Goat Milk Puttu – A.Muttulingam [Translation]

A translation of Tamil writer A.Muttulingam’s short story ‘Goat Milk Puttu’ into English, published in Narrative Magazine.

ALL THIS HAPPENED in Ceylon, long before its name was changed to Sri Lanka. In those days they just called it the Post and Telegraph Service. They had not yet invented grand terms like Postal Department, Division, and so on. Every morning, the Yazh Devi left Colombo at 5:45 a.m. sharp and ran north until it reached the Kankesanthurai terminal in Yazhpanam Province; the train returned to Colombo the same day. On Fridays, Sivaprakasam, an officer with the Post and Telegraph Service, took the Yazh Devi in time to be in Yazhpanam for lunch. He started his journey back on the following Sunday in the afternoon and was in Colombo by nightfall. On Monday morning he would set out as usual, ready to lord over everyone at work.

In Yazhpanam his wife took care of their great naarsaar house, with its central yard opening up to the skies and its wide grounds. Their only daughter was married and lived in Singapore. Their three dogs and the livestock they raised—a cow, two goats, twenty hens—as well as the mice, spiders, and cockroaches they housed but did not raise kept them busy. Sivaprakasam came often to Yazhpanam, not just to be with his wife but also to take care of the house and their grounds. Even his wife thought as much. But there was another reason, a secret one.

The rest of the story can be read here.

படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2

படைப்பில் ஒருமை [1] – அறிமுகம்

2

படைப்பின் இலட்சியம்

[குறிப்பு – இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலக் கவிதை மேற்கோள்களை அப்படியே அளித்திருக்கிறேன். கவிதையின் கூறுகளை விளக்க ஆசிரியர் அவற்றை பயன்படுத்துகிறார், ஆகவே அவற்றின் வடிவத்தோடு அப்படியே வாசிக்கும் அனுபவமே சரியாக இருக்கும். வங்காள, சம்ஸ்கிருத வரிகள் கட்டுரையின் மையக்கருத்துகளை கவித்துவமான எழுச்சியோடு வெளிபடுத்தும் விதமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். —மொழிபெயர்ப்பாளர்]

பண்டைய சம்ஸ்கிருத நூலொன்றில் ஒரு செய்யுள் உள்ளது. ஒரு சித்திரத்தின் பிரத்யேகமான கூறுகள் என்னென்ன என்று விவரிக்கும் விதமாக அது அமைந்துள்ளது. அக்கூறுகளில் முதலாவதாக அது கருதுவது : வ்ருப பேத:ரூபங்களின் தனித்துவத்தன்மை. ஒரு சித்திரத்தில் பல ரூபங்கள் இருக்கலாம். ஒவ்வொரு ரூபமும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு ரூபத்துக்கும் அதன் எல்லைகள் உள்ளது. ஆனால் அவ்வெல்லைகள் திண்மையானவையாக திட்டவட்டமானவையாக இருக்குமென்றால் அந்தச்சித்திரம் ரூபங்களின் திரளாகவே நிற்கும். திரளின் பயங்கரமான தனிமையே அதனில் வெளிப்படும். மாறாக, ஒரு சித்திரத்தில் உள்ள பல ரூபங்கள், அவற்றின் தனித்தன்மைகளை மீறி, அவற்றுக்கு முரணாகவே, அவற்றை இணைக்கும் ஒருமையின் ஒரு கூரை தாங்கியிருக்கவேண்டும். அப்படி நிகழவில்லையென்றால் படைப்பு நிகழவில்லை என்று பொருள்.

சித்திரத்தின் முதற்கூரான ரூபங்களின் தனித்துவத்தன்மை என்பதை அடுத்து அந்தச் செய்யுள் இரண்டாவது கூராக அளவீடுகளை சொல்கிறது. இதை பிரமாணானி என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. அளவீடுகள் என்னும்போதே அது பரஸ்பர உறவுகளை குறிக்கின்றன. ஒரு வடிவம் இன்னொரு வடிவத்துக்கு தேவைகான இடம் கொடுத்தே அந்த பரஸ்பரம் உருவாகிறது. உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட கால் கார்ட்டூன்படத்தைப்போல எவ்வளவு பூதாகரமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் உடலுடன் சேர்ந்திருக்கையில் அது உடலில் உயிரெனக் கூடும் ஒருமையுடன் இணைதிருக்கத்தான் வேண்டும். அது தன்னை அளவோடு நிறுத்திக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி அல்லாமல், உடற்கூறுகளை மீறி எம்பி அது தன்னுடைய சகாவை விட பலமடங்கு நீட்டம் கொள்ளும் என்றால், அது பார்வையாளன் கண்ணுக்கு எப்படித்தென்படுமென்றும், அந்த உடலுக்கே எத்தனைப்பெரிய தர்மசங்கடமாக முடியுமென்றும் நம்மால் ஊகிக்கக்கூடியதே. அளவீடுக் கொள்கையை மீறி, “நான் சுதந்திரமானவன்” என்று சித்திரத்தில் ஒரு அங்கம் மட்டும் முழங்குமேயானால் அது செய்வது கலகமேயாகும். அப்படி கலக்கத்தில் இறங்கினால் அது படத்தின் மற்ற அங்கங்களால் கருணையில்லாமல் அடித்து நொறுக்கப்படும். அல்லது முழுமையுடன் இணையாமல் என்றென்றைகும் தனித்தே நின்றுவிடும். இதில் ஒன்றே அதன் விதியாக அமையும். 

பிரமாணானி என்ற சம்ஸ்கிருதச் சொல் அழகியல் நூலில் அளவீடுகளைக் குறிக்கிறது. தத்துவ நூலில் ஒரு அறிவை அடையும் வழியை, அந்த அறிவுக்கான சான்றுகள் என்னென்னெ என்பதை குறிக்கிறது (பிரமாணம் – சான்று). அறிவுக்குறிய சான்றுகள் எல்லாமே அறிவுடன் சம்பந்தம் உடையவை. ஒவ்வொரு சான்றும், அதிலிருந்து அந்த ஒட்டுமொத்த அறிவு எவ்வாறு அடையப்படுகிறது என்று ஐயம் திரிபட நிரூபித்தாகவேண்டும். ஒரு நாட்டில் உள்ளவர்கள் எப்படி அடையாள அட்டயைக் கொண்டு அவர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் தான் என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கிறார்களோ, அதேபோல் ஒவ்வொரு சான்றும் அந்த அறிவின் முழுமையை சுட்டும் விதமாக சந்தேகத்திற்கிடமில்லாமல் அமையவேண்டும். அந்த முழுமையை தனித்தொருவராக நின்று தங்களில் எவரும் உடைக்கவில்லை என்று நிரூபிக்கவேண்டும். தத்துவத்தில் உள்ள தர்க்கச்சான்றுகளின் தர்க்கரீதியான உறவும், கலையில் உள்ள அளவீடுகளின் அழகியல்ரீதியான உறவும், ஒரு புள்ளியில் இணக்கம் கொள்கின்றன. உண்மையென்பது தனித்தனி தகவல்களில் இல்லை. அந்தத் தகவல்களின் இணைவில், இசைவில் இருக்கிறது. இதில் ஓர் பிரபஞ்ச உண்மை பொதிந்திருக்கிறது. இதையே கவிஞன் “அழகு தான் உண்மை, உண்மையே அழகு” என்கிறான். 

அளவீடுகளே பரஸ்பர சமநிலையை உருவாக்குகிறது. படைப்புடைய லட்சியங்களின் கட்டமைப்பை இதுவே அமைக்கிறது. மனிதர்கள் கூட்டமாகக் கூடினால் அது வெறும் திரள். ஆனால் ராணுவப்படையில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அளவீடின் வட்டத்துக்குள் நின்று செயல்படுகிறான். காலத்தில், வெளியில், நிற்கவேண்டிய இடத்தில் நின்று, நகரவேண்டியபடி நகர்ந்து, செய்ய வேண்டிய செயலை செய்கிறான். ஒரு வீரனும் மற்றொரு வீரனும் பரஸ்பர பந்தத்துடன் அவரவருக்கான இடத்திலும் செயல்வட்டத்திலுமே நின்றபடி செயலாற்றுவார்கள். இதுவே அவர்களை ராணுவத்துடன் ஒன்றியவர்களாக ஆக்குகிறது. ஆனால் அது மட்டும் அல்ல. படை என்பதே அதன் தலைவரின் மனத்திலுள்ள படை என்ற கருத்தின் புற வடிவம். அந்த கருத்தே படையை இயக்கும் ஒற்றை விசையாக உள்ளது. இப்படி, ஒரு படைப்பை இயக்கவும் ஒரு விசை தேவையாகிறது. அந்த விசையின் இயல்புக்கு ஏற்ப, அது கலைப்படைப்பா, அல்லது வெறும் கட்டுமானமா என்று வகுக்கலாம். கூட்டுப்பங்கு நிறுவனத்தின் அமைப்பையும்  நிர்வாக கொள்கைகளையும் உள்ளூர ஒரு விசை கூடி தீர்மானிக்கிறது. ஆனால் அந்த ஒற்றை விசையின் வெளிப்பாடு மட்டுமே அதன் இருப்பின் நோக்கம் அல்ல. அதைத்தண்டிய யதார்த்தமான காரணத்தை நிறைவேற்றவே அது அமைக்கப்படுகிறது. மாறாக, ஒரு கலைப்படைப்பின் தரிசனமென்பது தன்னளவிலேயே நிறைவும் முழுமையும் கொண்டதாகும். 

நம்முடைய இருப்பை, ஆளுமையை, ‘நான்’ என்று நாம் உணர்கிறோம். அது நம்மில் கூடியுள்ள ஒருமையின் உணர்வு. அந்த உணர்வு நாம் மகிழ்ச்சி, அல்லது சோகம், அல்லது பிற ஆழமான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படும்போது மேலும் வலுவாகிறது. அது வானத்தைப்போல. நீலநிறமாக இருப்பதால் தான் கண்ணுக்குத்தெரிகிறது. நாட்பொழுதில் நிறங்கள் மாற மாற வெவ்வேறு விதமாக தோற்றமளிக்கிறது. கலைப்படைப்பிலும் ஒரு இலட்சிய உணர்சின் விசை அதன் ஒருமைபபட்டுக்கு அவசியமாகிறது. ஏனென்றால் கலைப்படைப்பின் ஒருமைப்பாடு ஒரு படிகத்தின் ஒருமைப்பாடு போல மந்தமானதும், ஈடுபாடில்லாததும் அல்ல. உணர்ச்சிகரமான, ஆற்றல்மிக்க வெளிப்பாட்டையுடையது. இந்தக்கவிதையை பாருங்கள்:

Oh, fly not Pleasure, pleasant-hearted Pleasure,

Fold me thy wings, I prithee, yet and stay.

For my heart no measure

Knows, nor other treasure

To buy a garland for my love to-day.

And thou too, Sorrow, tender-hearted Sorrow,

Thou grey-eyed mourner, fly not yet away.

For I fain would borrow

Thy sad weeds to-morrow,

To make a mourning for love’s yesterday.

இந்த மேற்கோளிலுள்ள வார்த்தைகள் சந்தத்தை வெளிப்படுத்த மட்டும் இவ்வாறாக கோர்க்கப்பட்டிருந்தால் அது நம்மை எவ்விதத்திலும் ஈடுபடுத்தாது. என்னதான் கச்சிதமாக அளவீடுகளோடு சந்தமும் தாளமும் கூடியிருந்தாலும் அது வெறும் கட்டமைப்பாகவே நிற்கும். ஆனால் அதே வார்த்தைகள் உள்ளுரையும் ஓர் இருப்புக்கு வெளிப்புற உடலாக அமையும்போது அது தனக்கென்று ஓர் ஆளுமையை அடைகிறது. அந்த தாளம் வழியாகவே அதில் உள்ளுறையும் அந்த இருப்பு பிரவாகிக்கிறது. வார்த்தைகளில் ஊடுருவுகிறது. அவற்றின் ஏற்ற இறக்கங்களில் துடித்துத்துடித்து உயிர்கொள்கிறது. மாறாக, இக்கவிதையில்லுள்ளே உறையும் உணர்வை வெறும் கருத்தாக, சந்தவிசேஷமில்லாத வாக்கியத்தில் கூறினோமானால், அது வெறுமனே ஒரு செய்தியை வெளிப்படுத்தும். உயிரற்றதாக, பிணம்போல் இருக்கும். அதனை பாடுவதில் எந்தப்பயனும் இருக்காது. அந்த உணர்வுப்பூர்வமான இருப்பு சரியான சந்ததாளவடிவத்தில் அமைகையில் மட்டுமே, ஒருகணமும் நில்லா நீங்கா இவ்வுலகின் நித்தியப்பெருவிழாவில் இடம்பெருவதற்கான உயிர்ப்பு அதனில் அமைகிறது.

இந்த வேடிக்கைப்பாட்டை பாருங்கள்:

Thirty days hath September,

April, June, and November.

இதில் சந்தமுள்ளது. உயிர்ப்பலையின் சாயல் உள்ளது. ஆனால் நம்முடைய இதயத்துடிப்பின் சந்தத்தோடு இந்த வரிகள் இழைவதில்லை, இவ்வரிகளில் ஒருமையை உருவாக்கும் உயிர்ப்பு இல்லை. இவ்வரிகள் கைப்பிடிகள் வைத்தப் பை போல வசதியாக உள்ளன. மனித உடலைப்போல் தவிர்க்கமுடியாததாக, வேறெப்படியும் படைக்கப்பட்டிருக்கமுடியாதென்ற உணர்வை உருவாக்கவில்லை.

நம்முடைய சொந்த கலைப்படைப்புகளில் உறைந்திருக்கும் இந்த உண்மை நமக்கு படைப்பின் அகத்தில் பொதிந்துள்ள மர்மத்திற்குள் ஒரு சின்ன வெளிச்சத்தை காட்டுகிறது. இவ்வுலகின் முடிவில்லா சந்தங்கள் வெறும் கட்டமைப்புகளல்ல. இவை நம்முடைய இதய நரம்புகளை சுண்டி இழுதக்கின்றன. இசைக்கின்றன.

ஆகவேதான் நாம் இந்த பிரபஞ்சத்தையும் ஒரு படைப்பென்று உணரலாகிறோம். அதன் மையத்தில் உயிர்ப்பான ஒன்று இருக்கிறதென்றும், அது தன்னை எண்ணிலடங்கா இசைக்கருவிகளில் வாசிக்கப்படும் முதல்முடிவில்லாத பிரபஞ்ச கானமாக வெளிப்படுத்திக்கொள்கிறதென்றும் நாம் உணர்கிறோம். ஒரு நொடிக்கூட அதன் தாளம் தப்புவதில்லை. வானத்துக்கு வானம் தோரணம் கட்டி விரியும் இம்மாபெரும் உலகக்கவிதையானது வெறும் பருப்பொருட்களின் பண்டவஸ்துக்களின் நிதர்சனங்களின் பட்டியலல்ல. நாம் ஆனந்தத்தை உணரும்போதெல்லாம் அப்பாடலின் நேரடியான தரிசனத்தை அறிகிறொம். நம்முடைய ஆனந்தமே இப்பிரபஞ்ச பேரிருப்பின் ரகசியங்களுக்குத் திறவுகோல். ஒரு பேராளுமை இப்பிரபஞ்சத்தின் எண்ணிலடங்கா ஆளுமைகளின் மேல் தன்னுடைய ஓயாத வெளிப்பாட்டின் வழியே கோலோச்சுகிறான். வக்கீல் வாய்தாக்காரனைப்பார்த்து பாடுவதில்லை, ஆனால் புதுமணவாளன் தன் மனைவி கேட்கவேண்டுமென்று பாடுகிறான். நம்முடைய ஆன்மா அப்பாடல் கேட்டு நெகிழ்ந்து கரையும் போது, அது நம்மிடம் கட்டணமேதும் எதிர்பார்ப்பதில்லை என நாம் அறிகிறோம். காதலின் சமர்ப்பணத்தையே அம்மணவாளனின் குரலில் கேட்கிறோம். மறுக்கமுடியாத ஓர் அழைப்பும்.

சித்திரக்கலை, இன்னும் பிறக்கலைகளில் சில வடிவங்கள் அலங்காரத்துக்கென்றே படைக்கப்படுகின்றனவே, அவற்றுக்கு வெளிப்படுத்த உயிர்ப்பான உள்ளுறையும் இலட்சியம் ஏதும் இல்லையே என்ற கேள்வியை நாம் எழுப்பலாம். ஆனால் அது அப்படி அல்ல. அலங்காரக்கலையில் படைப்பாளியின் உணர்ச்சிகரமான வெளிப்பாடு உள்ளது. “இதன் படைப்பில் நான் மகிழ்கிறேன், இது நன்று,” என்ற உணர்வு.  ஆனந்தத்தின் மொழிபுகள் அனைத்துமே அழகுதான். ஆனால் இங்கே ஒன்று சொல்லியாகவேண்டும். உண்மையான மகிழ்வு என்பது வெறும் கேளிக்கை அல்ல. அழகு வெறும் வடிவலட்சணம் அல்ல. தன்னிலையிலிருந்து பிரிந்து எழுந்து உயர்கையில் உருவாகும் உணர்வே மகிழ்வு. அது ஆனந்தம். உள்ளம் பிணைப்புகளில்லாமல் ஆகையில் உருவாகும் உணர்வது. அழகென்பது இங்கு உறையும் உண்மையான சாரமான ஒன்றின் ஆழமான வெளிப்பாடு. அந்த சாரத்தின் வெளிப்பாடு மட்டுமே நம்முடைய மனங்களை நிறைவடையச்செய்கிறது. வேறு வசீகரங்களேதும் அதனிடத்தில் இருப்பதில்லை. தேவையும் இல்லை. வெகுசில தூயப் பரசவசக் கணங்களில் நாம் உலகத்தைப்பற்றிய இந்த உண்மையை நேரடியாக பிரத்யட்சமாக அறியலாகிறோம். நாம் இந்த உலகை வெறும் இருப்பாக மட்டுமல்லாமல், அதன் வடிவங்கள், ஒலிகள், நிறங்கள், வரிகளினால் அழகூட்டப்பட்டிருப்பதை அறிகிறோம். “என் படைப்பில் நான் மகிழ்கிறேன்” என்று நின்று பெருமையுடன் அறிவிக்கும் ஒன்று  அவற்றின் வழியாக வெளிப்படுவதை நம் உள்ளங்கள் அறிந்துகொண்டே இருக்கிறது.

இதனால் தான் அந்த சம்ஸ்கிருதப் பாடல் ஒரு சித்திரக் கலைப்படைப்பின் இன்றியமையாத பாகங்களாக (1) ரூபங்களின் தனித்துவத்தன்மை, (2) சரியான அளவீடுகள், அவற்றின் ஒருமை என்பதுடன், (3) ஃபாவ: – அதன் உணர்ச்சிப்பூர்வமான மையம் என்று மூன்றாவதாக குறிப்பிடுகிறது.

உணர்ச்சிகரமான வெளிப்பாடு மட்டும் கலையாகாது – அது எத்தனை உண்மையான உணர்வாக இருந்தாலும் சரிசரி இந்தப்பாடல் அதன் ஆசிரியரால் “இரக்கமற்ற காதலியிடம் ஒரு விண்ணப்பம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது:

And wilt thou leave me thus?

Say nay, say nay, for shame!

To save thee from the blame

Of all my grief and grame.

And wilt thou leave me thus?

Say nay! say nay!

கவிஞரின் விண்ணப்பத்தில் இருக்கும் தீவிரத்தையோ அதை வெளிப்படுத்துவதற்கான தேவையையோ நான் சந்தேகப்பட்டால் அவர் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். அவர் அந்த பாடலின் வடிவத்துக்கு மட்டுமே பொறுப்பு கொண்டவர். அதன் உணர்வுகளுக்கல்ல. உணர்வுகள் அந்த பாடலை உருவாக்கி வடிப்பதில் வெறுமனே கச்சாப்பொருள் மட்டுமே. பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு ஏற்ப நெருப்பு வெவ்வேறு வண்ணங்கள் கொள்கிறது. ஆனால் நாம் எரிபொருளை கவனிப்பதில்லை. அதை பற்றி விவாதிப்பதில்லை. நெருப்பையே கவனித்து விவாதிக்கிறோம். எப்படி ஒரு ரோஜாப்பூ அதன் சாரத்தைத்த்தண்டிய வடிவம் கொண்ட ஒன்றோ, அப்படி ஒரு பாடலென்பது அதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வைத்தண்டி முற்றிலும் பெரிதான, வேறான ஒன்று. இனி முந்தைய பாடலைக் காட்டிலும் ஆழமான, உண்மையான உணர்வு வெளிப்பாடு அமைந்திருக்கும் மற்றொரு பாடலை பார்ப்போம்:

The sun,

Closing his benediction,

Sinks, and the darkening air

Thrills with the sense of the triumphing night,—

Night with her train of stars

And her great gift of sleep.

So be my passing!

My task accomplished and the long day done,

My wages taken, and in my heart

Some late lark singing,

Let me be gathered to the quiet West,

The sundown splendid and serene,

Death.

இந்தக் கவிதையில் வெளிப்பட்டுவரும் உணர்வுகளும் எண்ணங்களும் ஒரு உளவியலாளரின் பார்வைக்குறியவை. ஆனால் கவிதையென்னும்போது அதன் உணர்வுளும் எண்ணங்களும் அப்படியே அதன் கவித்தவத்தில் கரைந்துவிடுகிறது. உயிர்ப்புள்ள தாவரத்தில் கார்பன் உள்ளதென்ற ஞானம் அதை கரியாக்க எண்ணுபவனுக்கே முக்கியம். தாவரங்களின் மீது காதல் கொண்டவனுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.  

இதனால்தான் நிலத்தின் மேல் ஏதாவது புதியவகை கொள்கையின் உணர்வு, புயலாகக் கிளம்பும்போது அங்கே கலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் கொள்கையுணர்வின் ஒற்றைபப்டையான தீவிரம், படைப்பின் அமர்த்தியான இணக்கத்தின் எல்லைகளை உடைத்து முந்தியடித்துக்கொண்டு தலை நீட்டுகிறது.  தரை மிதித்து புயல் எழுப்பித் தன்னை நாயகனாக நிறுத்திக்கொள்கிறது. அதன் எடையும் அழுத்தமும் படைப்பில் கைகூட வேண்டுய ஒருமையை அதன் பீடத்திலிருந்து அசைத்து பெயர்த்துவிடுகிறது.  இதே காரணத்தால் தான் தேவாலய பக்தி பாடல்களில் உண்மையான கவித்துவத்தன்மை இருப்பதில்லை. தேசபக்தி பாடல்களிலும் இதே குறையை காண முடிகிறது. திடீர் மழையில் பொங்கி எழும் மலைநீர் பெருக்குகள் இவை. தங்களுடைய பாதையிலுள்ளதை அடித்துச்செல்லும் வேகமே இவற்றின் குறிக்கோள், நீரின் ஒழுக்கு அல்ல. இக்கொள்கைகளின் உணர்ச்சிவேகம் வலிமையும் தன்னகங்காரமும் பொருந்தியவை. தங்களுடைய வீரியத்தை வெளிபடுத்த ஒரு அரங்கை அமைத்துக்கொடுக்கும் ஊடகம் மட்டுமே கவிதை என்ற பார்வையுண்டு இவற்றுக்கு. இப்படி எந்த கொள்கைக்காகவும் கவிதை ஒருநாளும் தன்னுடைய ஆன்மாவை பேரம்பேசி விற்றுவிடக்கூடாது. என்னதான் பொதுநலம், சமூகப்பயன் என்ற பெயர்களெல்லாம் சூடிக்கொண்டு வந்தாலும், அந்த சபலத்துக்கு கவிதை இடம் கொடுக்கவே கூடாது. கலைஞனுக்கும் கலைக்கும் இடையே காதலின் தூய ஊடகமான பழுதற்ற பற்றின்மை இருத்தல் வேண்டும். அந்தக்காதலை தூய்மையாக, முழுமையாக வெளிப்படுத்துவது மட்டுமே அந்தக்காதலில் ஈடுபடுவதன் குறிக்கோளாக இருக்க வேண்டும். தன் காதலை வேறெதன் சேவையிலும் பயனாக்கும் அற்ப எண்ணத்தை கலைஞன் அரவே ஒழித்துக்கட்ட வேண்டும். 

அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆளுமை சுயநலத்தின் சிறிய வட்டத்திற்குள் வலம் வருகிறது. ஆகவே அந்த சிறிய இடைவெளிக்குள் நம்முடைய உணர்ச்சிகள், நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் நமக்கு பூதாகரமான முக்கியத்துவம் பெற்று நிற்கின்றன. அவை தங்களை ஓங்கி ஓங்கி முன்வைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த ஓங்கியக் குரலுக்கு முன்னால் அந்த உணர்வுகளும் நிகழ்வுகளும் முழுமையுடன் கொள்ளும் ஒருங்கிணைவு நம் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் கலையில் நம்முடைய ஆளுமை நித்தியத்தின் பற்றில்லா சுதந்திர வெளியில் சென்று நின்றுகொள்கிறது. அங்கே தன்னுடைய உண்மையான அளவை அது அறிந்துகொள்கிறது. நம்முடைய வீடு பற்றி எரியும்போது தீயின் தன்மையை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் நட்சத்திரங்களில் உள்ள நெருப்பு அலகிலா பேரிருப்பின் உள்ளத்திலுள்ள நெருப்பே தான். அங்கே, அது படைப்பின் லிபியானத் தீ.

(பிரிட்டிஷ் கவிஞர்) மாத்யூ ஆர்னல்ட் நைட்டிங்கேல் பறவையை நோக்கிப்பாடும் பாடலின் வரிகள் இவை:

Hark! ah, the nightingale—

The tawny-throated!

Hark, from that moonlit cedar what a burst!

What triumph! hark!—what pain!

வலி நம்முடைய அன்றாடத்தின் எல்லைகளில் சென்று முட்டும் போது அது நம்முடைய நெஞ்சில் உதைத்து நம்மை பின்னால் தள்ளுகிறது. இது பெரும் வேதனையை உருவாக்கிறது. வாழ்க்கையின் குறுகிய வட்டத்தோடு அதன் தீவிரம் முரண்படுகிறது. அன்றாடத்தில் வலியென்பது ஒவ்வாத அபசுவரமாக ஆகிறது. ஆனால் பெரும் தியாகத்தின் வலியில் காலாதீதத்தின் பற்றில்லாமை உள்ளது. அங்கே பெருவலி தன்னுடைய பூரண கம்பீரத்துடன் வெளிப்படுகிறது. ஆதியந்தமில்லா இப்பெருவாழ்வின் விரிவில் அதற்கான இயல்பான இடம் அமைந்துவிடுகிறது. முகில் திரண்டு கருண்ட வானில் வெட்டும் மின்னல் அங்கே இணக்கத்துடன் வெளிப்படுகிறது. சோதனைச்சாலைக்கம்பியில் நிகழும் மின்னலுக்கு அந்த கம்பீரமும் இணக்கமும் இருப்பதில்லை. அந்த பெருவிரிவில் வைத்துப்பார்க்கையில் பெருவலிகளனைத்துமே பெருங்காதலுடன் பொருந்தி இசைவு கொள்கின்றன. எல்லா வலிகளுமே அன்பைக் காயப்படுத்துபவை. ஆகவே பெருவலியில் அன்பின் பரிபூரண இருப்பும் பரிபூரண அழகும் என்றென்றைக்குமாக வெளிப்படுகிறது. மாறாக, ஒரு வணிக ஒப்பந்தம் கசந்து போகும்போது ஏற்படும் வலியில் கம்பீரம் ஏதும் இல்லை. ஒன்றை ஒன்று கவ்விக் கடித்து உண்டு தீர்ப்பதிலேயே அது முடிகிறது. 

கவிஞன் பாடுகிறான்:

How thick the bursts come crowding through the leaves!

Eternal Passion!

Eternal Pain!

முதல்முடிவிலா காலாதீதப் பெருவெளியில் பொதிந்துள்ள பெருவலியைப்பற்றி வேதக்கவிஞர்கள் பாடுகிறார்கள். ஆம், “எல்லா படைப்பும் ஆனந்தத்திலிருந்து உதிப்பவை” என்று கூறிய அதே வேதக்கவிஞர்கள்.

ஸ தபஸ் தபத்வா சர்வம் அஸ்ரஜாத யாதிதம் கிஞ்ச

தன்னுடைய பெருவலியின் தாபத்திலிருந்து படைப்போன் இவ்வனைத்தையும் படைக்கிறான்.

படைப்பின் மையமான இத்தவம் ஒரே நேரம் பேரானந்தமும் பெருவலியும் தூண்டக்கூடியதாகும். இதைப்பற்றி வங்கநிலத்து நாடோடி மெய்ஞானிகள் பாடும் பாடல் ஒன்று:

ஆனந்தத்தின் இருளில் அமிழ்கின்றன என் கண்கள்

காரிருளின் பரவசத்தில் கமலமலரென இதழ்மூடுகிறது, என் இதயம்

அந்தப்படல் பேசும் ஆனந்தமானது நீலக்கடலைப்போல் ஆழமானது, நீலவானப்போல் முடிவில்லாதது. இரவின் கம்பீரமும் தீராப் பேரழகும் கொண்டது அது. அதன் முடிவில்லா இருள், பிரகாசமாக ஒளிரும் பற்பல உலகங்களை தனக்குள் பேரமைதியின் மகாத்மியத்தோடு அணைத்துக்கொண்டிருக்கிறது. எல்லா பெருவலிகளும் ரணவேதனைகளும் ஒன்றாகும் ஆனந்தப்பெருவெளி அது. 

தன்னுடைய படைப்பின் ஊற்றைப்பற்றி மத்தியக்கால இந்தியாவின் கவிஞன் ஒருவன் ஒரு ‘கேள்வி-பதில்’ கவிதை வழியாக சொல்கிறான் இப்படி:

பறவையே, நீ இரவெல்லாம் உன் கூட்டில் அடைந்திருந்தாயே, அப்போது உன் பாடல்கள் எங்கே இருந்தன?

உன்னுடைய மகிழ்ச்சியெல்லாம் அங்கே தானே இருந்தது?

நீ ஏன் உன் மனதை வானத்திடம் பரிகொடுத்துவிட்டாய், முதல்முடிவில்லாத வானத்திடம் பரிகொடுத்துவிட்டாய்?

பறவை சொல்கிறது:

எல்லைகளுக்குள்ளே ஓய்வாயிருந்தபோது மகிழ்ச்சியை அடைந்தேன்

ஆதியந்தமில்லாமைக்குள் பறந்தபோது என் பாடல்களைக் கண்டுகொண்டேன்!

ஒரு கருத்தை அதன் அன்றாடத்திலிருந்து விடுவித்து அதை பெருவிரிவின் சுதந்திர வெளியில் உயர்த்திப் பறக்கவிடுவதே கவிதை செய்யக்கூடியது. மெக்பெத்தின் அதிகார ஆசை, ஒத்தெல்லோவின் பொறாமை, இவை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரப்பட்டால் பரபரப்பான செய்திகளாக நின்றுவிடும். ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அவ்வுணர்வுகள் தீப்பற்றி எரியும் நட்சத்திரக்கோவைகளுக்கிடையே எழுகின்றன. ஊர்வலமாக புறப்பாடு செல்கின்றன. அங்கே படைப்பு காலம்கடந்த விழைவுகளுடன், காலம்கடந்த வலிகளுடன் அதிர்ந்துகொண்டிருக்கிறது.

*

படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1

குருதேவர் ரவீந்திரநாத் தாகூர்

[1]

அறிமுகம்

“நான் இங்கே இருக்கிறேன்” என்பது மிக எளிமையான அறிதல். அதை அறிய எனக்கு எந்த விஷேஷப் பிரயத்தனமும் செய்தாகவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘நான்’ என்ற இந்த ‘என்னை’ உருவாக்கும் எண்ணிற்கடங்காத பௌதீக, வேதியிய, உயிரிய, உளவியக் கூறுகளை நான் பகுப்பாய்வு செய்ய முற்பட்டால், அந்தத் தேடல் எல்லையில்லாத ஒன்றாக ஆகிவிடும். நான் என்பது எனக்குள் நான் உணரும், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு மர்மநிலை. அலகிலாததன் எளிமை அதில் உள்ளது. விரிந்து விரிந்து உடைந்து உடைந்து செல்லும், என்னை உருவாக்கி வைத்திருக்கும், இந்தப் பெருக்குகளை, ஒற்றைப்புள்ளியாக்கி நிறுத்துகிறது. 

என்னில் உள்ள இந்த ஒன்று – ஏகம் – பலவாகிப் பிளந்து பிரிந்து நிற்கும் இந்தப் பிரபஞ்சத்தை அறிகிறது. ஆனால் அது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளில் உள்ள ஒருமையை, ஏகத்தைத்தான் அறிகிறது. அது இந்த அறையை அறிகிறதென்றால், இந்த அறை அதற்கு ஏகமான, ஒருமையான ஓர் இருப்பு. அறை என்பது பலபொருட்களால் அமைக்கப்பட்டதென்றாலும், அப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகிறதென்றாலும், அறை என்பது ஒற்றை அறிதல் தான். என்னில் உள்ள ஏகம் ஒரு மரத்தை அறிகிறதென்றால், அது அறிவது ஒருமையைத்தான் – மரமாக வெளிப்படும் ஒருமை. 

எனக்குள் இருக்கும் ஒருமை, ஏகம், படைப்பூக்கமானது. படைப்பதென்பது அதற்கு ஒரு பொழுதுபோக்கு. லீலை. அதன்வழியே அது ஒருமையென்ற லட்சியத்துக்கு விதவிதமாக வடிவம் கொடுத்து விளையாடுகிறது. சித்திரங்களிலும் கவிதைகளிலும் இசையிலும் அது ஆனந்தத்தைக் கண்டடைகிறது. உள்ளுறையும் ஒருமைக்கு பூரணமான, பிரிதொன்றில்லாத வடிவத்தை கண்டடைவதன் வழியாக அது அந்த ஆனந்தத்தை அடைகிறது.

என்னில் உள்ள இந்த ஏகம், அதன் தற்புரிதலுக்காக அறிவில் ஒருமையை நாடுகிறது. அதன் குதூகலத்திற்காக ஒருமையின் சித்திரவடிவங்களை படைத்து விளையாடுகிறது. மட்டுமல்லாமல், அதன் நிறைவுக்காக பிரேமையின் ஐக்கியத்தை வேண்டுகிறது. அது தன்னை இன்னொருவரில் தேடுகிறது. இது ஓர் உண்மை. இதை நிரூபணமாக்கும் பேருண்மைகளின் ஊடகங்கள் நம்மிடத்தில் இல்லாதிருப்பின், இப்படிச்சொல்வது சற்று அபத்தமாகக் கூடப் படலாம். பிரேமத்தில் நாம் கண்டடையும் ஆனந்தம் பரமமானது, ஏனென்றால் அதுதான் பரமசத்தியமும் கூட. ஆகவேதான் உபனிடதங்களில் “அத்வைதம் அனந்தம்” என்று கூறப்பட்டுள்ளது. ஒருமை அலகில்லாதது. அவை “அத்வைதம் ஆனந்தம்” என்றும் கூறுகின்றன. ஒருமை ஆனந்தமானது, பிரேமைமயமானது.

அலகிலாத அந்த ஒன்றிற்கு பழுதில்லாத வடிவம் கொடுக்க, எண்ணிலாத இந்த பலவற்றில் இணைவையும் இசைவையும் உருவாக்குவதும், அலகிலாத பிரேமையென்ற ஆனந்தவெளியை, தன்னிருப்பைத் தியாகம் செய்து ஏய்துவதும் தான் தனிமனிதனாக, சமூகமாக, நாம் இலட்சியமென்று எடுத்துக்கொண்டு செய்யக்கூடியது.