ரோம், கிரேக்கம், உலகம் — ஒரு விவாதம்

[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

அன்புள்ள ஜெ,

ரோம் பயணம் முடிந்தது. மீண்டுக்கொண்டிருக்கிறேன். மிக அரிய கண்டடைதல்கள் சிலவற்றை இந்தப் பயணம் வழியாக அடைந்தேன் என்று சொல்லத் துணிவேன். அதை என்னவென்று ஒரு கடிதத்தில்  சொல்லமுடியுமா தெரியவில்லை. தீவிரம் பற்றிக்கொண்டு  எழுதிக்கொண்டிருக்கிறேன். விரிவாகவே பதிவுகள் வருகின்றன. காலம், வரலாறு, கலை, தெய்வீகம்… எழுத எழுத அந்த ஏழு நாள் கனவிலிருந்து நானே விரவி விரவி எழுந்து வளர்வது போன்ற உணர்வை அடைகிறேன்.

*

இந்தப் பயணத்தில் என்னை மிகவும் சலனத்துக்குறுவாக்கிய ஒரு விவாதம் நடந்தது. பழைய கிரேக்க பாணி ரொமானிய பளிங்கு சிற்பங்களையும் அதன் தாக்கத்தின் உருவான ராஃபேல்  மைக்கலாஞ்செலோ உள்ளிட்டோரின் கலை பெருக்குகளையும் நேரில் தரிசிப்பதென்பது என் நெடுநாள் கனவுகளில் ஒன்று. பல இடங்களில் நின்று காலம் இடம் மறந்து கண்ணீர் மல்கினேன். அந்த உணர்வெழுச்சியின் தாக்கத்தை எனக்குள் ஆறாத் தீவிரத்துடன் சுமந்துகொண்டிருந்த வேளையில் ஒரு பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது.

அமெரிக்காவில் என் அறிவியல் நாட்களில் அறிமுகமானவன். அவனும் இந்தியன். இப்போது ரோமின் புறநகரில் ஓர் ஆய்வகத்தில் பணியில் இருக்கிறான். அவனுக்கு சிந்தனையில் ஆர்வம் உண்டு. பௌத்தத்தின் சில பகுதிகளை முறையாக படித்திருக்கிறான். நாங்கள் முன்பு விவாதித்திருக்கிறோம். அவன் சிந்தனைப்பாணியில் எப்போதுமே ஒரு இறுக்கத்தை நான் உணர்ந்ததுண்டு. அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. புரியவில்லை என்பதனாலேயே நான் அதில் சென்று உற்சாகமாக மோதியிருக்கிறேன்.

பிறகு தொடர்பு விட்டுப்போனது. அதன் பின்னரே நான் தீவிரமாக வாசிக்க எழுதத் தொடங்கினேன். சென்ற வாரம் சந்தித்தபோது அன்றைய மனநிலையின் உச்சத்தில் நான் என் பரவசங்களை எல்லாம் சொல்லத் தொடங்கினேன். அல்லது என்னை மீறி அவை வெளிப்பட்டன.

ஆனால் நான் பேசப்பேச அவனுக்கு நான் சொல்வதில் ஏதோ கடுமையாக உவக்கவில்லை என்பதை கவனித்தேன். ஒற்றை வார்த்தைகளில் பதில் சொன்னான் கண்களை திருப்பிக்கொண்டே இருந்தான். என் உற்சாகம் வற்றியது. ஏதும் தவறாக சொல்கிறோமா என்று புரியவில்லை.

பேச்சை சமூகமாக்க “நீ இங்கே தானே இருக்கிறாய்? கலைக்கூடத்துக்கு நிறைய வருவதுண்டா?” என்று கேட்டேன்.

அவன் “நான் ரோம் நகரத்துக்குள்ளேயே வருவதில்லை. எனக்கு இந்த நகரமே பிடிப்பதில்லை,” என்றான்.

“ஏன்?” என்றேன்.

அவன் சொன்னான். “இந்த நகரம் என்னை மிகவும் அசௌகரியப்படுத்துகிறது. கிரேக்க ரோமானிய கலாச்சாரமும் அதை அடுத்து உருவான கலை அறிவியல் வளர்ச்சிப்பாடுகளும் சாராம்சத்தில் மனிதனுக்கு என்ன நன்மையை செய்ததென்று எனக்கு விளங்கவில்லை. மனிதனை வலிமையானவன் என்று அது கட்டமைக்கிறது. சரி. ஆனால் தன் பலத்தை உணரத் தொடங்கியதும் மனிதன் அதிகாரத்துக்கு ஆசைப்படத் தொடங்குகிறான்.  அராஜகங்களை செய்கிறான். அது மிக அசிங்கமான ஒரு நிலை, உண்மையில் அது மனிதனுக்கு ஒரு வீழ்ச்சி தான். இங்கே சுற்றி விரவிக் கிடக்கும் இந்த மாபெரும் இடிபாடுகளைப் பார். நீ சிலாகிக்கும் மைக்கெலாஞ்செலோ கட்டி வைத்திருக்கும் ராட்சச உருவங்களைப் பார். ஆபாசமாக இல்லை?

“மனிதனின் அதீதங்களை அராஜகங்களை அடிமை போல் போற்றும் இந்த பண்பாடை விட கிறித்துவமே மனிதனுக்கு மேலும் பல மடங்கு உதவியிருக்கிறது. ஏன், உன் கிரேக்க ரோமானிய புத்துயிர்ப்புக்கால பேராசான்களை விட உண்மையான புதிய புரட்சி கருத்தை மனிதனுக்கு கொடுத்தவர் யார் என்றால் கிறிஸ்து என்று தான் சொல்வேன். தன்னை சித்திரவதை செய்ய வருபவனை,  கொல்ல வரும் ஒருவனைப் பார்க்கிறான். ‘தந்தையே அவனை மன்னியும், அவன் செய்வதறியாது பாவம் செய்கிறான்’ என்று அவன் மீட்புக்காக மன்றாடுகிறான். அதுவல்லவா வலிமை? அதுவல்லவா புரட்சி? மாறாக கிரேக்க ரொமானிய கலாச்சாரம் மனிதனுக்கு அப்படி என்ன புதுமை செய்தது? அவனை அராஜதத்துக்கும் அழிவுக்கும் தானே கொண்டு போனது? உடனே கலை என்பாய். கலை மனிதனின் உணர்ச்சிகளால் உருவாகி உணர்ச்சிகளை தூண்ட மட்டுமே உதவுகிறது. அதனால் ஆன்மீகமாக அவனுக்கு ஏதாவது பயன் உண்டா?” என்றான்.

அவன் பேசப்பேச எனக்குள் இனம் புரியாத வெறி மூள்வதை உணர்ந்தேன். மூச்சு வாங்கியது. நாங்கள் வெண்ணிற மேஜை விரிப்புகள் கொண்ட சிறிய மெழுகுவர்திகள் ஏற்றப்பட்ட உயர்குடி இத்தாலிய உணவகத்தில் இருந்தோம். ஃபோர் கோர்ஸ் மீலில் இரண்டு கோர்ஸ் முடிந்திருந்தது. மஞ்சள் வெளிச்சத்தில் மேஜைக்கரண்டிகளின் மெல்லிய கிண்கிணி ஒலிகளுக்கு மத்தியில் நேர்த்தியாக உடையணிந்த ஐரோப்பியர்கள் சின்னஞ்சிறு மிடர்களில் வைன் பருகியபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சுக்குரல்கள் ஏரிக்கரையில் அவ்வப்போது வந்து உடையும் சிறிய அலைகளைப் போல இதமாக ஒலித்தன. எனக்கோ கத்த வேண்டும் போல இருந்தது.

என்னை மிகுந்த பிரயத்தனத்தோடு சமநிலைபடுத்திக்கொண்டு பதில் சொன்னேன். “நீ சொல்வதை என் தலைவன் டால்ஸ்டாய் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான். அதெல்லாம் பழைய விவாதம்,” என்றேன். அது வெறும் தட்டிக்கழிக்கும் கூற்று பதில் அல்ல என்று சொல்லும் போதே உணர்ந்தேன். அவன் தலைக்குனிந்து சாலட்டை குத்திக் குத்தி வாயில் அடக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் எனக்குள் பீரிக்கொண்டு வந்தன. அவன் உபயோகித்த மொழி என்னை மிகவும் சீண்டியிருந்தது.

“என்ன சொன்னாய், கிரேக்க ரோமானிய பண்பாடு மனிதனுக்கு என்ன கொடுத்தது என்றா. நீ அறிவியல்வாதி தானே. அறிவியலின் முறைகள் எங்கிருந்து வந்தது? கிரேக்க கலாச்சாரம் தானே மனிதனுக்கு அறிவுவாதத்தை – ரேஷனலிசத்தை – புகுட்டியது? சாக்ரெட்டிக் டையலாக் என்பதே ஒரு விஷயத்தை பகுத்து ஆராயும் முறை தானே? அப்புறம் ஜனநாயகம்? அது பண்டைய கிரேக்கர்களின் கொடை இல்லையா? ஒரு விஷயத்துக்கு ஓர் ஐடியல் வடிவமுண்டு என்ற பிரக்ஞையை யார் அளித்தது? ஒரு பொருளை தூய அழகனுபவமாக்கி அதை அறியலாம் என்பது மனிதனுக்கு எவ்வளவு பெரிய வரம்? ப்ளாட்டோ தானே அதைச் சொன்னார்? இந்த பிரபஞ்சத்தை கால-வெளியில் அருவமாக உருவகிக்கக் கற்றுக்கொடுத்த கணித மேதைகள் – பித்தகோரஸ், யூக்ளிட், சீனோ – எல்லாம் எந்த பண்பாட்டில் வந்தவர்கள்? எப்படி ஒட்டுமொத்தமாக மனிதனுக்கு என்ன கொடுத்தது என்று உன்னால் கேட்க முடிகிறது?” – இப்படிப் பொறிய வேண்டும் என்று தோன்றியது. சூழல் கருதி கொஞ்சம் நாகரீகப்பூச்சோடு சொன்னேன். ஆனால் சொல்லச்சொல்ல எனக்குள் கோபம் மேலும் மூண்டது. “டெமாகிரசியும் தியரி ஆஃப் ஃபார்ம்ஸும் உன் தகப்பனா கண்டு புடுச்சான்?” என்று தான் எனக்கிருந்த கோபத்துக்கு நான் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்.

அவன் என் கண்களை சந்திக்கவில்லை. நிதானமாக, “நீ சொல்லும் விஷயங்கள் எதுவும் எந்த ஒரு பண்பாட்டின் சொத்து இல்லை. மனிதன் வெவ்வேறு பண்பாடுகள்ல தனித்தனியா இந்த விஷயங்களை எல்லாம் கண்டடஞ்சிருக்கான். மெசப்பொடேமியாவுல, பண்டைய இந்தியாவுல எல்லாம் ப்ரோட்டோ-டெமாகிரசியோட வடிவங்கள் இருந்திருக்கு. தர்க்கம், ரேஷனல் தாட், எல்லாமும் மற்ற பண்பாடுகள்ல இருந்ததே. பௌத்தர்களோட நியாயவாதம் மிக நுட்பமானது இல்லையா? அதான் நான் சொல்றேன். இதெல்லாம் மனுஷனோட சக்தி. மேதமை. சூழல் சரியா இருந்தா  உபரி வளம் இருந்தா எந்த பண்பாட்டிலும் அந்த மேதமை வெளிப்படும். ஆனால் அதைக் கட்டுப்படுத்த மனுஷன்ட்ட ஒண்ணுமில்ல. அதனாலே அப்படியே மேலப்போய் அதையே பலமாக்கி அராஜகங்கள பண்ணி தன்னையே அழிச்சுக்குவான். ஆனால் கிறிஸ்து சொன்னது மாதிரி ஒரு இன்சைட் உலகத்துல வேற எங்கேயும் உருவாகல இல்ல? அது மாதிரி ஒண்ணு தானே மனுஷன தன்னோட அராஜகத்துலேருந்து காக்குற வல்லமையோட இருக்கு? அது வெறும் மேதமை இல்ல. ஒப்புநோக்க இந்த கிரேக்கோ ரோமானிய கலாச்சாரத்துலயோ வேற எந்த கலை அறிவு சித்தாந்தத்திலேயோ எனக்கு பெரிய அப்பீல் தெரியல. அததான் சொல்றேன்,” என்றான்.

நான் பேசாமல் ஆனேன். அவன் சொன்ன விஷயங்கள் எனக்குள் ஒரு புயலைக் கிளப்பத் தொடங்கியிருந்தது.

“அராஜகம் என்றால் அதில் கிறித்துவ திருச்சபை தானே முதலிடம் வகிக்கிறது?” என்றேன். “இங்கே ரோமில் மட்டும் என்னென்ன அராஜகங்கள் நடந்துள்ளது என்று பட்டியலிட்டாலே போதுமே? கிறிஸ்துவின் ஞானம் கிறித்துவ மத அமைப்புக்கே உதவவில்லை என்பது துரதிருஷடவசமானது.” என்னிடம் வேறு ஆயுதங்கள் இல்லை ஆகவே என் குரலில் ஏளனம் நுழைந்தது. ஆனால் அவன் அதற்கும் நிதானமாக பதில் சொன்னான்.

“உண்மை தான் அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கும் மருந்து கிறிஸ்து மாதிரி தூய்மையான ஓர் ஆன்மீக நிலை தான். அதை அவர்களே தீண்டவில்லை என்பது ஓர் அவலம். ஆனால் அதனால் அந்த உயர் விழுமியத்துக்கு எந்த கேடும் உருவாகவில்லை. மாறாக அதன் விழுமியங்கள் அங்கே தான் உள்ளன. நாம் அவற்றை தியானிக்கிறோமா கடைப்பிடிக்கிறோமா நம் வாழ்வை அதன் படி அமைத்துக்கொள்கிறோமா என்பதில் தான் நாம் நிற்கிறோம்,” என்றான்.

நண்பன் கிறித்துவன் அல்ல, இந்து. ஆகவே அவன் சொன்னவை மதப்பற்றின் விளைவு என்று நான் நினைக்கவில்லை. மேலும் இத்தனை ஆண்டுகளில் அவன் அனுபவங்கள் என்ன சிந்தனை எப்படி மாறியிருக்கிறது என்று எதுவும் தெரியாது. இருந்தாலும் நான் இருந்த மனநிலையில் அவன் பேசியவை என்னை மிகவும் பாதித்தது.

அன்று மாலை மீண்டும் அந்த விஷயத்தை பேசவில்லை. எனக்கு மேலும் அந்த பேச்சை வளர்க்க விருப்பமில்லை. ஆனால் அவன் கேள்வி எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் காலை கீட்ஸ் மற்றும் ஷெல்லியின் கல்லறைகளைச் சென்று பார்த்தேன். அது எனக்கு கிட்டத்தட்ட ஒரு புனிதயாத்திரை. உண்மையில் என் ரோம்பயணமே அந்த ரொமாண்டிக் காலக் கவிஞர்களின் காலடிக்ளை பின் தொடரும் ஒரு முயற்சி என்று கூட சொல்லலாம். வரலாறையும் கலையின் அழகுச்சங்களையும் கண்டடைய மேற்கொண்டது. ஆனால் என் நண்பனின் கேள்வி மொத்தமாக எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டது.

*

நண்பன் சொன்னதில் ஒரு மிடர் உண்மை இருந்ததா? ஒரு வகையில் இந்தக் கேள்வியை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். தூய அறிவியல்வாதத்தோடும் டெக்னாலஜி போக்கோடும் எனக்கு இருந்த பிணக்கின் புள்ளி இது தான். ஆனால் கலை? கலையை அப்படி ஒதுக்கிவிட முடியுமா? அவதானம் வழியாக தூய உள்ளுணர்வு வழியாக பெறப்படும் அறிவு எதுவாக இருந்தாலும் அது தன்னளவிலேயே ஓர் ஆன்மீகத்தை கொண்டதல்லவா?

எனக்கு பின் தொடரும் நிழலின் குரல் நினைவுக்கு வந்தது. அந்த நாவலை படித்த நாட்களில் இவன் கிறிஸ்துவின் இடத்தைப் பற்றிச் சொன்ன தர்க்கங்களை தர்க்கமாக அல்லாமல் உணர்வுகளாக அடைந்திருக்கிறேன். அந்த நாவலில் கிறிஸ்து வெளிப்படும் உணர்ச்சிகரமான இடங்களை நினைத்துக்கொண்டேன். ஆம், இது சரி, இது சரி என்று எந்த தர்க்கத்தை விடவும் வலுவான ஒரு குரலாக எனக்குள் ஆமோதிப்பை கண்டுகொண்ட பொழுதுகள் அவை. அதைப்போல் எத்தனை கிறிஸ்துக்கள். தஸ்தாயேவ்ஸ்கியின் கிறிஸ்து, தல்ஸ்தாயின் கிறிஸ்து, செல்மா லாகர்லொஃபின் ஜார்ஜ் எலியட்டின் கிறிஸ்து. மிகச்சிறிய வயதில் என்னுடைய அம்மா அவர் சொன்ன படுக்கைய்றைக் கதைகள் வழியாக எனக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். அம்மாவுக்கு விவிலியத்தின் சிலப்பகுதிகள் மனப்பாடமாகத் தெரியும். அந்த பழைய வார்த்தைகள் என் இளம் மனதில் அவர் தொடுகையின் ஸ்பரிசத்தோடு இணைந்து வரைந்த கனவாக ஒரு கிறிஸ்து எனக்குள் இருக்கிறான். குழந்தையாக இளைஞனாக தேவனாக.

ஆனால் அந்த பிம்பங்கள் ஒவ்வொன்றும் கதைகள் கலைகள் வழியாகத்தானே என்னை வந்து அடைந்தன? மானுடக் கற்பனையின் மேதமை என்று ஒன்று இல்லையென்றால் கிறிஸ்து இவ்வளவு பெரிய உருவாக எனக்குள் வளர்ந்திருப்பானா? நம் அகத்தின் ஆடியில் அல்லவா அவனை கண்டுகொள்கிறோம்?

அவனை இந்த ரோம் நகரில் எங்கே கண்டேன்? மைக்கெலாஞ்சலோவின் ‘தி லாஸ்ட் ஜட்ஜ்மெண்ட்’ ஓவியத்தின் மைய்யத்தில் வலிய அரசனாக. அந்த ஓவியத்தின் பிரபஞ்ச சுழலுக்கு அடியில் சிலுவையில் அறையப்பட்ட மெல்லிய இளைஞனாக. பியெட்டாவில் மரியன்னையின் கரங்களில் சிசுவைப்போல் ஏந்தப்பட்ட நெடிய நொருங்கக்கூடிய மனித உடலாக.

அவனை விட மேரியை மேலும் அணுக்கமாகக் கண்டேன். ரோமில் அவள் தான் எங்கும் வீற்றிருக்கும் அரசி – மடோனா, ரெஜினா, விக்டோரியா. ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒவ்வொரு ரூபம் சூடுகிறாள். கிரேக்கர்களின் மினர்வாவைப்போல் அவள் வலிமையின், மேதமையின் தெய்வமாக கருதப்படுகிறாள். எகிப்தியர்களின் ஐசிஸ் போல் அவளே வான் நட்சத்திரங்களை சூடிக்கொண்ட ஆதித்தாயாக விளங்குகிறாள்.

காலம் காலமாக கலைஞர்கள் அவனையும் அவளையும் வடிவங்களிலிருந்து வடிவங்களாக உருமாற்றித் திரட்டிக் கண்டடைந்திருக்கிறார்கள். கலையின் ஆன்மா வழியாகவே தெய்வங்களும் அவை சுட்டும் உயர் விழுமியங்களும் என்னை வந்துத் தீண்டியுள்ளன. கலைஞன் ஞானியரிடமோ, இறையியலாளனிடமோ அல்லது தத்துவவாதியிடமோ தன் தரிசனத்தைப் பெறலாம். ஆனால் என் வரையில் கலைஞனே உயிரை அளித்து பூமியில் ஒரு தெய்வத்தை – அல்லது விழுமியத்தை – படைக்கிறான்.

“தந்தையே அவர்களை மன்னியும்” என்று சொன்னது இயேசுவா அவரை எழுதிய கவிஞனா என்று நாம் பிரித்தறிய முடியுமா என்ன? ஒரு கவிஞனால் அந்த கூற்றின் ஆற்றலை அடைய முடியுமென்றால் அது எவ்வளவு பெரிய நிலை?  ஆம் அது வலிமை தான் ஆனால் வலிமை என்பதாலேயே அது ஆன்மீகமற்றதாக ஆகிவிடுமா? ஆன்மீகம் என்றாலே எளிமையும் சரணாகதியும் சுய ஒடுக்குதலும் சுத்தீகரணமும் மட்டும் தானா? ஆன்மீகத்தின் நிறம் தூய வெள்ளையாக அன்றி இருக்க முடியாதா?

இப்படியே கேள்விகள் எனக்குள் சுழன்றன.

*

ஏன் எனக்குள் இத்தனை போறாட்டம்? நான் வலிமையை வழிபடுகிறேனா? சிந்தித்துப்பார்த்தேன். கிரேக்க ரொமானிய பாணி சிற்பங்களில் உள்ள நாட்டம் என்பது என்ன? மிகத்துல்லியமான மனித வடிவத்தை மிக வலிமையான உச்சக்கணங்களில் தசைகள் முறுக்கி வெளிப்படும் வடிவமாகவே அந்த காலத்து மாஸ்டர்கள் வனைந்திருக்கிறார்கள். அந்த ஒருமையும் தீவிரமுமே அழகாக வெளிப்படுகிறது.

ஆம் வலிமையான அனைத்துமே அழகானவை. ஆபத்தாக அராஜகமாக இருக்கும்போதும் அழகானவை. நாகப்பாம்பின் படம் அழகானது. பாயும் புலியின் இறுகிய தசைகள் அழகானவை. இரவின் அத்தனை மர்மங்களும் அழகானவை. அதைத்தான் சப்ளைம் என்கிறோம் அல்லவா? அதன் ஆபத்தை மீறியும் அதன் அழகில் என் மனம் லயிக்கும் கணம் நான் தூய ஒன்றை காண்கிறேன். அங்கில்லாமல் ஆகிறேன், உயர்த்தப்படுகிறேன். இயற்கையின் முன்னாலும் பெருங்கலைகள் அளிக்கும் தூய அனுபவம் முன்னாலும் என் உள்ளம் ஸ்தம்பிப்பதை எப்போதும் ஓர் உயர்ந்த நிலை என்றே அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

அது ஓர் ஆன்மீகமான நிலை தான் என்றால் அந்த ஆன்மீகத்துக்கும் கிறிஸ்துவின் ஆன்மீகத்திற்கும் என்ன வேறுபாடு?

*

வலிமையில் ஆன்மீகம், அராஜகம் இரண்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.

என் நண்பன் சொன்னது போல் வலிமையும் அராஜகமும் பல சமயம் ஒன்றிப்போகத்தான் செய்கின்றன. ரோமானிய இடிபாடுகளை சொன்னான். அவற்றை பூதங்கள் கட்டியது என்று மத்தியக்கால ஐரோப்பியர்கள் எண்ணியதாக ஒரு கூற்று உண்டு. எனக்கு புனித பீட்டர் தேவாலயத்தைக் கண்டபோதும் அதே உணர்வு தான் ஏற்பட்டது. இது ராட்சசர்கள் கட்டிய கூடம் என்று. அதன் பூதாகர நிர்மாணத்தில் என் தேவனை என்னால் காண முடியவில்லை. அது ரோம் நகரின் இயல்பு. ரோமின் அமைப்பில், அதன் கலை வெளிப்பாடுகளில், அந்த ராட்சசத்தனம் கண்டிப்பாக உள்ளது.

அந்த இணைப்பை உணர்ந்தபோதெல்லாம் நானும் அசௌகரியம் அடைந்திருக்கிறேன். மானுட மனத்தில் அதிநிலை வெளிபட்ட மனங்கள் பலதும் ஃபாசிசத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளது என்ற அசௌகரியமான வரலாற்றுப் பாடம் கண் முன்னால் உள்ளது. ஆகவே தான் நண்பனின் தடித்தனமான “ஆட்டிடியூட்” என்று நான் உணர்ந்ததை மீறி அவன் சொன்ன புள்ளியோடு இவ்வளவு தீவிரமாக மல்லுக்கட்டுகிறேன்.

உண்மையைச் சொன்னால் ரோமின் அந்த ராட்சசத்தனம் எனக்குள் இரண்டு எதிரெதிரான உணர்வுகளை மாறி மாறித் தீண்டியது. ஒரு பக்கம் அந்த அப்பட்டத்தன்மை, அராஜகமான அளவிலான மிகை வெளிப்பாடு, என்னை அருவருக்கவே செய்தது. எத்தனை நிர்மாணங்கள் எத்தனை கட்டடங்கள் எத்தனை இடிபாடுகள். பிளந்து ரத்தம் வழிகிற காயத்தோடு மல்லாந்து விழுந்து கிடக்கும் பூதாகர உடல் போல அந்நகர் தோன்றியது.

ஆனால் மறுப்பக்கம் அதன் அளவும் எடையும் வயதும் “இதோ நான்” என்ற கம்பீரமும் என்னை ஸ்தம்பித்து நிலையிழக்கச் செய்தது. எத்தனை பார்த்துவிட்டது. எவ்வளவு பெரிய சாட்சி. மகத் என்ற வார்த்தை எனக்குள் விழுந்துகொண்டே இருந்தது. Magnificent. எத்தனை மகத்தானது. எத்தனை மகத்தானது.

விவிலிய மரபில் நகரங்களை பரத்தையர் என்று கூறும் வழக்கமிருந்ததாக பின்பு வாசித்தேன்.

*

இதுவரை சொன்னதை தொகுத்து சொல்வதென்றால் –

கிரேக்க-ரொமானிய மரபையும் அதன் வரலாற்றையும் கலைச்செல்வங்களையும் அறியும் பிரதானமான நோக்குடன் நான் ரோம் போனேன். அதன் வழியாக மனிதனை, ‘மானுடம்’ என்று நான் கூட்டாக சொல்லும் ஒன்றை புரிந்துகொள்ள எண்ணினேன். “We are all pilgrims in search of Rome” என்று கதே சொன்ன ஒரு வாக்கு உண்டு. அவர் “We” என்று கலைஞர்களை சொல்கிறார். பழங்கால தீர்த்தயாத்திரீகர்கள் புனிதர்களின் relic-களை தரிசிக்கச் செல்வது போல் ஒரு கலை மாணவியாக நான் ரோமின் ஆன்மாவை அதன் கலை வெளிப்பாடுகள் வழியாக தரிசிக்கச் சென்றேன். அந்த நகரின் பழமையை அனுபவ ஆழத்தை தொட்டுணர முற்பட்டேன்.

அங்கே நண்பன் கேட்ட கேள்வி என்னை நிலையிழக்கச் செய்தது. அவன் கேள்வி கலையின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கியது. அவன் மானுடத்துக்கு எந்த கலை அறிவியல் அரசியல் தரிசனத்தை விட கிறிஸ்துவின் தரிசனமே முக்கியமானது என்றான். கலை உட்பட மானுடத்தில் மற்ற மேதமைகள் அராஜகங்களையே உருவாக்கும் என்றும் கிறிஸ்துவின் தரிசனமே (அல்லது அதற்கு நிகரான ஓர் ‘ஆன்மீகமே’) இறுதிச்சொல்லாக மீட்புக்கு வழிவகுக்கும் என்றான்.

இதில் ‘ஆன்மீகம்’ என்ற விஷயமே என்னை தொந்தரவு செய்கிறது. எனக்குத் தெரிந்த ஆன்மீகம் கலை வழியாக அழகு வழியாக வெளிப்படும் ஒன்று. கிறிஸ்துவின் தரிசனத்தையே கூட நான் கலை வெளிப்பாடுகள் வழியாகவே அடைந்தேன்.

அப்படி இருக்க ஆன்மீகமாகச் செல்ல அப்படி இரண்டு பாதைகள் இருப்பதாக சொல்லப்படுவது – அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தா பயணங்கள் என்று உணர்த்தப்படுவது – என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவற்றை ஒருங்கிணைந்து புரிந்துகொள்ள வழி உள்ளதா என்ற கேள்வி நோக்கி நகர்த்துகிறது.

நண்பனின் சிந்தனைப் பாணியில் எப்போதுமே ஓர் இறுக்கத்தை உணர்ந்ததாக சொன்னேன் அல்லவா? அவன் கேள்வியே அந்த இறுக்கத்தின் வெளிப்பாடென இப்போது தோன்றுகிறது. அந்த இறுக்கத்தை புரிந்துகொள்வதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

அந்த சிந்தனை முறையை ஒருவித மரபுவாதம் (traditionalism) என்று தான் சொல்ல வேண்டும். மதம் சார்ந்த ஆசாரவாதம் அல்ல நான் சொல்வது. மிகக்கூர்மையான, தர்க்க ஒழுங்குடைய சிந்தனை. ஆனால் ஓர் இறுகிய தன்மை உடையது.  அது கவிதையின் உண்மையை சந்தேகிக்கும் பியூரிட்டன் நோக்கு என்று சொல்லலாம். தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றை கூர்மையாக சொன்னால் ஏற்றுக்கொள்ளும். உருவகமாக, கவித்துவமாக ஒன்றை வெளிப்படுத்தினால் அதை அதன் முழுமையில் ஏற்றுக்கொள்ளாது. வெட்டிப் பிளந்து ஆராய முற்படும். சில சமயம் சிந்தனையில் கவித்துவமான ஒரு தாவல் வழியாக மேலும் விரிவாக ஒன்றின் தரிசனம் நமக்கு அமையப்பெறும் அல்லவா? அதை இவ்வகை சிந்தனை ஏற்றுக்கொள்ளாது. எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கும். இந்த ‘கவிதைச்சந்தேகப்’ போக்கு மரபுவாதிகளிடம் மட்டும் அல்ல, யோசிக்கையில் நவீன அறிவியல்வாதிகளிடமும் அநேகம் உள்ளது. நண்பனின் கூற்று எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்று சற்று உணர முடிகிறது.

*

இந்த போக்கை இந்தியச் சிந்தனையாளர்களிடமும் வேறு வகையில் உணர்ந்திருக்கிறேன்.

இந்தியாவில் பெரும்பாலும் ‘ஆன்மீகம்’ என்று பேசுவோர் தூய மனம் பக்தி சரணாகதி என்றோ அல்லது தத்துவம் தர்க்கம் தியானம் என்றோ அதை வரையறுப்பதை கண்டிருக்கிறேன். இன்று காலை கூட ஒரு சாமியார் ‘அன்வய-வியதிரேக’ தர்க்கத்தை தியானிப்பது வழியாக எப்படி விடுதலை அடைய முடியும் என்று போதிப்பதை காதுபோக்கில் கேட்டேன். எது இவ்வுலகத்திலானது, எது நிரந்தரமானது என்று பிரித்தறியும் முறை என்று அவர் சொன்னார். அந்த வழி என்பது ஒவ்வொரு நொடியும் பூரண போத விழிப்போடு ரேசர் பிளேடை வைத்து கோடு போட்டுக்கொண்டே இருப்பது என்று தோன்யது.

அப்படிப்பட்ட முறைகளை நான் சந்தேகிக்கவில்லை. அவை மெய்மையை பகுத்தறிகின்றன என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவற்றை நான் அறிந்த கலையின் உயர்வுகளோடு எப்படி இணைத்துக்கொள்வது?

*

இன்னொரு சாமியாரிடம், மற்றொரு சமயத்தில், நான் கேட்டேன். நீங்கள் இலக்கியம் வாசித்ததுண்டா என்று. அவர், “நான் என் பதினாறாம் வயதில் தாகூரில் கோரா நாவலை வாசித்தேன். அதை வாசித்து ஒரு வாரம் நான் தூங்கவில்லை. அந்த நாவலின் துக்கங்களையும் சந்தோஷங்களையும் நான் எனக்குள் மீண்டும் மீண்டும் நடித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னால் அதிலிருந்து விடுபடவே முடியவில்லை. பிறகு தோன்றியது. இந்த உலகத்தில் இத்தனை நடிப்புகளைக் கடந்து செல்லவேண்டியவன் அதன் மாயைகளிலிருந்து விடுபட வேண்டியவன் மேலும் நடிப்புகளை தன் மேல் சுமத்திக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று. அதன் பிறகு நான் இலக்கியம் படிக்கவில்லை,” என்று சொன்னார்.

*

எனக்கு இவ்வாரு தோன்றுகிறது.

தர்க்கம் வழியாகவோ சேவை வழியாகவோ நாம் விலக்கத்தையும் உயர்மனநிலையும் அடையலாம். அகங்காரம் தீண்டாமல் வாழலாம். ஆனால் நம் அனுபவங்களின் சாராம்சத்தை அடையும் அந்த பேரனுபவமானது வெறுமனே ஒரு தர்க்கப் புதிரின் பதிலாக இருக்குமா? அதில் துளிக்கூட உச்ச அனுபவம் – ஒளி, விரிவு, பறத்தல் – இருக்காதா? நம் ஞானியரின் அனுபவங்களை படிக்கையில் அப்படித் தோன்றவில்லை. அதை அவர்கள் ஆனந்தம் என்றே சொல்கிறார்கள். பித்தையும் மாளாக்காதலையும் பேரின்பத்தையும் தான் திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். அந்த பெருநிலைகளை சற்றேனும் நான் அனுபவித்திருக்கிறேன் என்றால் அது கலையின் ஊடாகத் தானே?

சென்ற தத்துவ வகுப்பில் நீங்கள் வேதங்களை பற்றிச் சொன்னதை சிஸ்டீன் தேவாலயத்தின் கூரையைக் கண்டபோது எண்ணிக்கொண்டே இருந்தேன். சிருஷ்டி கீதம் கேட்டபோது ஏற்பட்ட அதே எழுச்சி அங்கே உருவானது. வேதங்களின் எழுச்சி. அங்கே கவிதையும் தெய்வ உணர்வும் பிரபஞ்ச உணர்ச்சியும் வெவ்வேறானது அல்ல. ஒவ்வொரு முறை ஒரு புதிய வேதத்தை இயற்றும் போதும் மனிதன் அந்த ஆதி நிலையை அடைகிறான். அதை நடித்துப்பார்த்து அதுவாக ஆகிறான்.

அந்த எழுச்சி எங்கிருந்து உருவாகிறது?

மண்ணிலிருந்து. கலை பூமியிலிருந்தும் வாழ்க்கையிலிருந்து இயற்கையிலிருந்தும் எழுவது. நம் உச்சங்கள் அனைத்தும் வெளியிலிருந்து வானத்திலிருந்து அருள்பாலிப்புகளாக வருபவையல்ல. பூமியைத் தொட்டு நம் புலன்கள் வழியாக நாம் பெற்றவற்றை வானம் வரை உயர்த்தி ஏற்றும் ஒரு மனப்பாங்கு நம்மில் செயல்படுவதனால் வருவது.

*

இவ்வளவு சொன்ன பிறகு கடைசியாக ஒன்று. இந்த பயணம் வழியாக நான் பெற்ற ஓர் அனுபவம். அதை என்னால் விளக்கவோ ஆராயவோ முடியவில்லை. சொன்னவற்றுடன் தொகுக்க முடியவில்லை. இப்போது நான் முன்வைத்த குழப்பங்களை எல்லாம் மீறிய ஓர் அனுபவமாகவே எனக்குள் அது இருக்கிறது. அதை வெறும் நம்பிக்கையென்றோ கலை உணர்வு என்றோ விளக்க முடியவில்லை. ஆனால் கலையும் அழகுணர்வும் இல்லாதிருந்தால் அந்த அனுபவம் என்னை தீண்டியிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.

எளிய சொற்களில், வெறும் அனுபவமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.

நாங்கள் தங்கியிருந்த விடுதி Saint Maria Maggiore என்ற தேவாலயத்துக்கு மிக அருகே இருந்தது. இந்த தேவாலயம் ரோமில் மேரிக்கென்று கட்டப்பட்ட முதல் தேவாலயம். மைய அமைப்பு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த காலகட்டத்தைச் சேர்ந்த mosaic வகை ஓவியங்களை அந்த தேவாலயத்தில் பார்க்கலாம். பிற்காலத்தில் மேலும் விரித்துக் கட்டப்பட்டது. ரோமில் வீதிக்கு வீதி அப்படி நிறைய மரியன் தேவாலயங்கள் உள்ளன. அவள் அந்நகரின் அரசி போல் வீற்றிருக்கிறாள். எளிய மக்களின் தஞ்சம் அவள்.

ரோமில் மேரியின் வழிபாடு தொடங்கிய வரலாறு சுவாரஸ்யமானது. நான்காம் நூற்றாண்டில் கிறித்துவ மதம் ரோமில் ஓர் வழிப்பாட்டு மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு கிறிஸ்து மனிதனா தெய்வமா என்ற விவாதம் உருவானது. கிறிஸ்துவின் பிறப்பின் இயல்பு என்ன, அவர் பிதாவின் சாரத்தைக் கொண்டு தொடர்பவரா அல்லது தனி இருப்பாக படைக்கப்பட்டாரா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. தெய்வமும் மனிதனும் எப்படி அவனில் இணைந்து இருக்க முடியும் என்று ஆராயப்பட்டது. அவன் ரத்தமும் சதையுமாக உடல் எடுத்துப் பிறந்தான் ஆனால் அவன் தேவனின் சாரத்திலிருந்து வேரல்ல என்று முடிவு செய்யப்பட்டது.

ஐந்தாம் நூற்றாண்டில் அந்த விவாதங்கள் மேரியின் இயல்புகளை நோக்கித் திரும்பின. மேரி இறைவனின் அன்னையா? அல்லது கிறிஸ்து என்ற மனிதனின் அன்னையா? அவள் இறைவனின் அன்னை என்றால் அவள் இயல்பு என்ன? போன்ற கேள்விகள் எழுந்தன. அவளை முக்கால கன்னி என்றும் இறைவனின் தாய் என்றும் வகுத்தார்கள். முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த இறைவிகளின் இயல்புகள் அவளுடன் இணைந்துகொண்டன. அவளை ‘விண்ணக அரசி’ என்று அழைத்தனர். ‘கடல் விண்மீன்’ என்று அழைத்தனர். அவை எகிப்திய இறைவி ஐசிஸின் பட்டங்கள். ஐசிஸும் சேயை கையில் வைத்திருந்த தாய் தெய்வம். விண்ணகத்தை ஆண்டவள்.

மேரி அதன் பின் நட்சத்திரங்களை சூடியவளாக நீல வண்ண ஆடையால் சூழப்பட்டவளாக ஓவியங்களில் தோன்றத் தொடங்கினாள். மேரி எப்போதும் நீல ஆடைக்குள் சிவப்பு ஆடை உடுத்தியபடி காட்சிப்படுத்தப் பட்டாள். சிவப்பு அவள் மகனான இயேசுவை குறித்தது. நீலத்துக்குள் சிவப்பு என்பது போல் விண்ணக அரசியான அவள் அவனை ரத்தமும் சதையுமாக ஈன்றாள். பிற்கால ஓவிய மரபுகளில் இயேசு அதற்கு நேர்மாராக மேல் ஆடை சிவப்பும் உள் ஆடை நீலமும் என்று தோன்றலானார். அது மனித ரூபத்தில் தோன்றிய இறைவனை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மையில் பிதாவுக்கும் சுதனுக்குமான உறவை கிறித்துவ இறையியல் ஒருவாராக வகுத்துக் கூறிவிட்டது. ஆனால் மாதாவுக்கும் சுதனுக்குமான உறவு இன்னும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. அது விண்ணக இறைக்கும் மண்ணில் நிற்கும் மனிதனுக்குமான (மனுஷிக்குமான) உறவு அல்லவா? எது அவ்வுலகத்திலானது எது இவ்வுலகத்திலானது எது விண் எது மண் என்ற இனிமையான மாயம் மரியத்துக்கும் இயேசுவுக்குமான உறவில் நிறைந்திருக்கிறது. நீலம் சிவப்பு இவ்விறு நிறங்களின் ஊடாட்டமே இறைவனுக்கும் மனிதனுக்குமான மிஸ்டிக்கான உறவை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. இறைவனை ஏந்திய மனிதன் இறைவனுக்குள் சென்று இறைவனாகும் மாய உருமாற்றத்தை சுட்டுகிறது.

ஆனால் இதெல்லாம் பிறகு வாசித்தது. இந்த பயணத்தில் நான் மேரியை அடைந்த விதம் வேறு. ஒரு வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் Saint Maria Maggiore-யில் வெவ்வேறு வழிப்பாடுகளை காணச் சென்றேன். ஒரு பயணத்தில் எப்போதுமே அப்படி அன்றாட வழக்கத்தின் ஒரு துளியை வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும். ஒரு நாவலில் ஒரு சிறிய உபகதை நிகழ்வது மாதிரி அதற்கென்று ஓர் எடுப்பும் தொடுப்பும் முடிவும் உருவாவதை கண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் வேடிக்கை பார்க்கத்தான் சென்றேன். வழிபாடு நடந்த அந்த விசாலமான சாப்பெலுக்குள் ஏனோ என்னால் காலடி எடுத்து வைத்துச் செல்ல முடியவில்லை. இத்தனைக்கும் தேவாலயம் முழுவதும் அலைந்தேன். அதன் கட்டுமானத்தைப் பார்த்தேன் ஓவியங்களை பார்த்தேன் சிற்பங்களைப் பார்த்தேன். ஆனால் சாப்பெலுக்குள் மட்டும் என்னால் புக முடியவில்லை. அது மிகப்புராதானமான, புனிதமான ஓர் அமைப்பாக எனக்குத் தோன்றியது. நம்பிக்கையாளர்களால் அவர்களுடைய நம்பிக்கையின் பெயரால் எழுப்பப்பட்ட கனவு. என் சந்தேகங்களுடன் குழப்பங்களுடன் அந்த பரிசுத்தமான இடத்தில் நுழைய எனக்கு அருகதை இல்லை என்ற எண்ணம் என் கால்களை பாதித்தது. ஒவ்வொரு நாளும் உள்ளே செல்வோம் என்று நினைத்தும் ஒவ்வொரு நாளும் கருப்பு உலோகத்தில் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்ட மூடிய வாயிலுக்கு வெளியே நின்றபடி அதன் இடைவெளிகள் வழியாக உள்ளே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு வழிபாடை பார்ப்பதை விட அங்கே வரும் மக்களை பார்ப்பதே மேலும் சுவாரஸ்யமாக இருந்தது. மூன்றாம் நாளில் அந்த வேளையில் யாரெல்லாம் வருவார்கள் என்று தெரியத் தொடங்கியது. எப்போதுமே இணைந்து வந்து சன்னமான குரலில் பாடும் மூன்று இத்தாலிய முதியவர்கள். சுருட்டைத்தலை மேல் ஊதா நிற மேலாடை போர்த்தி முன்னிருக்கையில் மண்டியிடும் இளம் ஆஃபிரிக்க இனப் பெண். கஞ்சி போட்டு கரகரப்பாக உறைந்த வெள்ளை ஆடைகளும் வெள்ளை ஸ்டாக்கிங்கும் ஷுவும் அணிந்த இரண்டு குண்டான கன்னியாஸ்திரீகள். துதிபாடல் புத்தகங்களை அடுக்கி விளையாடும் சிறுவன். அவனை கோழி போல் மேய்த்த ஃபிலிப்பீனோ தாய். அனைவரையும் தோரணையாக உத்தரவிட்டு அணிவகுத்து அமரச்செய்த ஒரு கருப்பு ஆசாமி, அங்கே அதிகாரப்பூர்வமற்ற சட்டாம்பிள்ளை அவர் தான்

அதில் ஓர் இளைஞன். மிக அழகானவன். ஏதோ அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் போல் எப்போதும் நேர்த்தியான உடையில் இருந்தான். ஒவ்வொரு நாளும் சரியாக நான்கு மணி அடிக்கும் போது அவசரமாக வந்து அலங்கார ஜாலிவேலை செய்யப்பட்ட இரும்பு வாயிலை திறந்து சென்று வழிப்பாட்டில் இணைந்து கொள்வான்.

சில நாட்களில் அவன் இயல்பு பிடிகிடைத்தது திரும்பி அவன் வருவதை எதிர்நோக்கத் தொடங்கினேன். ஓடி வருவான். என்னைக் கடந்து இரும்பு வாயிலைத் திறந்து வாசலில் அவசரமாக குனிந்து மண்டியிட்டு சென்று கடைசி வரிசையின் ஓரத்தில் அமர்வான். அவன் சென்றதும் சட்டாம்பிள்ளை கண் காட்ட நான் மெல்ல வெளியிலிருந்து அலங்கார இரும்பு வாயிலைச் சாற்றிக்கொள்வேன்.

அந்த வாரம் முழுவதும் கடந்தது. ஒவ்வொரு நாளும் நான் வெளியே நின்றபடி வழிபாட்டைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் தன் சுழற்சியை இயல்பாகக் கண்டுகொண்ட ஓர் இயற்கை நிகழ்வு போல வழிபாடு நடைபெற்றது. நட்சத்திரங்களின் நகர்வைப்போல், பருவங்களைப்போல். முதலில் திருவசனம். பிறகு நறுமணப்புகை. இறுதியாக இசை. ‘ஆமென்’ என்றதும் பெருமூச்சுடன் சிலுவையிட்டுக்கொண்டு அந்த வழிபாட்டுச் சுழலிலிருந்து மனிதர்கள் தனித்தனியாகி எழுந்து வந்தார்கள்.

இரவெல்லாம் நான் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறைப்பற்றி அவர்களுடைய சடங்கு முறைகளை பற்றி தத்துவங்களைப்பற்றி வாசித்தேன். ஆனால் மாலைகளில் அந்த அலங்கார இரும்புச்சுவருக்கு வெளியிலேயே நின்றேன்.

இப்படி ஐந்து நாள் கடந்தது.

ஆறாம் நாள். நான்கு மணி அடித்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. பாதிரியார் வழிபாட்டைத் தொடங்கியிருந்தார். சிறு புயல் போல அவன் என்னக் கடந்து ஓடிக் கதவைத் தள்ளி மண்டியிட்டான். அவன் வலக்கையை நெஞ்சில் வைத்துத் தலைகுனிவதைக் கண்டேன். அந்த வேகத்திலும் அந்த பொழுதில் முழு சமர்ப்பணத்தின் தூய அசைவோடு அவன் தலை தாழ்ந்தது. அவன் முழு பிரக்ஞையும் அந்த அசைவில் குவிய அவன் காலடியில் அவன் நிழல் விழுந்தது. அந்த அசைவில் அவன் தலைமுடி மஞ்சள் வெளிச்சத்தில் பொன்னின் ஒளி கொண்டது.

அது ஒரு கணம் தான். பிறகு அவன் எழுந்து ஓரத்து இருக்கைக்குச் சென்றான். இரும்பு வாயிலை மூட உத்தரவு வர எப்போதும் போல் நான் வெளியே நிறுத்தப்பட்டேன்.

ஆனால் அன்றைய நாளில் எல்லாம் மாறிவிட்டிருந்தது. அந்த இளைஞன் மண்டியிட்டபோது அவன் சிறு அசைவு, அந்த அசைவில் அவன் கூந்தல் கொண்ட பொன்னிறம், அந்த பொன்னின் ஒளி அறை முழுதும் நிறம்பி ஒவ்வொன்றையும் தொட்டுக்காட்டியது போல் அன்று நான் கண்ட அசைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமான உருவும் அர்த்தமும் கொண்டிருந்தன.  வசனங்களை சன்னமாக வாசித்த பாதிரியாரின் புராதான லத்தீன் தனித்தனி உருண்ட சொற்களாக செவியில் தோன்றியது. கூழாங்கற்களை கையில் உருட்டுவது போல் சின்னஞ​சிறிய மலைப்பாறைகள் மேல் ஏறி இறங்குவதைப்போல் அவற்றுடன் விளையாட வேண்டும் என்று நா தவிதவித்தது. தூபக்கலம் பெரும் அர்த்தத்தோடு கனமாக அசைந்தது. அதிலிருந்து நறுமண கந்தம் பேரழகுடன் பொழிந்தது. அப்போது படர்ந்த புகையில் தேவாலயமே நிறங்கள் குழைந்து கனவின் சாயல் கொண்டது.

சடங்குகளின் இறுதிக்கட்ட நிசப்தத்துக்குப் பின்னால் பியானோவின் இசை மெல்ல, குழந்தை நடை பழகுவது போல், பரிசுத்தமான படிகள் எடுத்து வைத்தது. குரல்கள் ஒவ்வொன்றாக அதில் சன்னமாக கூடி இணைந்தன. கோடைகாலக் காலையொன்றில் சிற்றோடை பொன்னொளிர ஒழுகிச்செல்வது போல அந்தக் குரல்களின் மனிதர்கள் அனைவரும் அவர்கள் மட்டுமே அறிந்த புனித யாத்திரை ஒன்றில் சேர்ந்து புறப்பட்டார்கள். அவர்கள் தலைகளெல்லாமே அந்த இளைஞனின் அதே அசைவில் குனிந்திருந்தன. ஆம், அதே அசைவு. அதே பொன்னிற அசைவு. ஒரு கணத்தில் அங்கே நான் மட்டும் தான் இருக்கிறேன், அனைத்துமே எனக்குள் நிகழும் என் கனவு என்று தோன்றலானது.

இரவெல்லாம் அதை எண்ணி எண்ணிப் பார்த்தேன். அந்த இளைஞனின் அசைவு ஏன்  அவ்வளவு தெய்வீகமாகத் தோன்றியது? அது அவன் அழகினாலோ அது மாதாவின் சன்னிதி என்பதாலோ மட்டும் உருவாகவில்லை. அங்கே தன்னை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த இளைஞனின் உள்ளம் ஓர் உணர்வை அடைந்தது. அந்த சிறு அசைவு அதன் வெளிப்பாடு தான். அதை விட முக்கியமாக அது அவனில் நிகழ அவன் அனுமதித்தான். அது தான் அவன் தெய்வீகம்.

வழிபாட்டுணர்வு என்றால் “நான்” உன்னை வணங்குகிறேன் என்பதல்ல. அதில் “நீ” மட்டும் தான் இருக்கிறாய். நீ, உன் பாதம். இது தலை வைக்கும் இடம் தலை கொடுக்கும் இடம் இங்கே அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதென்ற பிரக்ஞை. அங்கே மண்டியிடாமல் இருக்க முடியாது. மிகச் சுதந்திரமான இயல்பான செயல் அது மட்டும் தான். The most perfect natural freedom. அதை அவன் அடைந்திருந்தான். அது தான் அவன் தெய்வீகம்.

ஆனால் அப்படி தலை வைக்க தலை கொடுக்கும் இடம் எது? அங்கே இருப்பது யார்? யார் அந்த “நீ”? என்னால் அந்தப் புதிரை அவிழ்க்க முடியவில்லை. அப்படியே உறங்கிவிட்டேன்.

ஏழாம் நாள் நான்கு மணிக்கு சற்று முன்னால் தேவாலயம் சென்றேன். இரும்புக்கதவுக்கு வெளியே நின்று கரிய அலங்கார இடைவெளிகள் வழியாகப் பார்த்தேன். வழிபாடுகளுக்கான ஆயுத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. தூபக்கலன் மேஜை மேல் இருந்தது. அதன் சங்கிலிகள் ‘என்னை தூக்கிக்கொள்’ என்பதுபோல் கீழே துவண்டிருந்தன. சாப்பலின் மையமாக பொறிக்கப்பட்டிருந்த பைசண்டைன் பாணி படத்தில் இரவின் ஆகாசத்தை உடுத்தியது போல ஆழமான நீல நிற ஆடையில் மாதாவும் அவர் கரங்களில் ரத்தச்சிவப்பு ஆடையில் சிசுவும் வீற்றிருந்தார்கள்.

அந்த இளைஞன் இன்னும் வர நேரமிருந்தது.

நான் இரும்புக் கதவை மெல்லத் திறந்தேன். எளிதாகத் திறந்தது.

அந்த இளைஞனின் அனுதின காலடிகளில் என் பாதங்களை பதித்து வைப்பது போல வாசலைக் கடந்து நடந்தேன். அவன் தினந்தோரும் மண்டியிடும் இடத்துக்கு வந்தேன். என் கால்கள் மண்டியிட்டன. முகம் கவிழ்ந்தது. இமைகள் மூடின.

ஆம், அவனை நடிக்க முடியுமா என்றே நான் முற்பட்டேன். அவனாக ஆக வேண்டும் என்ற பெரும் விருப்பம் எனக்குள் மூண்டது. அதுவே என் கால்களையும் கைகளையும் இயக்கியது. அவனாக நடிப்பதன் வழியாகவாவது அவன் பார்த்ததை நான் பார்க்க முடியுமா, அந்தத் தொடுகையின் ஒரு கணத்தை அடைய முடியுமா என்று என் உள்ளம் ஏங்கியது. நடித்து நடித்தே அங்கே செல்ல முடியும் வேறு வழியே இல்லை என்ற வலுவான எண்ணமே என்னை அந்த பொழுதில் மிகச்சிறப்பான நடிகை ஆக்கியது. ஆகவே அவனைப்போலவே நுழைந்தேன். மண்டியிட்டேன். முகம் கவிழ்த்தேன். முகம் கவிழ்ந்த அந்தக் கணத்தில் நான் நடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

அந்த இருட்டில் எதையும் பார்க்கவில்லை எதையும் நினைக்கவில்லை. எண்ணமே இல்லை. சுற்றிச் சூழ்ந்து பெரிதாக மிகமிகப் பெரிதாக… எது? நீலம் வானம் நட்சத்திரம். எனக்குள் கண்ணீர் பெருகிப் பெருகி வந்தது.

எதற்காக? எதற்காக இத்தனை பேரழகு? இதை எப்படிச்சொல்வது?

இதோ, இப்படி, நடிப்பை நீட்டிக்கொண்டே, நடிப்பு அழியும் கணங்களுக்காக ஏங்கிக்கொண்டபடி சொல்லிப்பார்க்கிறேன். நடிப்பைத் தவிர இதெல்லாம் பேச என்னிடம் வேறு பாஷை இல்லை.

அன்புடன்

சுசித்ரா

Leave a comment