைச்சிடிச்சு. இப்ப நினைச்சுக்கிட்டா துக்கம் இல்லாம இல்ல. ஆனால் புண் ஆறியிருக்கு. அது எழுத்துனாலத்தான். எழுத்த ஒரு healing process-ன்னு சொல்றாங்க. மனச கொந்தளிக்க வைக்குறதும் அதுதான். அதோட காயங்கள ஆத்துறதும் அமைதியாக்குறதும் அதுதான். ஒரே சமயம் இரண்டையும் பண்ணுதுன்னு எனக்குத் தோணுது. ஏதோ பெரிய எழுத்தாளர் மாதிரி generalize பண்ண நினைக்கல [சிரிக்கிறார்]. ஆனால் நான் அனுபவமா பாத்ததுல எனக்கு அதுதான் தோணுது.
நான் எழுதுறது மூலமா அவன் இறப்ப முழுசாவே மறக்கடிச்சிட்டேன். அது வேறென்னமோ. யாருக்கோ நிகழ்ந்ததுன்னு நான் நம்பிக்கிட்டேன். என் தம்பி அங்க இருக்கான். எட்டு பத்து வயசுலெருந்து விளையாடின தம்பி. அங்க, அத்தனை alive-ஆக, அத்தனை உயிர்ப்போட துடிப்போட, இருக்கான்.
யசோதை எழுதுறபோது ரொம்ப உடைஞ்சு போனேன். அப்போ ரெண்டு நாள் நினைவில்லாம இருந்து திரும்ப வந்தானே. இப்ப எட்டு நாள் நினைவில்லாம அப்படியே போய்ச் சேர்ந்திட்டானே. இந்த நாப்பத்தஞ்சு வருஷம் வாழுறதுக்குத்தான் கடவுள் அப்ப உயிர்ப்பிச்சைக் கொடுத்தாரா. போதும்ன்னு நினைச்சுட்டாரா. இந்த வாட்டி ஒரேயடியா பறிச்சிக்கிட்டாரே. இப்படியெல்லாம் தோணி கீபோர்ட்ல்லலாம் கண்ணீர் சிந்தித்தான் யசோதை எழுதினேன். எழுதுற மனசுக்கும் அதை பின்னாலிருந்து கண்காணிக்குற மனசுக்கும் சுத்தமா தடையெல்லாம் அழிஞ்சு ஒரு மனநிலையில எழுதின கட்டுரை அது.
இத்தனைப்பெரிய இழப்பை எழுத்து வழியா கடந்திருக்கிங்க. எழுத்துங்கற செயல்பாடு அப்படி எதைக் கொடுக்குது?
தொடர்ந்து படைப்பூக்கத்தோட இருக்கிறதோட மகிழ்ச்சியே ரொம்ப தனித்துவமானது சுசித்ரா. அப்புறம் எழுதும்போது அந்த வயச, அந்த வாழ்க்கைய நான் திரும்ப வாழறேன். ஒன்னொண்ணா திறந்து திறந்து பார்க்கும்போது மனசு உள்ள உள்ள போகுது, பயங்கரமா. இதைத்தான் எழுத்தாளர்கள் ‘A raid into your subconscious’ – நினைவிலிக்குள் ஓர் ஊடுருவல் – என்று சொல்றாங்கன்னு நினைக்கிறேன். தீவிரமான ஒரு பயணம். எழுத்து மூலமாத்தான் அங்க போக முடியும்.
எழுதும் அந்த நேரத்துல போதப்பூர்வமான மனசக் கடந்து உள்ள எங்கியோ போயிடறோம். குளிக்கும்போது குளத்துக்குள்ள மெல்ல ஆழ்ந்து போவோமில்ல. அங்க ஆழத்துல தம் பிடிச்சு இருந்துட்டு வெளிய வருவோமில்ல. அந்த மாதிரி, நம்ம மனசு தன்னத்தானே கான்ஷியஸ் மைண்ட விலக்கி விலக்கி உள்ள போகுறப்ப, ஒரு கட்டத்துல சப்-கான்ஷியஸ் திறந்துக்குது. அதைத்தான் சொல்லிருக்காங்க. கிரியேட்டிவ் பிராசெஸ்ஸே அதுதான்னு பெரிய பெரிய எழுத்தாளர்கள்லாம் சொல்றாங்க. அதைத்தான் நானும் நம்புறேன்.
ஏன்னா, என் கான்ஷியஸ் மைண்டால ஆலத்தூரப்பத்தி இத்தனை நினைவுகளை கொண்டுவந்திருக்க முடியாது. ஆனால் எழுதும்போது அலை மாதிரி வேறு ஒரு உலகத்துக்குள்ள கொண்டு போகுது. அதுக்கு மேல அங்க நடக்குறத நம்மால புரிஞ்சுக்க முடியாது.
ஏதோ இத்துனூண்டு எழுதிட்டு இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. என் அனுபவம் இப்படித்தான் இருந்தது. கிரியேட்டிவா எழுதுறது ரொம்ப அற்புதமான, பரவசமான ஒரு விஷயம். கடவுளுக்கு பக்கத்துல போகுற இன்பம். எனக்கு அது கிடைச்சுது.
அடுத்து என்ன எழுதப்போறிங்க?
இப்ப ஒரு இடைவெளியிலத்தான் இருக்கேன். அடுத்து என்ன எழுதணும்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு. இசையைப் பற்றி எழுதணுமா, அல்லது சின்னச்சின்ன மொழிபெயர்ப்புகள் பண்ணலாமா, இப்படி. அடுத்த வருடம் ஒரு நாவல் தொடங்கலாம்ன்னு இருக்கேன்.
என்ன தீம்?
தீம் இன்னும் முடிவு பண்ணல, ஆனால் களம் கீழைத்தஞ்சைன்னு யோசிச்சு வச்சிருக்கேன். மரபிசையும் காவிரியும்ல வருதில்ல. எங்க பாட்டி ஊர். அதுதான் களம்.
எழுத்தாளருக்கு வயதில்லை. அவர் எழுதிய வயதுகளெல்லாம் அவர். அருண்மொழிநங்கையிடம் பேசப்பேச அவ்வப்போது எட்டிப்பார்க்கும் குட்டி அருணா நெகிழச்செய்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு படைப்பாளியாக பரிணமித்திருக்கும் அருண்மொழிநங்கையில், இளமையின் உற்சாகமும் புலன்விழிப்பும், ஒரு பழுத்த நிதானமான அனுபவ அறிதலும் ஒன்று சேர காணக்கிடைக்கிறது. அவர் நாவலை எதிர்நோக்குகிறோம்.
நேர்காணல் : சுசித்ரா
புகைப்படங்கள் : நன்றி ஸ்ருதி டிவி
You must be logged in to post a comment.