விண்ணினும் மண்ணினும் (தொடர்)

நீலி பத்திரிக்கையில் காலத்தில் உருவாகி வந்துள்ள பெண் எழுத்து வகைகளை பற்றிய என் கட்டுரைத்தொடர்.

  1. இணைக்கும் கயிறுகள்
  2. கடலாழத்து மொழி

புத்தக பரிந்துரை – மூச்சே நறுமணமானால்

பெருந்தேவி மொழியாக்கத்தில் வந்துள்ள அக்கமகாதேவியின் வசனங்களின் தமிழ் மொழியாக்க நூல் பற்றி என் அறிமுகக் கட்டுரை.

The conflict of values in Ponniyin Selvan – 1 [Film appreciation]

I watched Mani Ratnam’s Ponniyin Selvan – 1 twice with my elderly family members who are fans of the book. They loved it. I did too. We all found the film dreamy, mesmerising and magical. The magic was not just about seeing PS alive on the screen, I realized later. It is how MR has essentialised the book on screen. 

What do I mean by ‘essentialised’? Many people feel that a five-part series is rich material for an OTT series. I am not sure I agree. PS the book has plenty of action, twists and turns but much of it is bloat. It is over-written. It won’t sustain on screen. It will get boring. More importantly, the essential nature of the story might get lost in all the running time.

PS is, at heart, a story about people, ideals and values. It is a story about empire building. The core conflicts of the novel are in the space of values. Take the three main characters. Adithan, Kundavai and Arunmozhi. The king’s three children are three different personalities, representing three different values. Adithan is an egocentric warrior who is driven to conquer and possess.  Kundavai is a traditionalist who wants to keep her kingdom stable and prosperous. Arunmozhi is a man of justice and rare temperance of will. The central conflict of the film exists in the space between these three value systems. This premise is there in the novel. But the film sharpens it so that it is now stark and obvious.

The two parts of the film are balanced accordingly: the first part is all Adithan’s, ending on the terrible high note of the emptiness of his revelry after all his conquests. The second part in contrast begins with Arunmozhi gently refusing the crown in Lanka on grounds of his principles. While the film did not show this, the book mentions that Arunmozhi imported rice from Pazhaiyarai to feed the people he conquered, he didn’t want them to suffer. Kundavai takes equal space between the two halves. She is always worried, moving. Even when she is sitting still you see her mind keenly at work. Sending out her spies, obtaining information, negotiating alliances…

There were couple of Kundavai scenes in the film that I loved. In one scene, she breaks up the nexus of chieftain-kings by tempting them with the possibility of a matrimonial alliance for their daughters with the princes of the land. In another, when she confronts Adithan, it is revealed that it was she who broke him up with Nandini. I am not sure if the scenes are in the book (I don’t recall it) but they were great in the film. It showed the essence of her character. She would rather do what is ‘right’ over anything else, even if it may not be compassionate or just. 

Visually, too, the film now comes back to me as a dream conflict of these values – the virulent reds, browns and yellows of Adithan’s Rashtrakuta, the serene greens and blues of Arunmozhi’s Lanka and the bustling colour, bountiful river and stately buildings of the Chola land. 

That is the question I feel is at the crux of PS. What builds an empire? Ambition and conquest? Stability and tradition? Or justice, compassion and temperance? It is not an easy question to answer. In fact it harkens back to the central questions of the Mahabharatha. 

The epic-like tendency of PS comes from its central engagement with such questions of value, not simply because it depicts war or political intrigue or various lands. It is what makes the book so popular, because despite its frivolous light tone, it sincerely engages with this. It is also why readers of PS are forever charmed by the ‘goodness’ of the book. There is no truly evil character in the book. It has no darkness, no princes plotting to burn their rivals alive. It presents the conflicts of the Mbh with the earnestness of the Ramayana. 

It’s also why PS is not a story like Bahubali that takes grand elements from myth, builds a tale about heroes. Bahubali has no major conflict of values. Bhallaladeva has elements of Ravana, Duryodhana, but while they were noble kings with a single fatal flaw, Bhallaladeva is a cartoonish villain. 

What I thought PS the film did brilliantly (and thus stands apart) was to keep the conflict of values alive. While the plot has Walter Scott-ian parts (like fifty people running around in the dungeons) that add colour, the essential conflict is always sharpened. 

Next question: why is this particular conflict of values between ambition, stability and compassionate justice important? Because that was the central conflict of ideas that built the Chola era. They are the values of Tamil culture as we know it today. 

I am not a serious student of Tamil history yet, my impressions from reading Sangam and post-Sangam literature. There are mighty gory depictions of battle. But alongside, a strong sense of religiosity, community and celebration. And the presence of introspective traditions alongside. Jaina, Bauddha, Kapalika, Lagulisa, Sakta, Vaishnava and Vedic. Our culture was built on the back of all these ideas. A queen like Sembiyanmadevi deciding to renovate a temple or dig a pond over directing those funds towards another conquest is a major cultural decision. 

A popular entertainment film cannot get deep into the history of those decisions. But art always talks about the inherent values at play; PS fictionalizes those values. The direction the film decides to take convinces me of this. The first half ends with AK’s empty conquest. It is a high note. But an even higher note is the end of the second half, the appearance of Oomai Rani/Mandakini, the mystical woman who rescued Arunmozhi from the floods. Readers of the novel know (spoiler!) that she was a woman wronged by the king Sundara Chozhan and (spoiler!) Nandini’s mother. While Nandini herself who faces a similar fate becomes ruthless and power-hungry, Mandakini is like the spirit of Ponni or Kaveri herself, watching over the king and his children. By marking Arunmozhi out as ‘her’ child (hence ‘Ponniyin Selvan’) the story marks out the values he stands for. ஓதிய உடம்புதோறும் உயிர்என உலாய தன்றே, Kamban says – he was another poster child of the Chola era. The king inherits the spirit of the river, spreading and compassionate. Kamban’s epic is a serious treatment of the same values. 

Maniam’s illustration from the novel.

I am able to guess how part two would go, perhaps the first half ending with AK’s assassination, and the second part with Arunmozhi crowning Uttama Chozhan king (Kalki calls Arunmozhi தியாகத்தின் சிகரம், the epitome of sacrifice). Again the same two-part balance between the two characters. But I want to see how this conflict of values set up in the first part plays out in the second part. The characters, their internal changes and what they eventually become. Because it is the story of how we became what we became. 

Fictionalizing history is not showing “what was” – we have no way of knowing “what was”, whatever we might believe today – but trying to intuit how the ideas and values that make us today could have travelled down to us. We have no idea of knowing whether the historic Raja Raja Chozan was an ‘epitome of sacrifice’ – but that doesn’t matter. What matters is that the idea of an ‘epitome of sacrifice’ exists in our culture. The possibility it could have ridden on his back to come down to us exists. The paradox of historical fiction is that when you encounter an artistic moment in it, history itself becomes meaningless. Kings are born to die like bubbles; values endure. That’s what you realize. PS1 the film, while it positions itself as an entertainer, retains that core. 

***

மைத்ரி – முன்னுரை

அஜிதனின் மைத்ரி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை

இயற்கையின் தெய்வீகம்

நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை கண்டபிறகும் அவனுக்குள் தெய்வீகத்தை பற்றிய ஞானம் உருவாகவில்லையென்றால் அவன் மீட்கப்படமுடியாத குருடன். நம் உள்ளங்களில் இந்தக்கணம் பொங்கும் பரவசமே கடவுள்.”

நித்யசைதன்ய யதியின் மாணவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் ஜெயமோகன். அதேபோல அஜிதன் தன் மகன் மட்டும் அல்ல மாணவரும் கூட என்று ஜெயமோகன் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். ஆக குருதி உறவுக்கு அப்பால் குருவழி தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது, நடராஜ குருவில் தொடங்கி அஜிதன் வரை. அதன் செல்வாக்கு அஜிதனின் முதல் நாவலான ‘மைத்ரி’யில் தெரிகிறது. இது முழுக்க முழுக்க இயற்கையின் பேரழகை ஒரு மனித உள்ளம் சந்திக்கையில் உருவாகும் பரவசத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். இயற்கையின் தெய்வீகம் என்று நடராஜ குரு சுட்டிக்காட்டும் பண்பால் நிறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் ‘மைத்ரி’ மிகப்புதுமையான முயற்சி.

அஜிதனை அறிந்த வகையில், அவருடைய நாட்டங்கள் ஒரு புறம் உயர் கலை சார்ந்தவை. குறிப்பாக இசை. அவர் இசைமேதை வாக்னர் மேல் கொண்டுள்ள மாபெரும் ஆராதனையை அவருடன் சற்றேனும் பழகிய அனைவரும் அறிவர். மறுபுறம் கீழை, மேலை தத்துவங்களில் ஆழமான படிப்பு உடையவர். குறிப்பாக ஷோப்பனவரில். அவருடைய விரிந்த கலை-தத்துவார்த்த படிப்புகளின் தாக்கம் இந்த நாவலில் காணக்கிடைக்கிறது.

பொதுவாக தத்துவார்த்தமான தளங்களை ஒரு நாவல் தொட்டுச்செல்லும் போது பல சமயங்களில் அடிவயிற்றில் கல்லை கட்டினாற்போல் தத்துவ மொழியின் கனம் அதில் விழுந்துவிடுகிறது. அப்போது அது அடிப்படையான அனுபவ உணர்ச்சியை சற்று குறைக்கிறது. இந்த நாவலில் அது நிகழவில்லை. ‘மைத்ரி’யின் மிகப்பெரிய பலம் முழுக்கவே புலன்விழிப்பினால், துளித்துளியான அனுபவ சேர்க்கையினால் ஆசிரியர் நமக்கு கதை சொல்வதுதான். ஓங்கும் இமயமலையைக்காணும் பரவசத்தின் வழியே நடராஜகுரு கடவுளை கண்டதுபோல் இந்த நாவல் அளிக்கும் உணர் அனுபவங்களே இதன் ஆழங்களை கடத்துகின்றன.

அதற்கு பெரிய உறுதுணையாக இருப்பது இந்த நாவலில் துடியுடன் வெளிப்படும் ‘இளமை’ என்ற அம்சம். நாவலின் கதைசொல்லி ஹரன் சற்று அறிவுஜீவியான சமகால இளைஞன் ஒருவனின் அமையமுடியாமை, தேடல், கசப்பு, நையாண்டி எல்லாம் வெளிப்படும் கதாபாத்திரம். ஒவ்வொரு கணமும் புலன்களை அகலத் திறந்து சுற்றத்தை துழாவிக்கொண்டே இருப்பவன். அழகுணர்ச்சி, காமம், கற்பனாவாத எழுச்சிகள் கொண்டவன். அதே சமயம் குழந்தைக்கால களங்கமின்மை முற்றாக அழியாத ஒருவன். இவை எல்லாம் அவனில் அலைமோதுகின்றன. இப்படிச்சொல்லலாம், எந்த ஆர்வமும் புலன் கூர்மையும் அழகுணர்ச்சியும் நடராஜ குரு போன்றவரில் கனிந்து ஞானமாகிறதோ, அதே விஷயங்கள் ஹரனில் இளம் ரத்தத்தின் உணர்ச்சிகளோடு கொப்பளிக்கின்றன. இப்படி அலைமோதி நுரைக்கும் இளமையே இந்த நாவலின் துடிப்பான தாளத்தை கட்டமைக்கிறது.

ஹரனில் இந்த வண்ணங்கள் மாறி மாறி வருவது நாவலின் மிக வசீகரமான அம்சங்களில் ஒன்று. உதாரணமாக நாவலில் ஹரன் சௌந்தரியலஹரியை பரவசத்துடன் நினைவுகூரும் ஒரு இடம் வருகிறது. அதற்கு அடுத்த வரியிலேயே ஆதிசங்கரர் மீதான அவனது சிறிய சீண்டல் வெளிப்படுகிறது. சௌந்தரியலஹரிக்கு உரை எழுதிய நடராஜ குருவும் அந்த இடத்தில் சிரித்திருப்பார்.

இறப்பும் பிரிவும் என அகச்சிக்கல்களால் அலைக்கழிக்கப்படும் ஹரன் ஏதோ உள்ளுணர்வால் கங்கையின் ஊற்றுநதிகளில் ஒன்றான மந்தாகினியின் பாதை வழியாக இமயமலை அடுக்குகளுக்குள் ஏறி கேதார்நாத் வரை போக முடிவெடுக்கிறான். வழியில் மைத்ரி பன்வார் என்ற இளம் கட்வாலி பெண்ணை சந்திக்கிறான். அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவாக, அவள் அவனை மலைகளுக்குள் இருக்கும் தன் மூதாதையர்களின் ஊருக்குக் கூட்டிச்செல்கிறாள்.

மலைகள், வானம், பருவம், பூக்கள் மட்டுமல்லாது, அந்த நிலத்தின் மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை என்று அனைத்தையும் ஆசிரியர் துளித்துளியாக இந்த பயணத்திற்குள் கட்டி வைத்திருக்கிறார். விலங்குகளின் பராமரிப்பு, இசை, மேய்ச்சல் நிலமக்களின் வாழ்வியல், உணவு பண்பாடு, பண்டிகைகள், கொண்டாட்டங்கள், குலதேவதா சடங்குகள் என்று ஒரு முழு பண்பாட்டையே படைக்கிறார்.

இந்தக்கதையை ஆழமாக்குவது மூன்று விஷயங்கள். ஒன்று, ஹரனின் இளமை, தீவிரம். இரண்டு, மைத்ரி, அவளுடனான பயணம் வழியே ஹரன் எதிர்கொள்ளும் இயற்கை. மூன்று, இந்தப் பயணத்திற்கு பின்னால் நிகழும் ஆழமான சுயவிசாரணை சார்ந்த பகுதிகள்.

நாவலில் புறப்பயணத்துக்கு நிகராகவே அகப்பயணம் ஒன்றும் நிகழ்கிறது. புறமும் அகமும், இயற்கையும் காதலும், துடைத்துவைத்த கண்ணாடிகளைப்போல் துல்லியமாக ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன.

மேலோட்டமாக இந்த நாவலுக்கு முன்னோடி வடிவங்கள் என தோன்றுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கற்பனாவாத நாவல்கள்தான். கண்டிப்பாக அவற்றின் சாயல் இதில் உள்ளது. கதேயின் ‘காதலின் துயரம்’ (The Sorrows of Young Werther), அலெக்சாண்டர் குப்ரினின் ‘ஒலெஸ்யா’ (Olesya) போன்ற நாவல்களைச் உதாரணமாக சொல்லலாம். அவையும் வயதடைதலை (bildungsroman) சொல்லும் நாவல்களே. ஆகவே அவற்றுடனான ஒப்பீடுகளும் இயல்பானவை தான்.

அந்த நாவல்களிலிருந்து ‘மைத்ரி’ எங்கு வேறுபடுகிறது? ஒன்று, கற்பனாவாத நாவல்களின் முற்றிலும் ஒற்றைப்படையான உணர்வெழுச்சி இதில் இல்லை. உணர்வெழுச்சியை கதைசொல்லியின் அகக்குரலில் வெளிப்படும் தத்துவார்த்தமான மதிப்பீடு சமன்செய்கிறது. அனுபவங்களிலிருந்து சிந்தனைக்கும் இவை இரண்டிலிருந்தும் தரிசனத்துக்குமான  ஒரு பாய்ச்சல் இந்த நாவலில் நடக்கிறது. இரண்டு, இந்த நாவலின் இயல்புவாத யதார்த்தம் இதன் கற்பனாவாதத்திற்கு ஒரு தளத்தை அமைக்கிறதே ஒழிய கற்பனாவாதத்திற்கு எதிராகவோ அதை குலைக்கும் வகையிலேயோ முன்வைக்கப்படவில்லை. ‘கற்பனாவாதத்திற்கு யதார்த்தத்தில் இடம் என்ன’ என்ற கேள்வியை கேட்கவில்லை. நாவல் கற்பனாவாதம், யதார்த்தம் இரண்டையும் தாண்டிய ஒரு ஆன்மீக உன்னதத்தையே எட்ட முயல்கிறது.

அந்த அடிப்படையில் ‘மைத்ரி’யில் ஒரு செவ்வியல் பயண இதிகாசத்தின் தன்மையே மேலோங்கி இருக்கிறது. முக்கியமாக புறப்பயணத்தின் வழியே அகப்பயணத்தை உணர்த்துதல் எனும் அம்சம். இதுவே தொன்மங்களிலிருந்து நவீன கலைஞன் பெறும் படைப்பாற்றல். நோசிகாவை சந்திப்பதன் வழியாக ஒடீசியஸ் உளம் மாறி அமைந்தான். பியாட்ரிஸின் துணையுடன் தாந்தே இன்ஃபெர்னோவில் இருந்து பாரடைஸோவுக்கு எழுந்தார். இந்த நாவலில் மைத்ரியின் இடம் நோசிகாவையும் பியாட்ரிஸையும் ஒத்ததாக இருக்கிறது. நம்முடைய தொன்மங்களில் அர்ஜுனன் இப்படியான பயணங்கள் மேற்கொண்டவன். சௌகந்திக மலரை பெற சென்ற பீமன் மேலும் நெருக்கமானவன். நாவலில் அந்த தொன்மம் ஒரு விதத்தில் மறுஆக்கம் பெறுகிறது. காதலின் பரிசாக நிகழும் அந்த தருணம் நாவலின் உச்சங்களில் ஒன்று.

பயண இதிகாசங்களின் கதாநாயகன் ஒரு கட்டத்தில் தன் அகத்தின் ஓர் அம்சத்துடன் போராடி வென்றால் மட்டுமே மேலே செல்ல முடியும். அது தான் காவிய நியதி. நாவலின் முகப்பாக அமைந்திருக்கும் காஷ்மீரி சைவ கவிஞர் லல்லேஷ்வரியின் வரிகளிலும் அந்தக் கூற்று இருக்கிறது. ஹரன் கதாபாத்திரத்தின் மிகப்பெரிய ஈர்ப்புப் புள்ளியான அவனது இளம் அகத்தின் பற்றிக்கொள்ளும் தன்மையே அவன் போராடி வெல்ல வேண்டியதும் கூட. நாவலின் கடைசி பகுதியில் அது நிகழ்கிறது.

“இமயமலையை காண்கையில் கங்கையில் நீராடுகையில் நம்முடைய பாபங்களெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை வெறும் ஆசாரமல்ல. மலையையும் நதியையும் காணும் போது அதன் விரிவை உள்வாங்க நம் உள்ளமும் விரிகிறது. அப்படி விரியும் உள்ளத்தால் பரம்பொருளை எளிதாக உணர்ந்துவிட முடியும்” என்கிறார் நடராஜ குரு.

ஓரளவுக்கு மேல் இந்த இடங்கள் நாவல் தரும் அனுபவமாகவே எஞ்ச வேண்டும் என்று நினைக்கிறேன். புறவயமாக வகுத்துக் கூறுவது கடினம். சில சாத்தியங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம்.

தேவபூமி என்று அழைக்கப்படும் அந்த நிலத்தில் வேரூன்றிய சைவம் சார்ந்த படிமங்களும் தரிசனமும் நாவலில் வெகு இயல்பாக அமைந்துள்ளன. முக்கியமாக லல்லேஷ்வரியில் ஆரம்பித்து இதில் இடம் பெரும் காஷ்மீரி சைவத்தின் தாக்கம். ஹரனின் பயணத்தை மனிதனுள் உறையும் மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயா ஆகியவற்றை களையும் பயணமாக வாசிக்க சாத்தியம் உள்ளது. காஷ்மீரி சைவத்தின் ‘திரிகா’ தரிசனம் போல அதன் படிநிலைகள் அமைந்துள்ளது. ‘அபரம்,’ ‘பராபரம்,’ ‘பரம்’ என இந்நாவலின் மூன்று பகுதிகளை வாசிக்கலாம். ஆணவ மலமும் கர்ம மலமும் ஒருவனால் சுயமாக கடக்க முடியும், ஆனால் மாயா மலம் கடக்க சக்தியின் அருளாலேயே முடியும் என்கிறது காஷ்மீர சைவம். நாவலில் ஹரன் அதை எதிர்கொள்ளும் தருணம் ‘சப்ளைம்’ஆன பேரனுபவம். அந்த அனுபவத்துக்கு முன் ஒரு சுயமிழப்பு நிலையை எய்துகிறான், அது தன்முனைப்பான சுயம் அழிப்பும் கூட. பனிமலை உச்சியில் ஹரன் கண்டுகொள்வது காஷ்மீர சைவத்தின் ‘பிரத்யபிக்ஞா’ (மறுகண்டடைவு/Re-cognition) என்ற நிலைக்கு மிக நெருக்கமானது. சிவன் தன்னை தான் கண்டடைதல்.

இந்திய நிலத்தின் தொன்மையான தத்துவ தரிசனமான சாங்கியத்தில் தொடங்கி காஷ்மீரி சைவம் வரை நீளும் ஒரு கருத்து உண்டு. அது ‘பிரகிருதி’ என்று சொல்லப்படும் இயற்கையின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் அது மனிதனுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. இதை போகம் என்கிறார்கள். மறுபக்கம் அந்த அனுபவங்களிலிருந்து உருவாகும் சுகதுக்கங்களை நிவர்த்தி செய்து வீடுபேறுக்கு வழி வகுக்கிறது. இதை அபவர்கம் என்கிறார்கள். சாங்கியத்தை பொருத்த வரை போகம்-அபவர்கம், அனுபவம்-மோட்சம், இரண்டையுமே அருள்வது இயற்கை தான். காஷ்மீரி சைவத்தில் பிரத்யபிக்ஞா நிலைக்கு இட்டுசெல்வது சக்திபாதை எனப்படுகிறது. இந்த நாவலின் சக்தி தரிசனம் இயற்கையின் புரிந்துகொள்ளமுடியாத இந்த இருமைநிலையை ஒரு பேரனுபவமாக ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாவலின் இறுதியில் ஹரன் முன் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. எந்த ஆன்மீக அகப்பயணமும் சென்று அடையும் கேள்வி அது. தேடல் அங்கு முடிகிறது. மற்றொன்று துவங்குகிறது.

இந்த உயர்தளத்தில் ஒரு எழுத்தாளரின் முதல் படைப்பு அமைவதென்பது சற்று அபூர்வமானது. அஜிதனுக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் இந்த அழகிய படைப்பின் ஆசிரியரான என் நண்பனை மகிழ்ச்சியும் பெருமிதமுமாக எண்ணிக்கொள்கிறேன். அஜிதன் மென்மேலும் சிறந்த கலை ஆக்கங்களை படைக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சுசித்ரா

பாசல், சுவிட்சர்லாந்து

28.04.2022

மேலங்கி – ஐசக் தினேசன் (மொழியாக்க சிறுகதை)

(வல்லினம் இதழில் வெளியான சிறுகதை)

மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து அல்லோரியின் மாணவர்கள் சிலர் கூடிக்கூடி அழுதார்கள். மற்றவர்கள் சேர்ந்து தங்கள் பிரியத்துக்குறிய ஆசிரியருக்கு விடுதலையும் பழியீடும் வேண்டி புயலில் விண் நோக்கி கை நீட்டும் வெற்றுக்கிளைகளுடைய பெருமரம்போல தங்கள் முறுக்கிய முஷ்டிகளை வான் நோக்கி ஆட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இந்த கொடூரமான செய்தியைப்பற்றி கேள்விப்படாதது போலவும் அப்படியே கேட்டிருந்தாலும் புரியாதது போலவும் இருந்தவன் சீடன் ஏஞ்சலோ சாண்டாசிலியா மட்டும்தான். அவனைத்தான் அனைவருக்கும் மேலாக நேசித்தார் ஆசிரியர். தன்னுடைய மகன் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். சீடர்களில் அவன் மட்டும்தான் ஆசிரியரை ‘தந்தையே’ என்று அழைத்தவன். ஏஞ்சலோ சாண்டாசிலியாவின் மௌனத்தை அவனுடைய சக மாணவர்கள் தாளமுடியாத துயரின் வெளிப்பாடென்றே எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அவனுடைய வேதனையை மதித்து அவனை தனிமையில் விட்டார்கள். ஆனால் ஏஞ்சலோவின் விலக்கத்துக்கான உண்மையான காரணம் அவன் ஆசிரியரின் இளம் மனைவி லுக்ரீசியாவின் மீது கொண்டிருந்த பெரும் மோகம் தான். அப்போது அவர்களுக்கிடையே காதல் முற்றிக் கனியத் தொடங்கியிருந்த வேளை. தன்னை முழுமையாக அவனுக்கு அளிப்பதாக அவள் வாக்குறுதி அளித்திருந்தாள்.

விசுவாசம் மீறிய மனைவியின் தரப்பிலிருந்து ஒன்றைச்சொல்ல வேண்டும். அவளை ஆட்படுத்திய தெய்வீகமான கருணையற்ற வலிமையை அவள் பல காலமாக மிகுந்த கலகத்துடனும் மன அவஸ்தையுடனும் எதிர்த்து நின்றாள். புனிதமான எல்லா நாமங்களையும் சாட்சியாகக் கொண்டு அவள் சத்தியம் செய்திருந்தாள். ஆசிரியர் மகிழாதபடிக்கு வார்த்தையோ பார்வையோ அவர்களுக்கிடையில் எப்போதைக்கும் பரிமாரப்படமாட்டாது என்று தன் காதலனையும் சத்தியம் செய்ய வைத்திருந்தாள். இருவராலும் அந்த சத்தியத்தைக் காக்க முடியாது என்று அறிந்த போது அவனிடம் பாரிஸுக்குப் போய் படிக்கச் சொல்லி கெஞ்சினாள். அவன் புறப்பாடுக்கு எல்லா ஆயத்தங்களும் நடந்தது. ஆனால் அந்த உறுதியையும் கடைப்பிடிக்கமுடியாது என்று புரிந்தபோதுதான் அவள் தன்னைத் தன் விதியின் வசத்துக்கே விட்டுக்கொடுக்க முடிவெடுத்தாள்.

நடுவர் மன்றங்களும் நீதிமான்களும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்தான். ஆனால் நம்பிக்கைமீறிய மாணவனும் அவன் சூழ்நிலையை காரணமாக சுட்டியிருக்கமுடியும். ஏஞ்சலொ அதுவரையிலான தன்னுடைய சிறிய வாழ்வில் பல காதல் விவகாரங்களில் சிக்கியிருந்தான். ஒவ்வொன்றிலும் முழுமுற்றாக தன் காமத்தின் விசைக்கு சரணடைந்திருந்தான். ஆனால் இந்த சாகசங்கள் எதுவுமே அவன் மனத்தில் ஒரு சிறு தடையத்தைக் கூட விட்டுச்செல்லவில்லை. இந்த விவகாரங்களில் ஏதோ ஒன்று அனைத்துக்கும் மேலாக முதன்மையானதாக வேண்டும் என்பது தவிர்க்கமுடியாத விஷயம். அப்படி முதன்மையாகிப்போன காதலியானவள் தன்னுடைய ஆசிரியரின் மனைவி என்பதும் மிக இயல்பான, ஒரு வேளை தவிர்க்கவே முடியாத, விஷயமாகவும் இருக்கலாம். மாணவன் ஏஞ்சலோ தன் ஆசிரியர் லியோனிடாஸ் அல்லோரியை விரும்பிய அளவுக்கு எந்த மனித உயிரையும் விரும்பியதில்லை. அவரைப்போல் எப்போதைக்கும் எந்த மனித உயிரையும் முழுமனதாக ஆராதித்ததில்லை. ஆதாம் கடவுளின் கரங்களால் சிருஷ்டிக்கப்பட்டதுபோல் தன்னுடைய ஆசிரியரின் கரங்களால் தான் சிருஷ்டிக்கப்பட்டதாக ஏஞ்சலோ நினைத்தான். அதே கைகளால்தான் அவன் தன் துணையையும் பெற விதிக்கப்பட்டிருந்தான்.

ஸ்பெயின் ராஜியத்தின் ஆல்பா நகர பிரபு பேரழகர், பேரறிவாளர். அவர் அதிகம் அழகோ அறிவோ இல்லாத சபை பணிப் பெண்ணை மணந்து அவளுக்கு எல்லா வகையிலும் விசுவாசமாக வாழ்ந்தார். இதைக்கண்டு ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய நண்பர்களிடம் பிரபு சொன்னாராம், “ஆல்பா நகரத்தின் சீமாட்டி என்ற பட்டத்தோடு ஒருத்தி இருந்தால் அவள்தான் இந்த உலகத்திலேயே மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக இருப்பாள். சீமாட்டியாக அமர்ந்திருக்கும் அந்தப்பெண்ணின் தனிப்பட்ட அழகுக்கோ அறிவுக்கோ அதனுடன் சம்பந்தம் இல்லை,” என்று. அதேபோலத்தான் நம்பிக்கைமீறிய மாணவனுக்கும். தனக்குள் இருந்த உக்கிரமான காமத்தின் விசையுடன் தனக்கு அனைத்துக்கும் மேலான லட்சியமாக இருந்த உயர்கலை இணைந்தபோது, அதனுடன் ஆசிரியரிடம் அவனுக்கிருந்த தனிப்பட்ட ஆராதனையும் கலந்தபோது அது உருவாக்கிய தீயை அவனே நினைத்தாலும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

இளையவர்கள் இருவரின் இந்த விவகாரத்தில் மூத்த சிற்பி லியோனிடாசுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிடமுடியாது. ஒவ்வொரு நாளும் தன்னுடைய பிரியத்துக்குறிய மாணவனுடனான உரையாடல்களில் அவர் லுக்ரீசியாவின் அழகை பிரத்யேகமாக முன்னிறுத்திப் பேசினார். ‘விளக்குடன் இருக்கும் சைக்கீ’ என்ற அழகான செவ்வியல் சிற்பத்தை அந்த இளம் பெண்ணை மாதிரியாக நிறுத்திச் செதுக்கியபோது அவர் ஏஞ்சலோவையும் தன் அருகே அழைத்துக்கொண்டார். அவனையும் அந்தச் சிற்பத்தை வடிக்கச் சொன்னார். அவன் உளியை தூக்கியபோது அவரே அவனுக்கு அவர்கள் முன் நின்ற உயிரும் மூச்சும் வெட்கமும் கொண்ட உடலின் அழகுகளை எடுத்துறைத்தார். செவ்வியல் கலைச் சிற்பம் ஒன்றின் முன்னால் நிற்கும் பரவசத்தோடும் உத்வேகத்தோடும் இரண்டு கலைஞர்களும் அவள் முன்னால் நின்றனர்.

மூத்த சிற்பிக்கும் இளைய சிற்பிக்கும் இடையே இருந்த இந்த வினோதமான புரிதலை பற்றிய போதம் இருவருக்குமே இல்லை. மூன்றாவது ஆள் ஒருவர் எடுத்து சொல்லியிருந்தாலும் அவர்கள் அதனை கண்டுகொண்டிருக்கமாட்டார்கள். அல்லது ஏதாவது உளருகிறான் என்று நினைத்திருப்பார்கள். அவர்களுக்குள் இப்படிப்பட்ட புரிதல் இருந்ததை அனுமானித்த ஒரே உயிர் அந்த பெண் லுக்ரீசியா மட்டும் தான். கலைஞர்களான ஆண்களின் மனத்தில் உருவாகக்கூடிய ஒரு வகையான விலகிய குரூரத்தை சற்று கிளர்ச்சியுடனும் கலகத்துடனும் அவள் கண்டுகொண்டாள். மிகவும் விருப்பத்திற்குறிய மனிதர்களைக் கூட அப்படித்தான் அவர்கள் அணுகுவார்கள் என்று ஊகித்தாள். தன் மேய்ப்பவனாலேயே கசாப்புக்கு கொண்டுசெல்லப்படும் ஆடு ஓலமிடுவதுபோல் அவளுடைய மனம் அப்போது முற்றான தனிமையில் ஓலமிட்டது.

அன்றாட வாழ்வின் போக்கில் தனக்கு நேர்ந்த சில விசித்திர நிகழ்வுகளை இணைத்து லியோனிடாஸ் அல்லோரி யாரோ தன்னை வேவு பார்க்க பின் தொடர்வதாக அறிந்துகொண்டார். தனக்கு பெரிய இடர் காத்திருக்கிறது என்று புரிந்தது அவருக்கு. அதன் பிறகு தன்னுடைய மரணத்தை பற்றியும், தன்னுடைய கலை வாழ்க்கை முடிவுக்கு வரப்போவதைப் பற்றியும் மட்டுமே அவரால் சிந்திக்க முடிந்தது. அந்த எண்ணங்களால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டார். தனக்கு வரப்போகும் ஆபத்தைப்பற்றி அவர் தன்னைச்சுற்றியிருந்த எவரிடமும் பேசவில்லை. அந்தச்சில வாரங்களில் மனிதர்கள் அனைவரும் அவரிலிருந்து மிகவும் தொலைவுக்கு சென்றுவிட்டதாகவும், ஆகவே காட்சிக்கோண அளவுகளின் விதிப்படி மிகச்சிறியவர்கள் ஆகிவிட்டதாகவும் அவருக்குத் தோன்றியது. அப்போது அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியையாவது முடித்திருக்கலாம். ஆனால் பணியும் கூட ஒரு திசைத்திருப்பலாகவே அப்போது தோன்றியது. அவர் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்னால் தன் தனிமையிலிருந்து வெளியே வந்தார். சுற்றியிருந்த அனைவரிடத்திலும் மிக அன்பாக கனிவாக நடந்துகொண்டார். இத்தருணத்தில் அவர் தன் மனைவி லுக்ரீசியாவை ஊருக்கு வெளியே மலை மேலே திராட்சைத்தோட்டம் வைத்திருந்த தன் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தான் இருந்த ஆபத்தான நிலைமையை பற்றி அவளிடம் சொல்ல அவர் விரும்பவில்லை. இருந்தாலும் அவளை அனுப்ப ஏதாவது காரணம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆகவே அவள் வெளிறி இருந்ததாகவும் அவள் உடல் நலம் தேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் அவளை தோட்டவீட்டுக்கு அனுப்புவதாகவும் அவளிடம் சொன்னார். அது அந்த நேரத்துக்காக உருவாக்கப்பட்ட காரணம் தான். ஆகவே அவள் அவர் சொற்களை தீவிரமாக கேட்டுக்கொண்ட விதம் அவரை புன்னகைக்க வைத்தது.  

அவள் உடனே ஆஞ்செலோவை வரச்சொல்லி தன் கணவரின் முடிவை தெரிவித்தாள். அதுவரை தங்கள் இணைவு எப்படி சாத்தியமாகப்போகிறது என்ற ஏக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த காதலர்கள் இருவரும் இப்போது கண்கள் வெற்றிக்களிப்பில் மின்ன ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.  தங்கள் காதல் எல்லாவற்றையும் தன் வசம் இழுத்து சுற்றி அடுக்கிவைத்துக்கொள்ளும் அரிதான காந்தக்கல் என்றும் இனிமேல் பிரபஞ்சத்தின் சகல சக்திகளும் அவர்களை இணைக்கவே செயல்படும் என்றும் அவர்கள் நம்பத்தொடங்கினார்கள். லுக்ரீசியா முன்பே அந்த தோட்ட வீட்டுக்குச் சென்றிருந்தாள். மலை வழியாக அந்த வீட்டுக்கு ஏறி வர ஒரு ரகசியப் பாதை இருக்கும் விஷயத்தை அவள் ஆஞ்செலோவிடம் சொன்னாள். அந்தப்பாதை வழியாக ஏறி அவன் நேரடியாக அவள் அறையின் சாளரத்துக்குக் கீழேயே வந்துவிடலாம். அந்த சாளரம் மேற்கை நோக்கித் திறந்திருக்கும். வளர்பிறை இரவு என்பதால் அவளால் அவன் உருவத்தை திராட்சைக் கொடிகளுக்கு இடையே கண்டுகொள்ள முடியும். அவன் கீழிருந்து ஒரு கூழாங்கல்லைத்துக்கி மேலே சாளரக்கண்னாடியில் எறிவான். அவள் ஜன்னலைத் திறப்பாள்.

பேச்சு இந்த இடத்தை அடைந்தபோது இருவரின் குரல்களும் இடரின. சமநிலையை மீட்டுக்கொள்ள ஆஞ்செலோ அந்த இரவுப்பயணத்துக்கென்றே பிரத்யேகமாக தன் நண்பனிடமிருந்து வாங்கி வந்திருந்த மேலங்கியை பற்றிச் சொன்னான். ஊதா நிறத்தில் ஆட்டின் மென்முடியால் செய்யப்பட்ட பழுப்பு நிற நூல்வேலைப்பாடுகள் அமைந்த அருமையான மேலங்கி அது. கைகளில்லாத பெரிய சால்வைப்போன்ற அந்த மேலங்கியை தோள் மீது அணிந்துகொண்டால் கண்டாமணி மாதிரி உடலைச்சுற்றி விழும். அவன் பேசப்பேச லுக்ரீசியா கேட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும்  லுக்ரீசியாவின் அறையில் நின்றபடியே தான் பேசினார்கள். அது ஆசிரியரின் பணியறைக்குப் பக்கத்து அறை. நடுவே இருந்த கதவு அப்போது திறந்துதான் இருந்தது. அன்றிலிருந்து இரண்டாவது சனிக்கிழமை இரவு அவர்கள் சந்திப்பது என்று முடிவானது.

இருவரும் பிரிந்தார்கள். அடுத்த ஒரு வாரத்திற்கு எப்படி ஆசிரியரின் மனம் முழுவதும் மரணம் கடந்த காலாதீதத்தின் சிந்தனைகளால் நிரம்பியிருந்ததோ அப்படி இளம் சீடனின் மனம் முழுவதும் லுக்ரீசியாவின் உடலை கொள்வதன் பற்றிய சிந்தனைகளால் நிரம்பியிருந்தது. ஒரு கணம் கூட உண்மையில் அவனை விட்டுப்போகாத அந்த எண்ணம் ஒவ்வொரு கணமும் புதிதென எழுவது போலத் தோன்றியது. மறந்து போன மகிழ்ச்சி ஒன்று திரும்ப நினைவில் எழுவதுபோன்ற தித்திப்பு. “என் சகோதரியே, அன்பே, வெள்ளைப்புறாவே, எனக்காக திறந்துகொள். என் மனம் பனித்துளிகளால் நிறைந்திருக்கிறது. என் கூந்தல் இழைகளில் இரவின் தூரல் எஞ்சியிருக்கிறது. அன்பே, நீ முழுக்க முழுக்க வெண்மையானவள். உன்னில் ஒரு சிறு மருவும் இல்லை. என் தூயவளே! ஆம், அவளுக்குறியவன் நான். என்னுடையவள் அவள்.”

முதல் ஞாயிறு காலை லியோனிடாஸ் அல்லோரி கைதாகி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த வாரம் முழுவதும் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேசாபிமானியான மூத்தவர் பல வாதங்களை முன்வைத்திருக்கலாம். ஆனால் முதல் விஷயம், அரசு அவரைப்போன்ற ஆபத்தான எதிரியை இந்த முறை கண்டிப்பாக ஒழித்துவிடவேண்டும் என்று முடிவாக இருந்தது. இரண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் தான் அடைந்த உன்னதமான மனச்சமநிலையை குலைக்கச் சித்தமாக இல்லை. ஆகவே முதல் நாளிலிருந்தே வழக்கு எப்படி முடிவாகும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தீர்ப்பு வந்தது. அடுத்த ஞாயிறு காலை அந்த மக்களின் தலைமகனாக விளங்கியவர் சிறைச்சுவரோடு முதுகுசாய்த்து நிற்கவைக்கப்படுவார். நெஞ்சில் ஆறு குண்டுகளை பெற்றுக்கொள்வார். குண்டுபட்ட அவர் உடல் உருளைக்கல் பாதையின் மீது சரிந்து விழும்.

வார இறுதியில் அந்த மூத்தக் கலைஞர் தனக்கு பன்னிரெண்டு மணிநேர ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தன்னுடைய மனைவியை சென்று பார்க்க வேண்டும் என்றும் அவளிடம் விடை பெற வேண்டும் என்றும் சொன்னார்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவருடைய சொற்கள் அதை செவிமடுத்தவர்களின் காதுகளிலிருந்து எளிதாக மறையவில்லை.  அந்த மாமனிதருடைய ஆன்மபலமே அதற்குக் காரணம். அவரது அடிப்படையான நேர்மையும் அவர் அடைந்த புகழும் பேரொளியுடன் அவரைச் சூழ்ந்திருந்தது. சாகவிதிக்கப்பட்ட மனிதரே நம்பிக்கை இழந்துவிட்டப் பிறகும் அவர் கடைசி கோரிக்கையை நீதிபதிகள் மீண்டும் மீண்டும் விவாதித்தார்கள்.

கார்டினல் சால்வியாட்டியின் முன்னிலையில் அந்த பேச்சு எழ நேர்ந்தது.

“ஆம், சந்தேகமே இல்லாமல் இந்த இடத்தில் நாம் நெகிழ்ந்து போனால் அது பின்னால் வரும் சந்ததியினருக்கு தப்பான முன்னுதாரணமாக அமையும்,” என்றார் அந்த பெரியவர். “ஆனால் இந்த நாடு அல்லோரிக்கு கடன்பட்டிருக்கிறது. அரச மாளிகையிலேயே அவருடைய சிற்பங்கள் சிலது இருக்கிறதல்லவா? மக்களுக்கு தங்கள் மீதான நம்பிக்கையை அல்லோரி தனது கலையால் பல முறை வலுப்பெற செய்திருக்கிறார். இப்போது மக்கள் அவர் மீது சற்று நம்பிக்கையுடன் நடந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”

அவர் மேலும் யோசித்தார். “மலைகளின் சிங்கம் என்று அவருக்கு ஒரு பெயர் இருக்கிறதல்லவா? அவர் மாணவர்கள் அவர் மேல் ஆழமான பற்று கொண்டுள்ளவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். மரணத்தை விடவும் ஆழமான பற்றை அவர் தன் மாணவர்களில் எழுப்பக்கூடியவரா என்று கண்டுபிடிப்போமே? ஒரு பழைய விதி உள்ளது, அதை இங்கே உபயோகிக்கலாம். தன் இடத்தை எடுத்துக்கொள்ள இன்னொரு மனிதன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் கைதி சிறையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வெளியே போகலாம். சொன்ன நேரத்துக்கு அவர் திரும்பவில்லையென்றால் அவர் இடத்தை எடுத்துக்கொண்டவன் சாகத் தயாராக இருக்க வேண்டும்.”

கார்டினல் தொடர்ந்தார், “போன வருடம் அல்லோரி ஆஸ்கொலியில் இருக்கும் என் இல்லத்தில் சில புடைப்புச்சிற்பங்களை செய்து தர சம்மதித்திருந்தார். அப்போது அவருடன் அவருடைய அழகான இளம் மனைவியும் பேரழகனான இளம் சீடனும் வந்திருந்தனர். சீடனின் பெயர் ஆஞ்செலோ. அல்லோரி அவனை தன் மகன் என்றார். நாம் அல்லோரியிடம் அவருக்கு பன்னிரெண்டு மணிநேர விடுதலை உண்டு என்று சொல்லலாம். அவர் சென்று தன் மனைவியை பார்த்து வரட்டும். ஆனால் அவர் சிறையிலிருந்து வெளியே வரும் அதே சமயத்தில் அந்த இளைஞன் ஆஞ்செலோ உள்ளே போக வேண்டும். பன்னிரெண்டு மணிநேர கெடு முடியும் வேளையில் என்ன நடந்தாலும் அங்கே ஒரு மரணதண்டனை விதிக்கப்படும் என்று மூத்தவர் இளையவர் இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.”

வழக்கத்திற்குப் புறம்பான ஓர் முடிவே இந்தச்சூழ்நிலையில் உகந்ததாக இருக்கும் என்று அங்கே கூடியிருந்த அதிகாரம் படைத்த கணவான்கள் அனைவரும் உணர்ந்தார்கள். அவர்கள் கார்டினலின் யுக்தியை ஒப்புக்கொண்டார்கள். சிறையிலிருந்தவரிடம் அவர் கோரிக்கை ஏற்கப்பட்டதென்றும் என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்றும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. லியோனிடாஸ் அல்லோரி ஆஞ்சலோவுக்கு செய்தி அனுப்பினார்.

இளம் சிற்பியின் சக மாணவர்கள் அந்தச் செய்தியை கொண்டுவந்தபோது அவன் தன் அறையில் இல்லை. நண்பர்களின் துயரத்தை அவன் பெரிதாக கவனிக்கவில்லையென்றாலும் அவர்களின் சோர்வு அவனை பாதித்தது. மொத்த பிரபஞ்சமும் அழகும் ஒத்திசைவும் இணைந்த இயக்கமாக, வாழ்க்கை என்பதே எல்லையற்ற கருணை கொண்ட ஒன்றாக அவனுக்குத் தோன்றிக்கொண்டிருந்த வேளை அது. நண்பர்கள் அவனிடமிருந்து ஒரு மரியாதைக்காக விலகியிருந்தது போல் அவனும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தான். சமீபத்தில் பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட கிரேக்கக் கடவுள் டயோனிஸசின் சிற்பத்தைக் காண அவன் வெகு தூரத்தில் இருந்த மிராண்டாவின் பிரபு மாளிகை வரை நடந்தே சென்றிருந்தான். உலகம் தெய்வீகமானது என்று அவன் அப்போது அடைந்திருந்த தீவிரமான நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் ஓர் ஆற்றல்மிக்கக் கலை படைப்பை அக்கணம் கண்டுவிட அவன் மனம் அவனே அறியாமல் விழைந்திருக்கலாம்.

ஆகவே அவனுடைய சக மாணவர்கள் நெரிசலான சாலையின் மேல் அமைந்திருந்த அவனுடைய சிறிய அறையில் வெகுநேரம் காக்க  நேர்ந்தது. அவன் ஒரு வழியாக திரும்பி வந்தவுடன், நாலா பக்கத்திலிருந்தும் அவர்கள் அவனைச் சூழ்ந்து விஷயத்தை சொன்னார்கள்.

மூத்தவரின் பிரியத்துக்குறியவனான இளைய சிற்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்திருந்தான். அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த சம்பவங்களின் தீவிரத்தை அவன் அதுவரை அறிந்திருக்கவில்லை. செய்தி கொண்டுவந்தவர்கள் அதை மீண்டும் மீண்டும் அவனிடம் சொல்லவேண்டியிருந்தது. விஷயம் அவனுக்குப் புரிந்தபோது சற்று நேரம் துயரம் தாளாது அப்படியே திகைத்து நின்றான். தூக்கத்தில் நடப்பவன் போல தண்டனை எப்போது என்று கேட்டான். கண்ணீர் நிரம்பிய கண்களுடன் நண்பர்கள் பதில் சொன்னார்கள். லியோனிடாசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றதை பற்றியும் லியோனிடாஸ் ஏஞ்சலோவை வரச்சொன்னது பற்றியும் அவர்கள் சொல்லச்சொல்ல இளையவனின் கண்களில் ஒளியும் கன்னங்களில் நிறமும் திரும்பியது. ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை என்று நண்பர்களிடம் கோபமாக கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் உடனே சிறைச்சாலைக்குச் செல்லக் கிளம்பினான்.

ஆனால் தன் அறைவாயிலில் ஒரு கணம் நின்றான். அந்த நொடியின் கனம் முழுவதும் அவனில் சூழ்ந்துகொண்டது. வெகுதூரம் நடந்து வந்திருந்தான். புல்லில் படுத்து உறங்கியிருந்தான். அவனுடைய ஆடைகள் முழுவதும் தூசு படிந்திருந்தன. சட்டைக் கை கிழிந்திருந்தது. ஆசிரியர் முன்னால் அந்த நாளில் அப்படி சென்று நிற்க அவன் மனம் ஏற்கவில்லை. கதவருகே கொக்கியில் மாட்டப்பட்டிருந்த அவனுடைய புத்தம்புதிய மேலங்கியை எடுத்துத் தன் தோள்களில் அணிந்துகொண்டான்.

சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஏஞ்சலோ வரப்போகும் விஷயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவன் மரணதண்டனை விதிக்கப்பட்டவரின் அறைக்கு கொண்டுசெல்லப்பட்டான். கதவு திறக்கப்பட்டது. ஏஞ்சலோ ஓடிப்போய் ஆசிரியர் மேல் விழுந்தான். அவரை இறுகி அணைத்துக்கொண்டான்.

லியோனிடாஸ் அல்லோரி அவனைச் சமாதானப்படுத்தினார். இளைஞனின் மனத்தை நிகழ்காலத் துயரிலிருந்து திசைதிருப்ப அவர் பேச்சை வானத்து நட்சத்திரங்களை நோக்கிக் கொண்டு போனார். மகனிடம் அவர் அதிகமும் வானத்தை பற்றித்தான் எப்போதும் பேசுவது வழக்கம். வானின் அத்தனை ஞானங்களையும் அவர் இளம் மாணவனுக்குப் புகுட்டியிருந்தார். வெகு சீக்கிரத்திலேயே அவருடைய தீர்க்கமான பார்வை மற்றும் தெலிவான ஆழ்ந்த குரல் வழியாக மாணவனை அவருடன் எழும்பச் செய்தார். இருவரும் கைகோர்த்து பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றார்கள். லௌகீக அக்கரைகள் ஏதுமற்ற அந்த உயரமான உலகத்தில் சற்றுநேரம் சஞ்சரித்தார்கள். வெளிர்ந்த இளம் முகத்தில் கண்ணீர் உலர்வதைக் கண்ட பிறகு தான் ஆசிரியர் அவனை திரும்ப பூமிக்குக் கொண்டு வந்தார். சீடனிடம் நீ உண்மையிலேயே இந்தச்சிறையில் இன்றிரவை எனக்காக கழிக்க சித்தமாக இருக்கிறாயா என்று கேட்டார். ஆம், என்றான் ஆஞ்செலோ.

“மகனே, நான் உனக்குக் கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் லியோனிடாஸ். “இந்த பன்னிரெண்டு மணி நேரம் எனக்கு எல்லையில்லா முக்கியத்துவம் கொண்டது. அதை நீ எனக்குத் தந்திருக்கிறாய்.”

“ஆம், ஆன்மாவின் அழிவின்மையை நான் நம்புகிறேன்,” அவர் தொடர்ந்தார். “ஒரு வேளை அது ஒன்றுதான் நிலையான உண்மையாக இருக்கலாம். தெரியவில்லை. நாளை தெரிந்துவிடும். ஆனால் நம்மைச்சுற்றி இந்த பருப்பொருட்களாலான உலகு இருக்கிறதே, மண்ணும் நீரும் காற்றும் நெருப்புமான உலகம், அது உண்மையில்லையா?  என் உடல்… மஜ்ஜை நிரம்பிய எலும்புகள், நாளங்களில் நிற்காமல் ஓடும் குருதி, ஒளிமிக்க என் ஐந்து புலன்கள் என்றான இந்த உடல், இது தெய்வீகமாது இல்லையா? இதில் நிலைத்த உண்மை இல்லையா? மற்றவர்கள் என்னை முதியவன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் விவசாயக் குடியில் பிறந்தவன். என் மூதாதையர்கள் நிலத்தில் இறங்கி வேலை செய்தவர்கள். எங்கள் மண் எங்களை பேணி வளர்த்த தாதி. கண்டிப்பான, குறைவைக்காமல் அள்ளி அள்ளி ஊட்டிய தாதி. உண்மையைச்சொன்னால் இளமையில் இருந்ததை விட என் தசைகள் இப்போது தான் வலுகொண்டு இருக்கின்றன. என் தலைமுடி இப்போதும் அடர்த்தியாகவே இருக்கிறது. கண்பார்வை சிறிதும் மங்கவில்லை. இனி என் ஆன்மா புதிய பாதைகளை கண்டடைந்து செல்லப்போகிறது. ஆனால் என் உடலின் இந்த வலிமைகளையெல்லாம் நான் இங்கேயே விட்டுச்செல்லப்போகிறேன். என் ஆன்மா கிளம்பலாம், ஆனால் ஒளிவுமறைவுகளற்ற என் திறந்த உடலை இந்த மண், என் பிரியத்திற்க்குறிய காம்பானியா மண், தன் திறந்த கரங்களால் அள்ளிக்கொண்டு தனதாக்கிக்கொள்ளப் போகிறது. என் உடலை மண் பெற்றுக்கொள்வதற்கு முன்னால் நான் இயற்கையை நேருக்கு நேராக ஒரு முறை சந்திக்கவேண்டும். பழைய நண்பர்களுக்கு இடையே நிகழும் கனிவான ஆழமான உரையாடலைப்போல் முழு பிரக்ஞையுடன் என் உடலை நான் அவளிடம் அளிக்க வேண்டும். 

“நாளை நான் என் எதிர்காலத்தை சந்திக்கச் சித்தமாவேன். ஆனால் இன்று இரவு நான் வெளியே செல்ல வேண்டும். சுந்தந்திரமான உலகில் சுதந்திரமாக இருக்க வேண்டும். எனக்கு நன்கு தெரிந்த விஷயங்களின் மத்தியில் இருக்க வேண்டும்.  முதலில் அஸ்தமனத்தின் ஒளி விளையாட்டுகளை காண்பேன். அதன் பின் நிலவின் தெய்வீகமான தெளிவை, அவளைச்சுற்றி ஒளிரும் புராதனமான நட்சத்திரக்கோவைகளை பார்ப்பேன். ஓடும் நீரின் பாடலைக் கேட்பேன். அதன் புத்தம்புதிய ருசியை சுவைப்பேன். இருட்டில் மரங்களின் புற்களின் இனிமையை, கசப்பை அனுபவிப்பேன். கால்களுக்கடியில் மண்ணையும் கல்லையும் உணர்வேன். எத்தனை அற்புதமான இரவு காத்திருக்கிறது எனக்கு! எனக்கென்று அளிக்கப்பட்ட அத்தனை கொடைகளையும் இத்தருணத்தில் நான் நன்றியுடன், ஆழமான புரிதலுணர்வுடன், திரும்பக்கொடுக்க திரட்டிக்கொள்கிறேன்.”

“அப்பா,” என்றான் ஏஞ்சலோ. “மண்ணும் நீரும் காற்றும் நெருப்பும் உங்களை பரிபூரணமாக நேசிப்பதுதான் இயல்பு. அவைகள் உங்களுக்கு அளித்த வரங்களில் ஒரு துளிக்கூட நீங்கள் வீணடித்ததில்லை.”

“உண்மை தான்,” என்றார் லியோனிடாஸ். “எனக்கு எப்போதுமே அந்த நம்பிக்கை இருந்துள்ளது. கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலம் முதலாகவே. கடவுள் என்னை எப்போதும் பரிபூரணமாக நேசித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறார்.

“இப்போது அவகாசம் இல்லை. கடவுளுக்கு என் மேல் உள்ள எல்லையில்லா விசுவாசத்தை நான் எப்படி, எந்த பாதை வழியாக உணர்ந்துகொண்டேன் என்று என்னால் உனக்குச் சொல்லி புரியவைக்க முடியாது. மகனே, பிரபஞ்சத்தை ஆளும் முதன்மையான தெய்வீக விசையே விசுவாசம்தான் என்று எனக்கு இப்போது தெரிகிறது. என் மனசாட்சி மீது சத்தியமாக நான் இந்த மண்ணுக்கும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்க்கைக்கும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். அவற்றிடம் போய் நான் சொல்ல வேண்டும். நம் பிரிவும் ஒரு விசுவாச ஒப்பந்தம் தான் என்று. அதற்காகத்தான் இன்று வெளியே செல்ல அனுமதி கோரினேன்.

“அப்படிச்செய்தேன் என்றால் நாளை மரணத்துடனான ஒப்பந்தத்தையும் அதற்கு பின் வரவிருக்கும் விஷயங்களையும் என்னால் முழுமனதுடன் நிறைவேற்ற முடியும்,” மெதுவாக போசிக்கொண்டிருந்தவர் இப்போது புன்னகைத்தார். “நிறைய பேசிவிட்டேன். என்னை பொறுத்துக்கொள்,” என்றார். “மிகவும் விரும்பும் ஒருவரிடம் நான் பேசி ஒரு வாரம் ஆகிறது”

ஆனால் அவர் மறுபடியும் பேசத்தொடங்கிய போது அவருடைய முகமும் குரலும் மிகத் தீவிரமானதாக இருந்தன.

“மகனே, நீ இத்தனை நாளும் என்னிடத்தில் முழு விசுவாசத்தோடு இருந்திருக்கிறாய். இன்றும் கூட. அதற்கு நன்றி. எத்தனை நீண்ட மகிழ்வான நாட்கள்! இனி வரும் நாட்களிலும் நீ எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இந்த நான்கு சுவர்களுக்குள் வந்த பிறகு ஒவ்வொரு நாளும் உன்னை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். உன்னை பார்க்க வேண்டும் என்று என் மனம் துடித்தபடியே இருந்தது. எனக்காக அல்ல. உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக. ஆம், எத்தனையோ சொல்ல நினைத்திருந்தேன், ஆனால் நேரமில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும். இது மட்டும் தான். மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். மகனே, எப்போதும் அளவீட்டின் தெய்வீக விதியான பொன் விகிதத்தை நீ உன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.

“நான் இந்த இரவை இங்கே கழிப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்,” என்றான் ஏஞ்சலோ. “ஆனால் முன்புபோல் இன்றும் இரவெல்லாம் உங்களுடன் பேசிக்கொண்டே வெட்டவெளியில் நடக்க வாய்த்திருந்தால் இன்னும் சந்தோஷமாகக் கிளம்பியிருப்பேன்.”

லியோனிடாஸ் மறுபடியும் புன்னகைத்தார். “நட்சத்திரங்களுக்கடியில் பனிபடிந்த புல் வேய்ந்த மலைப்பாதைகள் வழியாக நான் இன்று போகப்போகும் வழி என்னை ஓர் இடத்திற்கு மட்டுமே கொண்டு செல்லும். ஒரு முறை, இறுதியாக, இந்த இரவில், நான் என் மனைவி லுக்ரீசியாவுடன் இருக்கப்போகிறேன். ஏஞ்சலோ, ஒன்று சொல்கிறேன். மனிதன்… மனிதன் யார்? கடவுளின் பிரதான சிருஷ்டி. அவரே தன் மூச்சை நாசியில் ஊதி உயிர்பித்த ஜீவன். அந்த மனிதன் மண்ணையும் கடலையும் காற்றையும் நெருப்பையும் அறிந்து அவற்றுடன் ஒன்றாக வேண்டும் என்றே கடவுள் அவனுக்கு பெண்ணை கொடுத்தார். நான் விடைபெறவிருக்கும் இந்த வேளையில் இவை அனைத்துடனான என் ஒப்பந்தத்தை லுக்ரீசியாவின் கரங்களுக்குள் இருந்தபடி புதுப்பித்துக்கொள்வேன்.” அவர் சில கணங்கள் பேசாமல் அசைவில்லாமல் இருந்தார்.

“லுக்ரீசியா இங்கிருந்து சில மைல்கள் தள்ளி ஒரு வீட்டில் என் நண்பர்களின் பாதுகாப்பில் இருக்கிறாள். அவளுக்கு நான் கைது செய்யப் பட்டதோ எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோ தெரியாது. என் நண்பர்களை நான் ஆபத்தில் சிக்கவைக்க விரும்பவில்லை. ஆகவே நான் அங்கே போகும் விஷயம் அவர்களுக்கு தெரியலாகாது. அவளிடம் நான் கல்லரையின் வாசம் வீசும் ஒருவனாக, மரணத்திற்காக காத்திருப்பவனாகச் செல்லவும் விரும்பவில்லை. எங்கள் சந்திப்பு எங்கள் முதல் இரவு போல் இருக்க வேண்டும். இந்தச்சந்திப்பின் ரகசியம் அவளுக்கு ஓர் இளைஞனின் தீவிரத்தையும், ஓர் இளம் காதலனின் மூர்க்கத்தனத்தையும் உணர்த்த வேண்டும்.”

“இன்று என்ன நாள்?” ஏஞ்சலோ திடீரென்று கேட்டான்.

“என்ன நாள் என்றா கேட்டாய்?” என்றார் லியோனிடாஸ். “நித்தியகணத்தை எண்ணி எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும் என்னிடமா அந்த கேள்வியை கேட்டாய்?  எனக்கு இந்த நாள் – இறுதி நாள், அவ்வளவுதான். ஆனால் இரு, யோசிக்கிறேன். குழந்தை, நீயும், உன்னைப்போன்றவர்களுக்கும், இன்றைய நாளை சனிக்கிழமை என்று சொல்வீர்கள். நாளை ஞாயிறு.”

“பாதை எனக்கு நன்றாகவே தெரியும்,” லியோனிடாஸ் தொடர்ந்தார். அப்போது அந்த பாதையில் ஏறிக்கொண்டிருந்தவர் போல் மெல்ல, ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து யோசித்துப் பேசினார். “மலைப்பாதை வழியாக, தோட்ட வீட்டின் பின் பக்கமாக ஏறி, அவள் ஜன்னலை அடைவேன். மண்ணிலிருந்து ஒரு கூழாங்கல்லை பொறுக்கி அவள் ஜன்னல் கண்ணாடி மீது வீசுவேன். அவள் விழிப்பாள். இந்த நேரத்தில் யார் என்று எழுந்து வருவாள். ஜன்னலுக்கு வெளியே என் உருவத்தை கொடிகளுக்கிடையில் கண்டுகொள்வாள். ஜன்னலைத் திறப்பாள்.” மூச்சை உள்ளிழுத்தபோது அவருடைய விரிந்த வலிமைமிக்க மார்பு அசைவு கொண்டது.

“குழந்தை, என் நண்பனே!” லியோனிடாசின் குரல் உணர்ச்சிகரமாக எழுந்தது. “உனக்கு இந்தப்பெண்ணின் அழகு எப்படிப்பட்டது என்று தெரியும். நீ எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாய், எங்கள் உணவு மேஜையில் அமர்ந்து உணவுண்டிருக்கிறாய். அவள் எத்தனை கனிவானவள், குதூகலம் மிக்கவள் என்று நீ அறிவாய். குழந்தைகளுக்கே உரிய நிச்சலனமும், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு களங்கமின்மையும் உடைய மனம் அவளுக்கு. அதுவும் உனக்குத் தெரியும். ஆனால் உனக்குத் தெரியாதது ஒன்று உண்டு. இவ்வுலகத்தில் என்னைத்தவிர யாருக்குமே தெரியாத ஒன்று உண்டு. அவளுடைய உடலும் ஆன்மாவும் எல்லையில்லாமல், நிபந்தனையே இல்லாமல் சரணடையக்கூடியது. அந்தப் பனி எப்படி எரியும் தெரியுமா! உலகத்தில் உள்ள மகத்தான கலைச்செல்வங்கள் அனைத்துமாக அவள் எனக்கு இருந்தாள். ஒரு பெண்ணின் உடலில் அத்தனையும்! இரவுகளில் அவள் அணைப்பின் வழியாக பகலுக்கான என் படைப்பு சக்தி முழுவதையும் பெற்றுக்கொண்டேன். மைந்தா, உன்னிடம் அவளைப்பற்றி பேசும் போதே என் குருதி அலை போல் எழுகிறது. ‘என் சகோதரியே, அன்பே, வெள்ளைப்புறாவே, எனக்காக திறந்துகொள். என் மனம் பனித்துளிகளால் நிறைந்திருக்கிறது. என் கூந்தல் இழைகளில் இரவின் தூரல் எஞ்சியிருக்கிறது. அன்பே, நீ முழுக்க முழுக்க வெண்மையானவள். உன்னில் ஒரு சிறு மருவும் இல்லை. என் தூயவள் நீ!’ சில கணங்களுக்குப் பிறகு கண்களை மூடினார். “நாளை நான் திரும்பி வரும் போதும் என் கண்களை மூடிக்கொண்டே வருவேன்,” என்றார். “வாசலிலிருந்து என்னை இங்கே கொண்டு வருவார்கள். இங்கிருந்து வெளிச்சுவர் வரை ஒரு சிறு நடை. அங்கே என் கண்களை ஒரு துணியால் கட்டிவிடுவார்கள். கண்களால் இனி எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பாதையின் கரிய கற்களையோ, துப்பாகி முனைகளையோ நான் இந்த அற்புதமான கண்களில் கடைசி காட்சியாக விட்டுச்செல்ல மாட்டேன்.” அவர் மீண்டும் அமைதியானர். பிறகு சன்னமான குரலில், “இந்த ஒரு வாரத்தில் அவள் முகத்தை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வர முயற்சித்தேன். காதிலிருந்து தாடை வரை அவள் முகத்தின் வளைவு எப்படி இருக்கும் என்று எனக்குச் சுத்தமாக ஞாபகமில்லை. நாளை அதிகாலை கடைசியாக அதை பார்த்துவிட்டுக் கிளம்புவேன்,” என்றார். “இனி எப்போதும் மறக்க மாட்டேன்.”

அவர் மீண்டும் கண்களை திறந்த போது அவருடைய ஒளிமிக்க பார்வை இளைஞனின் பார்வையை சந்தித்தது. “இத்தனை வேதனையுடன் என்னை பார்க்காதே,” என்றார். “என் மேல் பரிதாபம் கொள்ளாதே. நீ என்னை பரிதாபப்படக் கூடாது. இன்று இரவு நான் பரிதாபத்துக்குறியவனும் அல்ல, உனக்கு அது புரியும் என்று நினைக்கிறேன். மகனே, தவறாக சொல்லிவிட்டேன். நாளை காலை ஒரே ஒரு முறை கண்களை மீண்டும் திறப்பேன். என் பிரியத்திற்க்குறிய உன் முகத்தை பார்ப்பதற்காக. அப்போது உன் முகம் மகிழ்ச்சையாக, அமைதியாக, நாம் இணைந்து பணியாற்றிய போது இருந்தது போலவே இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.”

அந்தத் தருணத்தில் சிறையின் காவலாளி கதவில் பெரிய சாவியை திருப்பி உள்ளே நுழைந்தார். சிறையின் மணிக்கூண்டு கடிகாரம் ஆறு மணி அடிக்க பதினைந்து நிமிடங்கள் இருப்பதாக காட்டியது என்றார். கால் மணி நேரத்தில் இருவரில் ஒருவர் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியே செல்ல வேண்டும். அல்லோரி தான் தயாராக இருப்பதாக பதிலளித்தார். இருந்தும் ஒரு கணம் தயங்கினார்.

“என்னை அவர்கள் கைது செய்தபோது நான் என் பணியறையில் இருந்தேன்,” என்று அவர் ஏஞ்சலொவிடம் சொன்னார். “அப்போது அணிந்திருந்த கசங்கிய பருத்தி ஆடையைத்தான் இப்போதும் அணிந்திருக்கிறேன். ஆனால் மலைகளில் நான் ஏறிச்செல்கையில் காற்றில் குளிர் ஏறும். உன்னுடைய மேலங்கியை நீ எனக்குக் கடனாகத் தருவாயா?”

ஏஞ்சலோ அந்த ஊதா நிற மேலங்கியை தன் தோள்களிலிருந்து எடுத்து ஆசிரியரிடம் கொடுத்தார். ஆசிரியருக்கு அதை கழுத்தில் மாட்டும் கொக்கி அமைப்பு புதுமையாக இருந்தது. தடுமாறிய அவர் விரல்களுக்கு உதவ ஏஞ்சலோ தன்னிச்சையாக அருகே வந்தான். தனக்கு உதவ எழுந்த இளம் கரங்களை ஆசிரியர் பற்றிக்கொண்டார்.

குரல் தழுதழுக்க, “ஏஞ்சலோ, இக்கணம் நீ எத்தனை கம்பீரமானவனாத் தோன்றுகிறாய் தெரியுமா!” என்றார். “உன்னுடைய இந்த மேலங்கி புதியது. விலையுயர்ந்தது. இதை நீ எனக்குத் தந்திருக்கிறாய். என்னுடைய சொந்த ஊரில் ஒரு மணமகன் தன் திருமண நாளன்று இப்படியொரு மேலங்கியை அணிவான்.”

மேலங்கியை முழுவதுமாக அணிந்துகொண்டு புறப்படத் தயாராக அவர் எழுந்தார். “உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாம் ஒரு நாள் இரவு மலைகளில் ஏறி வரும் போது வழி தவறிவிட்டோம். உனக்கு குளிர் தாங்கவில்லை. உடல் சோர்ந்துவிட்டாய். ஒரு கட்டத்தில் அப்படியே விழுந்துவிட்டாய். இனி ஒரு அடி எடுத்துவைக்க முடியாது ஆசிரியரே என்றாய். அப்போது, நீ செய்தாயே இப்போது, அதே மாதிரி நான் என் மேலங்கியை கழற்றி நம் இருவரையும் சுற்றி போர்த்தி இறுக்கிக்கொண்டேன். நாம் அந்த இரவு முழுவதும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கிடந்தோம். என் மேலங்கிக்குள் நீ குழந்தை போல உடனே உறங்கிவிட்டாய். இன்று இரவும் நீ உறங்க வேண்டும்.”

ஏஞ்சலோவுக்கு ஆசிரியர் சொன்ன இரவு நன்றாக நினைவில் இருந்தது. ஆசிரியருக்கு அவனை விட மலையேற்றத்தில் பயிற்சி இருந்தது. ஆம், ஆசிரியருக்கு அவனை விட உடல் வலிமையும் எப்போதும் அதிகம் தான். அன்றிரவு அவன் கைகால்கள் குளிர்ந்து போயிருந்தன. அந்த இரவு முழுக்க இருட்டில் லியோனிடாஸ் அல்லோரியின் பெரிய உடலின் வெப்பத்தை அவன் தன்னுடைய குளிர்ந்த உடல் மீது உணர்ந்துகொண்டே இருந்தான். பெரிய, அன்பான விலங்கின் அருகே இருப்பது போன்ற உணர்வு. அவன் எழுந்த போது சூரியன் உதித்திருந்தது. மலைச்சரிவுகள் அத்தனையும் அதன் கதிர் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. அவன் எழுந்து அமர்ந்து ஒரு நொடி திகைத்து பிறகு கூவினான். “தந்தையே! இவ்விரவு நீங்கள் என் உயிரை காப்பாற்றினீர்கள்!” ஏஞ்சலோவின் நெஞ்சிலிருந்து சொல்லென்றாகாத ஓர் ஓசை வெளிப்பட்டது.

“நாம் இன்று இரவு விடைப்பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை,” என்றார் லியோனிடாஸ். “ஆனால் நாளைக் காலை நான் உன்னை முத்தமிடுவேன்.”

காவலர் சிறைக்கதைவை திறந்தார். அந்த உயரமான நிமிர்ந்த உருவம் நிலைப்படியைத் தாண்டியது. கதவு மீண்டும் சாற்றப்பட்டது. சாவி கதவில் திரும்பியது. ஏஞ்சலோ தனிமையில் விடப்பட்டான்.

முதல் சில நொடிகளுக்கு ஏஞ்சலோ அதை ஒரு மாபெரும் கருணையென்றே எடுத்துக்கொண்டான். ஆனால் அடுத்த நொடியே அவன் உருளும் பாறையால் அடித்து நசுக்கப்பட்டவன் போல் கீழே சுருண்டு விழுந்தான்.

அவன் செவிகளில் ஆசிரியரின் குரல் எதிரொலித்தது. கண்கள் முன்னால் ஆசிரியரின் உருவம். மேல் உலகம் ஒன்றின், கலையின் எல்லையில்லா வெளியின் ஒளி பொருந்திய உருவம். தந்தை அவனுக்குத் திறந்து கொடுத்திருந்த அந்த ஒளியுலகிலிருந்து அப்போது அவன் அந்தர இருளுக்குள் தூக்கி எரியப்பட்டிருந்தான். அவனால் நம்பிக்கைதுரோகம் செய்யப்பட்டவர் அங்கிருந்து போனபிறகு அவன் முழுத்தனிமையில் இருந்தான். அவனால் அப்போது வானத்து நட்சத்திரங்களை பற்றியோ மண்ணை பற்றியோ கடலை பற்றியோ நதிகளை பற்றியோ  அவன் நேசித்த பளிங்கு சிற்பங்களை பற்றியோ யோசிக்க முடியவில்லை. அந்த நொடி லியோனிடால் அல்லோரியே அவனை ரட்சிக்க நினைத்திருந்தாலும் அது சாத்தியமாகியிருக்காது. ஏனென்றால் விசுவாச துரோகம் என்பது முற்றழிவுக்கு சமானமானது.

கல்லெறிப்படுபவன் மீது எறியப்படும் சல்லிக்கற்களைப்போல் ‘விசுவாச துரோகி’ என்ற பதம் அவன் மீது நாலாபுறத்திலிருந்தும் வந்து விழுந்தது. அதன் விசையை தாங்கமுடியாமல் மண்டியிட்டு கைகள் தொங்க அவன் அந்த அடிகளை மௌனமாக பெற்றுக்கொண்டான். மெல்ல புயல்மழை ஓயவும், ஒரு சிறு அமைதி. அப்போது மௌனத்திலிருந்து மென்குரல் ஒன்று காத்திரமாக எழுந்தது. “பொன் விகிதம்” என்று அது சொன்னது. அந்தச்சொற்கள் அவனைச்சுற்றி எதிரொலிக்க ஏஞ்சலோ கைகளை உயர்த்தி காதுகளை அழுத்தி மூடிக்கொண்டான்.

“விசுவாச துரோகம். அதுவும் எதற்கு? ஒரு பெண்ணிற்காக. பெண்! பெண் என்பவள் யார்? கலைஞர்களான நாம் அவளை உருவாக்கும் வரை அவளுக்கு இருப்பு இல்லை. நம்மை அன்றி அவளுக்கு உயிர் இல்லை. உடலைத்தவிர அவள் ஒன்றுமே இல்லை, ஆனால் நாம் அவளை பார்க்கவில்லை என்றால் அவள் உடல் கூட இல்லை. அவள் உயிர் பெற்று வர நம்முடைய ஆன்மாக்கள் நிலைக்கண்ணாடிகளாக வேண்டும் என்று கோருகிறாள். அதில் அவள் தன்னை அழகுபார்த்துக்கொள்வாள். ஆம், நான் அழகுடையவள், நான் இருக்கிறேன், என்பாள். அவள் வாழ வேண்டும் என்றால், அவள் தன்னை அழகுடையவள் என்று நம்பவேண்டுமென்றால், அதற்கு நாம் எரிந்து நடுங்கி மடியவேண்டும். நாம் கண்ணீர் சிந்தும்போது அவளும் கண்ணீர் சிந்துவாள் – ஆனால் மகிழ்ச்சியுடன், ஏனென்றால் நம்முடைய அந்தக் கண்ணீரும் அவள் அழகுக்கான சான்று. அவளை உயிருடன் வைத்திருக்க நாம் ஒவ்வொரு கணமும் எரிந்து துடிதுடிக்க வேண்டும்.”

அவன் சிந்தனைகள் மேலும் தொடர்ந்தன. “அவள் நினைத்தபடி நடந்திருந்தால் என்னுடைய படைப்பு சக்தி முழுவதையும் அவளை படைப்பதில், அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் செலவழித்திருப்பேனே! ஆம், பெருங்கலை என்று ஒன்றை என்னால் எந்நாளும், எப்போதும், உருவாக்கியிருக்க முடியாது. அதை நினைத்து நான் வருந்தி கண்ணீர் உகந்திருப்பேன். அப்போதும் அவளுக்கு புரிந்திருக்காது. “ஏன், உனக்குத்தான் நான் இருக்கிறேனே!” என்று சொல்லியிருப்பாள். ஆனால் அவருடன் இருக்கையில்? அவருடன் இருக்கையில் நான் மகா கலைஞன் அல்லவா!”

அப்போது அவனால் லுக்ரீசியாவை பற்றி நினைக்க முடியவில்லை. தான் விசுவாச துரோகம் செய்த தந்தைக்கு அப்பால் அவனுக்கு அந்த நொடி உலகில் இன்னொரு மனித உயிர் இல்லை.

“நான் ஒரு மகத்தான கலைஞனாக ஆகக்கூடியவனென்று உண்மையிலேயே நினைத்தேனா? பெரும் வல்லமையும் ஒளிர்வும் கொண்ட சிற்பங்களை படைக்கப்போகும் சிற்பியென உண்மையிலேயே எப்போதாவது நம்பினேனா? நான் கலைஞன் இல்லை. ஒரு நாளும் நான் ஒரு மகத்தான சிற்பத்தை படைக்கப்போவதில்லை. ஆம், ஆணித்தனமாக அது எனக்கு இப்போது தெரிகிறது. என் கண்கள் போய்விட்டன. நான் குருடன். நான் குருடன்!”

இன்னும் சற்று நேரத்தில் அவன் எண்ணங்கள் நித்தியகாலத்திலிருந்து சமகாலத்துக்குத் திரும்பி வந்தன.

ஆசிரியர் அப்போது மலைப்பாதை வழியாக நடந்து கொடிகளுக்கு இடையே உள்ள தோட்டவீட்டை அடைந்திருப்பார். கீழிருந்து ஒரு கூழாங்கல்லைத் தூக்கி ஜன்னலின் மேல் வீசி எரிவார். அவள் ஜன்னலை திறப்பாள். ஊதா நிற மேலங்கி உடுத்தி அங்கே நிற்பவனை அவள் எப்போதும் அழைப்பது போல், “ஏஞ்சலோ” என்று அழைப்பாள். அப்போது அவனுடைய பேராசானுக்கு நண்பனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சாவே இல்லாத அந்த மாமனிதனுக்கு எல்லா உண்மையும் புலப்படும். தன் சீடன் தனக்கு விசுவாச துரோகம் இழைத்துவிட்டான் என்று புரிந்துகொள்வார்.

முந்தைய நாள் முழுவதும் ஏஞ்சலோ சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. இப்போது உடல் மிகவும் களைத்து சோற்வுற்றிருந்தது. ஆசிரியர் அவனிடம் “இன்று இரவு நீ உறங்க வேண்டும்” என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. லியோனிடாசின் உத்தரவுகள் – அவற்றை அவன் பின்பற்றினானென்றால் – எப்போதும் அவனை சரியான பாதையிலேயே இட்டுச்செல்பவை என்று அறிந்திருந்தான். அவன் மெல்ல எழுந்து தடுமாறி நடந்து ஆசிரியர் படுத்திருந்த வைக்கோல் பரப்பின் மீது விழுந்தான். படுத்தவுடன் உறங்கிவிட்டான்.

ஆனால் உறக்கத்தில் கனவுகள் வந்தன.

மீண்டும் அவன் முன்னால் அந்த காட்சி விரிந்தது. இந்த முறை இன்னும் தெளிவாக. ஊதா நிற மேலங்கி அணிந்த அந்த பெரிய உருவம் மலைப்பாதையின் மேல் நடக்கிறது. குனிந்து ஒரு கூழாங்கல்லுக்காக துழாவுகிறது. கண்ணாடி ஜன்னலின் மேல் விட்டெறிகிறது. ஆனால் கனவு அவனை அடுத்தக்கட்டத்துக்குக் கூட்டிச்சென்றது. அவன் அந்த ஆடவனின் கைகளில் இருந்த பெண்ணைக் கண்டுவிட்டான். லுக்ரீசியா!

படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். அவன் உலகத்தில் உயர்வான, புனிதமான எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. அப்பட்டமான பொறாமையின் தீ அவன் நாளங்களை சுட்டெறித்துப் பறவியது. அவனை மூச்சடைக்க வைத்தது. சீடனுக்கு ஆசிரியர் மேல் அந்த மகா கலைஞன் மேல் இருந்த பற்று பெருமதிப்பு பக்தி எல்லாம் போனது, அந்தர இருட்டில் மகன் தந்தையை பார்த்து பல்லை கரகரவெனக் கடித்தான். கடந்தகாலம் மறைந்து விட்டது, எதிர்காலம் என்று இனி ஏதும் வரப்போவதில்லை. இளையவனின் எண்ணங்களெல்லாம் அந்த ஒரே புள்ளியில் சென்று குவிந்தன. அங்கே, சில மைல்களுக்கு அப்பால் அங்கே, அந்த அணைப்பு.

அவன் ஒருமாதிரியாக போத நிலைக்கு வந்தான். மீண்டும் உறங்கக்கூடாது என்று நினைத்தான்.

ஆனால் மீண்டும் உறங்கினான். இம்முறையும் அதே கனவு வந்தது. மேலும் உக்கிரமாக மேலும் உயிர்ப்பாக மேலும் நுண்விவரங்கள் கொண்டதாக. இல்லை, இல்லை, இது நான் இல்லை என்று பேரச்சத்துடன் ஒவ்வொன்றையும் நிராகரித்தான். தன் மீதிருந்த சுயகட்டுப்பாடு உறக்கத்தில் அவிழ்ந்த பிறகு தான் அவன் கற்பனையாற்றல் அதையெல்லாம் அவனுக்கு உருவாக்கித்தந்திருக்கக்கூடும்.

மீண்டும் விழித்தான். உடம்பெல்லாம் குளிர்வாக வியர்த்துக் கொட்டியது. அறையின் மறுபுறம் கணப்படுப்பில் சில கரித்துண்டுகள் அப்போதும் ஒளிர்வுடன் எரிந்துகொண்டிருந்தது. எழுந்து அருகே சென்று ஒரு பாதத்தை அதன் மேல் வைத்து அழுத்தி அப்படியே சில நிமிடங்களுக்கு வைத்திருந்தான். கரித்துண்டுகளில் நெருப்பு அணைந்தது.

அடுத்தக் கனவில் அவன் அமைதியாக ஓசையே எழாதவாரு மலைப்பாதையில் ஏறிச்சென்றவரை பின் தொடர்ந்தான். அவர் பின்னாலேயே ஏறி ஜன்னல் வழியாக உள்நுழைந்தான். கையில் கத்தி இருந்தது. அங்கே இருவர் அணைத்தபடி கிடக்க, பாய்ந்து கத்தியை முதலில் அந்த ஆணின் நெஞ்சில் பாய்ச்சினான். இழுத்து அதை அந்தப் பெண்ணின் நெஞ்சில் இறக்கினான். அவர்களின் ரத்தம் சேர்ந்து ஒழுகி ஒன்றாக கலந்து படுக்கைவிரிப்பு மீது சிவந்து கனற்றும் இரும்புத்துண்டால் சுட்ட புண் போல ஆழமான சிவப்புக் கரையாக ஊறியது. அதைப்பார்க்கப்பார்க்க அவன் கண்கள் எரிந்து எரிந்து அவன் குருடானான். பாதிவிழிப்பில் எழுந்து “ஆனால் நான் அவர்களை கத்தியால் குத்தவேண்டியதில்லையே. வெறும் கைகளால் கழுத்தை நெரித்தே கொல்லலாமே,” என்று யோசித்தான். அப்படியாக இரவுக் கழிந்தது.

சிறைக்காவலர் அவனை எழுப்பியபோது விடிந்திருந்தது. “உன்னால் தூங்க முடிந்ததா?” என்றான் அவன். “அந்த கிழட்டு நரியை நீ உண்மையிலேயே நம்புகிறாயா? என்னைக்கேட்டால் அவன் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டான் என்று தான் சொல்வேன். இப்போது மணி ஐந்தே முக்கால். ஆறடிக்கும்போது சிறைப்பாதுகாவலரும் கர்னலும் வருவார்கள். கூண்டில் எந்த பறவை இருக்கிறதோ அதைக் கொண்டு போவார்கள். பாதிரியார் பிறகு தான் வருவார். ஆனால் உன் கிழட்டுச்சிங்கம் வரப்பொவதில்லை. உண்மையைச்சொல், அவர் இடத்தில் நீயோ நானோ இருந்தால் திரும்பி வருவோமா என்ன?”

ஏஞ்சலோவுக்கு சிறைக்காவலரின் வார்த்தைகள் புரிந்தபோது அவன் மனம் விவரிக்கமுடியா மகிழ்ச்சியில் நிறைந்தது. இனி பயப்பட ஒன்றும் இல்லை. கடவுள் அவனுக்கு ஒரு பாதையை திறந்துவிட்டார். மரணம். எளிமையான மகிழ்ச்சியான வழி. ஏஞ்சலோவின் தவிக்கும் மனத்தில் அப்போது ஒரு எண்ணம் மட்டும் மங்கலாக ஓடியது. “சாதாரண மரணம் அல்ல. அவருக்காக சாகப்போகிறேன்!”  ஆனால் அந்த எண்ணம் மறைந்தது. அவன் உண்மையில் அப்போது லியோனிடாஸ் அல்லோரியை பற்றியோ வேறு எந்த மனிதரை பற்றியோ யோசிக்கவில்லை. அவனுக்கு ஓர் எண்ணம்தான். இப்போது, இந்த இறுதிக்கணத்தில், எனக்கு மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது.

அவன் எழுந்து சிறைக்காவலர் கொண்டு வந்த தண்ணீர்க் கிண்ணத்தில் முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டான். தலையை சீவினான். காலில் சூடு பட்ட இடம் எரிந்தது. நன்றியுணர்வால் நிறைந்தான். அப்போது அவன் ஆசிரியர் கடவுளின் விசுவாதத்தை பற்றி சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.

சிறைக்காவலர் திரும்பி அவனைப் பார்த்தார். “நேற்று உன்னைக் பார்த்தபோது நீ இளைஞன் என்று நினைத்தேன்,” என்றார்.

சில நொடிகளில் கற்கள் பதிக்கப்பட்ட வெளிப்பாதையில் காலடியோசைகள் கேட்கத் தொடங்கின. டகடகவென்று ஒரு சத்தம். “வீரர்கள் துப்பாக்கிகளுடன் வருகிறார்கள்,” என்று ஏஞ்சலோ நினைத்தான். கனமான பெரிய கதவு நிறந்தது. இரண்டு சிப்பாய்கள் கைகளை பிடித்து நடத்தி வர அல்லோரி உள்ளே நுழைந்தார். அவர் முந்தைய நாள் மாலை சொன்னதுபோலவே அவர் கண்கள் மூடியே இருந்தன. ஆனால் ஏஞ்சலோ நின்ற திசையை ஊகித்து அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தார். அவன் முன் ஒரு கணம் மௌனமாக நின்றார். பிறகு தன் மேலங்கியின் கொக்கியை அவிழ்த்து, தன் தோள்களிலிருந்து அதை எடுத்து, இளைஞனின் தோளில் அதை போர்த்தி அணிவித்து விட்டார். அந்த சிறு அசைவில் அவர்கள் இருவரும் உடலோடு உடல் அருகே வர நேர்ந்தது. “ஒருவேளை அவர் கண்களைத் திறந்து என்னை பார்க்காமலே செல்லக்கூடும்,” என்று அப்போது ஏஞ்சலோ நினைத்துக்கொண்டான். ஆனால் அல்லோரி என்றாவது சொன்ன சொல்லை தவறவிடுபவரா? மேலங்கியை போர்த்திவிட்டக்கரங்கள் ஏஞ்சலோவின் கழுத்தில் ஒரு கணம் படிந்து அதை சற்று முன்னால் கொண்டுவந்தது. பெரிய இமைகள் நடுங்கி படபடத்து விரிந்தன. ஆசிரியர் மாணவனின் கண்களுக்குள் ஆழமாக பார்த்தார். ஆனால் மாணவனால் பிறகு எப்போதும் அந்த பார்வையை நினைவுகூற முடியவில்லை. அடுத்தக் கணமே அவன் அல்லோரியின் உதடுகளை தன் கன்னத்தில் மேல் உணர்ந்தான்.

“ஓஹோ!” என்றார் சிறைக்காவலர் ஆச்சரியத்துடன். “வாருங்கள்! நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சரி, உங்களுக்கான விருந்து காத்திருக்கிறது. நீ…” என்று ஏஞ்சலோ பக்கம் திரும்பினார். “நீ கிளம்பலம். இன்னும் ஆறு மணி அடிக்க சில நிமிடங்கள் உள்ளன. அதன் பிறகு என் மேலதிகாரிகள் வருவார்கள். பாதிரியார் பிறகு தான் வருவார்.  இங்கு எல்லாமே மிகச்சரியான விதத்தில், அளவெடுத்தது போல் தான் நடக்கும். அதுதானே நியாயம்?”

*

ஆங்கில மூலம்: ஐசக் தினேசென்

தமிழில்: சுசித்ரா

பின்குறிப்பு 

‘Cloak’ என்ற சொல்

ஆங்கிலத்தில் இந்தக் கதையின் தலைப்பு ‘க்ளோக்’ [The Cloak]. அதை ‘மேலங்கி’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். கண்டாமணி போன்ற வடிவம் உடையதால் clocca என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து அந்த வார்த்தை உருவானதாக சொல்லப்படுகிறது. லத்தீனில் clocca என்றால் மணி, ஃபிரெஞ்சு மொழியில் cloche இதற்கு நிகரான சொல். ஆங்கிலத்தில் cloak என்று மாறியது.

ஆனால் மேலைப்பண்பாட்டில் cloak என்ற வார்த்தைக்கு மேலும் ஆழமான பல அர்த்தங்கள் உள்ளன.

குளிருக்கு அணிந்துகொள்ளும் மேலங்கி என்பது அதன் சாதாரண அர்த்தம். 

Cloak என்பது மேலும் மறைவை குறிக்க பயன்படுத்தப்படும் சொல். மறைவுச்செயல்பாடுகளையும் ரகசியங்களையும் குற்றங்களையும் கூட குறிக்கிறது. Under the cloak, cloak and dagger, invisibility cloak போன்ற பதங்களில் இதைக் காணலாம். 

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பொறுப்புகள் கடத்தப்படுவதையும் cloak என்ற படியம் வழியாக உணர்த்தும் வழக்கம் உள்ளது. Passing the cloak, passing the mantle போன்ற சொற்கட்டுகளில் இதைக் காணலாம். விவிலிய பழைய ஏற்பாட்டில் தீர்க்கதர்சி எலியா (Elijah) தன் மாணவன் எலிசா (Elisha) தன் வாரிசாக தொடர்வான் என்பதை குறிக்க தன் மேலங்கியை அவனுக்கு அணிவிப்பார்.

கிறிஸ்துவ மதத்தில் cloak என்பதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. அது எளியவர்களும் பிச்சைக்காரர்களும் அணியும் உடை. ஒரு விவிலியக்கதையில் கிறிஸ்து அந்த வழியாகச் செல்வதை அறிந்து பார்ட்டிமேயஸ் என்ற குருட்டுப் பிச்சைக்காரர் தன் cloak-ஐ கழற்றி வீசி ‘இனிமேல் நான் எளியவன் அல்ல பிச்சைக்காரன் அல்ல, நான் கிறிஸ்துவின் தொண்டன்’ என்று அவரை பின் தொடர்ந்து செல்கிறார். 

எழுத்தாளர் அருண்மொழிநங்கை – வல்லினம் நேர்காணல்

எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களை வல்லினம் இலக்கிய இதழுக்காக நான் எடுத்த நேர்காணல் [நன்றி : வல்லினம்]

*

கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும் மிகமிக நெருக்கமானார்கள்.

எங்கள் உரையாடலின் நீட்சியாக ஒரு நேர்காணல் எடுக்கலாமா என்று கேட்டேன்வாட்சாப்பின் ‘வாய்ஸ் நோட்‘ செயலி வழியாகபத்து நாள் காலத்தில்நாகர்கோயிலில் அவர்களும் பாசலில் நானுமாககிடைத்த நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்குமாகக் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டோம்அவ்வாறு நிகழ்ந்தது இந்த நேர்காணல்.

அங்கே இப்போது பெய்யும் துலாவர்ஷ மழையின் இடைவிடாத ஓசை, ரயில்சப்தங்கள், நாய்களின் குரைப்புகள், வரப்போகும் தீபாவளியின் வெடிச்சப்தங்கள் அருண்மொழியின் குரலுக்குப் பின்னணியாக அமைந்தன. உற்சாகம் குன்றாமல் அருண்மொழி பேசிக்கொண்டே இருந்தார். வெளியே மேகம் படர்ந்த வேளிமலை ஓங்கி நிற்க உள்ளே உணவு மேஜையில் அமர்ந்தபடி அவர் பேசுவதாக ஒரு கற்பனைச்சித்திரம் மனதில் தோன்றியது.

அருண்மொழிநங்கை’ என்பது ஒரு தனித்துவமான பெயர்எதை உத்தேசித்து அப்பா உங்களுக்கு அந்தப்பெயரை வைத்தார் 

‘அருண்மொழிநங்கை’ நிச்சயமாக ஒரு தனித்துவமான பெயர்தான். அப்பா தமிழாசிரியர் அல்ல, சரித்திர ஆசிரியர். ஆனால் தமிழ் மேல் பயங்கரமான பற்று. ராஜராஜசோழனின் இரண்டு மகள்களுக்கு அருண்மொழிநங்கை, அம்மங்கை என்று பெயர். முதல் மகளின் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்தார். ராஜராஜனுக்கே அருள்மொழிவர்மன் என்று பெயர் உண்டே. என் அப்பாவினுடைய தமிழ்ப்பற்றை உலகத்துக்கு பறைசாற்ற ஓர் ஊடகமாக நான் இருந்திருக்கிறேன், இல்லையா? உயிருள்ள ஓர் ஊடகம். [சிரிப்பு] அப்பாக்கள் இப்படித்தான். தங்களுடைய விருப்பங்களைக், கனவுகளை குழந்தைகள் மேல் தானே ஏற்றிவைப்பார்கள்.

ஆனால் சின்ன வயதில் உங்கள் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்.

ஆமாம். சிறுவயதில் என் பெயரின் பழந்தமிழ்த்தன்மை, செவ்வியல் தன்மை, எனக்குப் பிடிக்கவில்லை. சின்ன வயதில் நாம் பெரும்பாலும் நவீனமான பெயர்களைத்தானே விரும்புவோம். ஆறாவது ஏழாவது படிக்கும்போது சுஜாதா கதைகளை மிகவும் விரும்பிப் படிப்பேன்.  சுஜாதா அவருடைய கதாநாயகிகளுக்கு லீனா, அபர்ணா, அனிதா என்று மிக நவீனமான பெயர்களை வைப்பார். அப்படி எவ்வளவோ சின்னச்சின்ன அழகான பெயர்கள் இருக்கும்போது இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக, ஏதோ பிராட்டியார் பெயர் போல் ஒலிக்கும் பழைய பஞ்சாங்கம் மாதிரி ஒரு பெயரை அப்பா நமக்கு வைத்துள்ளாரே என்று இருக்கும். எங்கு போனாலும் பெரிய பெயரைச் சொல்வது கூச்சமாக இருக்கும். அருள்மொழியா, அருண்மொழியா என்று குழப்பம் வரும். என்னப்பா வச்சிருக்கிங்க பெயர், ஒன்றரை முழம் நீளத்துக்கு என்று திட்டுவேன். அப்போது அப்பா, இதன் அருமை உனக்கு இப்போது தெரியாது என்று மட்டும் சொல்லிச் சிரிப்பார்.

கல்லூரி படிக்கும்போது சில பழந்தமிழ் கவிதைகளையும் வாசித்தேன். அப்போது அந்தக் கவிதைகளின் சொல்நயம், ஓசை நயம் – தமிழுக்கென்று ஒரு ஒலிநயம், உச்சரிப்பு அழகு இருக்கும் இல்லையா…  அந்த அழகு என்னை ஈர்த்தது. அப்போது கொஞ்சம் என் பெயர் மேல் ஒரு அஃப்பினிட்டி உருவானது. ஆனால் அதிகமாக விரும்ப, வெளியிலிருந்து ஒருவர், அதுவும் ரொம்பப் பிடித்த ஒருவர் வந்து ‘உன் பெயர் எவ்வளவு அழகான பெயர்’ என்று சொல்லவேண்டியிருந்தது.

ஜெயமோகன் கடிதம் எழுதியபோதா?

ஆம். ஜெயன் எனக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் ‘தூங்கும் நேரத்தைத் தவிர உன் பெயரை மனதில் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன்’ என்று எழுதியிருந்தார். என்ன சொல்ல? அது ஒரு உச்சாடனம். இப்போது நாம் கடவுளை வணங்கும் முறை என்றாலே சகஸ்ரநாமம், ராமஜெயம் என்று பெயர் உச்சரிப்பதுதானே? ‘உன் பெயரை நான் இடைவிடாது உச்சரிக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது எனக்கு ரொம்பவும் சிலிர்ப்பாக இருந்தது.

அப்போது ஒரு கவிதையும் கூட அனுப்பியிருந்தார். எனக்கு அந்தக் கவிதையும் மிகவும் புதுமையாக இருந்தது. பிரமிளினுடைய கவிதை. அந்தக் கவிதையின் பெயரே ‘உன் பெயர்’.

சீர்குலைந்த சொல்லொன்று

தன் தலையைத்

தானே

விழுங்கத் தேடி

என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி

தன்மீதிறங்கும் இப்

பெயரின் முத்தங்களை

உதறி உதறி

அழுதது இதயம்.

பெயர் பின் வாங்கிற்று.

“அப்பாடா’ என்று

அண்ணாந்தேன்…

சந்திர கோளத்தில் மோதியது

எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்

நிலவிலிருந்திறங்கி

என்மீது சொரியும் ஓர்

ரத்தப் பெருக்கு.

பித்துநிலையில எழுதினாற்போல் இருக்கும். பெயரையும் பாம்பையும் மயக்கி எழுதியிருப்பார்.  பெயர் ஒரு விஷமுத்தத்தை நமக்குத் தருகிறது. பாம்பு மாதிரிதான். காதலின் வலியும் இன்பமும் கலந்த உணர்வை அப்படித்தானே சொல்ல முடியும். ‘இன்று, இடையறாத உன் பெயர்’ என்ற பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நிமிஷம் கூட நிறுத்த முடியாத உன் பெயர், உன் நினைவு. எனக்கு அந்தக் கவிதை ரொம்பப் பிடித்திருந்தது; ரொம்பவும் ரசித்தேன்… [சிரிப்பு] அப்புறம் ஆகா, இப்படி ஒரு லவ் லெட்டர் நமக்கு வருதே என்று பெருமையாகக் கூட இருந்தது.

இது 1991-ல் அல்லவா?

ஆம், மார்ச் 1991.

இப்போது இத்தனைக் காலத்துக்குப் பிறகு உங்கள் பெயர் உங்களுக்கு என்னவாகப் பொருள்படுகிறது?

உண்மையிலேயே இப்போது மிகவும் தனித்துவமான, அழகான, உச்சரிக்க இனிமையான பெயராகத்தான் தோன்றுகிறது. என் பெயரை வைத்து நான் பெருமைதான் படுகிறேன். ஒரு குழந்தைக்கு ஒரு பெயர் வைக்கும்போது, அந்தப் பெயரின் அர்த்தம் தரும் கனத்தை அந்தக் குழந்தை சுமக்க முடியாமல் இருக்குமில்லையா? அந்தப் பெயருக்கு, அந்த மொழிக்கு, பயங்கரமான அர்த்தம் இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து வளர்ந்து, அதன் தனித்துவம் மலரும் போதுதான், அந்தக் குழந்தை அந்தப்பெயரை உணர்ந்தறிந்து நிறைக்கிறது என்று தோன்றும். அப்படி நான் வளர்ந்து, என் ஆளுமையெல்லாம் கொஞ்சம்  முதிர்ச்சி ஆகித்தான் என் பெயரும் நிரம்பியது என்று நான் நம்புகிறேன். என் பெயருக்கான அர்த்தம் ‘இனிமையான சொற்கள் நிறைந்த மொழியை பேசும் பெண்’. சமஸ்கிருதத்தில் இதற்கு நிகராக ‘சுபாஷிணி’ என்ற பெயரைச் சொல்வார்கள்.

உங்கள் பெயரை முதன்முறை கேட்டபோது ஒரு எழுத்தாளரின் மனைவிக்கு எத்தனை பொருத்தமான பெயர் என்று நினைத்துக்கொண்டேன்ஒரு எழுத்தாளருக்கும் அது மிகப் பொருத்தமானப் பெயர் என்று இப்போது தோன்றுகிறதுசின்ன வயதில் எப்போதாவது எழுதவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதாஅப்போது ஏதும் எழுதிப்பார்த்ததுண்டா?

‘விட்டு வந்த இடம்’ கட்டுரையில் எழுதியிருப்பேன். ‘நீல ஜாடி’ மொழிபெயர்க்கும்போது எழுதலாமே என்று ஒரு சின்ன ஆசை வந்தது. ஏனென்றால் அவர்களும் [எழுத்தாளர் ஐசக் தினேசென்] ஒரு பெண்தானே? இவ்வளவு அழகாக எழுதியிருக்கிறாரே? நாமும் எழுதிப்பார்க்கவேண்டும் என்று இருந்தது.

அப்புறம் திருமணமான பிறகு ஜெயனும் நானும் நண்பர்களும் சேர்ந்து டி.எஸ்.எலியட்டை மொழிபெயர்த்தபோது எழுதவேண்டும் என்று ரொம்ப ஆசை வந்தது. ஒரு கட்டுரையில் ஓர் எழுத்தாளர் என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் பட்டியல் போடுகிறார். அவன் மரபார்ந்த இலக்கியங்களை படித்திருக்கவேண்டும், தன் மொழியிலும் உலக இலக்கியத்திலும் அதே காலகட்டத்தில் எழுதுகிறவர்களைப் படித்திருக்கவேண்டும், இரண்டு பிராந்திய மொழிகள் தெரிந்திருக்கவேண்டும், உலக மொழி ஒன்று தெரிந்திருக்கவேண்டும் என்றெல்லாம் பட்டியல் போடுவார். அதெல்லாம் படித்தபோது தலை சுற்றியது. எழுத்தாளராக இருப்பது இவ்வளவு கஷ்டமா என்று!

திருமணத்திற்கு முன்னால் ஏதும் எழுதினீர்களாபள்ளிகல்லூரி காலத்தில்?

[சிரிப்பு] ஆமாம், கொஞ்சம். கல்லூரி இரண்டாம் வருடத்திலேயே வானம்பாடி கவிதைகளை வாசித்துக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன். ஓரிரு வரிகள் ஞாபகம் இருக்கிறது. ‘மேய்ச்சல் நிலமாம் உலகத்தில், இறைவன் படைத்தான் மந்தைகளை, மந்தைகள் தனது பசியாற…’ இப்படி வரும். இதே ரிதமிக் பேட்டர்னில். அது ஒரு நீள்கவிதை. இந்த மந்தையிலிருந்து ஒரு குட்டி ஆடு மட்டும் கோபித்துக்கொண்டு போய்விடும். கோபம் என்று இல்லை, அது புரட்சிகரமான ஆடு. வித்தியாசமாக சிந்திக்கும். வித்தியாசமாக சிந்திக்கும் ஆடு வேறு யார்? இந்த அருண்மொழிதான்…

பிறகு சங்கக்கவிதைகளுக்குள் இறங்க ஆரம்பித்தேன். சங்கக்கவிதைகள், பெரியாழ்வார், நம்மாழ்வார் எல்லாம் படிக்கப் படிக்க மொழியினுடைய அழகு தெரிந்து… சங்கக்கவிதை பாணியிலேயே நாம் ஒன்று எழுதிப்பார்ப்போம் என்று நினைத்தேன். ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’  பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன நின் பவளக் கூர்வாய்’ போன்ற அழகழகான வார்த்தைகள் எனக்குள் இறங்கின. அப்படியே குறிஞ்சி திணைக்கு, மருதத்திற்கு, முல்லைக்கு என்று நானாக ஒவ்வொரு திணைக்கும் இரண்டு, மூன்று கவிதைகள் எழுதினேன். சங்கப் பாணி கவிதையில் ஆசிரியப்பா, வெண்பா எதுவுமே வராதே? நம் மனம் போனப்படிக்கு எழுதலாம்.

ஆனால் அதில் நான் எடுத்துக்கொண்ட கான்செப்ட்தான் சரியில்லை போல. அந்தக் கவிதைகளை ஒரு நோட்புக்கில் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஜெயனை மூன்றாவது முறை சந்திக்கும்போது கொஞ்சம் துணிச்சலோடு அந்த நோட்டை எடுத்து  காட்டினேன். ஜெயன் உண்மையிலேயே அவர் சிரிப்பை அடக்கக் கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் முகத்தை பார்த்தபோதே தெரிந்தது. ‘வார்த்தைகள்லாம் நல்லாத்தான் இருக்கு அருணா, ஆனால் கான்செப்ட்தான் கொஞ்சம் பழசுடீÓ என்றார். மெல்லிய சமாதான தொனியில், நான் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதுபோல்தான் சொன்னார். ஆனால் முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டே இருந்தது. அப்போது முடிவு பண்ணினேன், இனிமேல் இந்த டிராக்ல போகக்கூடாது என்று. அது ஒரு கன்னி முயற்சி.

இப்போது ஓர் எழுத்தாளராக உங்களுடைய ஆதர்சங்கள் யார் யார்எழுதும்போது ‘இவர்களைப்போல் ஒரு கதை எழுதிவிடவேண்டும்‘ என்று யாரையேனும் மனதில் நிறுத்திக்கொள்வதுண்டா?

கதை என்றால் சிறுகதையைச் சொல்கிறீர்களா, நாவலையா? நாவலாசிரியர்களில் ஆதர்சங்கள் பலர். சிவராம காரந்த் [மண்ணும் மனிதரும்], எஸ்.எல். பைரப்பா [ஒரு குடும்பம் சிதைகிறது], அதீன் பந்தோபாத்யாய் [நீலகண்ட பறவையைத் தேடி], தாராசங்கர் பானர்ஜி [ஆரோக்ய நிகேதனம்], குரதுலைன் ஹைதர் [அக்னி நதி]. யதார்த்தவாத நாவல்களிலேயே ஒரு விசாலமான காலத்தையும் நிலத்தையும் மக்களையும் அடையாளப்படுத்தியவர்கள் இவர்கள். உலக இலக்கியம் என்றால் எல்லா பெரிய மாஸ்டர்களுமே ஆதர்சம்தான், தல்ஸ்தாய், தஸ்தோயெவெஸ்கி, ஹெர்மன் ஹெஸ், ஹெர்மன் மெல்வில் [மோபி டிக்], கஸாண்ட்சாகிஸ்  எல்லோரும்.

ஜெயமோகன்?

ஜெயமோகன் இதில் விசேஷமான கேட்டெகரி, இப்போதைக்கு அவரை தள்ளி வைத்து விட்டு மற்றபடி என் பொதுவான அபிப்பிராயங்களைச் சொல்கிறேனே.

சரிசிறுகதையில் யாரை பிடிக்கும்நீங்கள் இப்போது எழுதியுள்ள கதைகட்டுரைகளுக்கு முன்னோடியென்று மனதில் யாரையும் நிறுத்தியுள்ளீர்களா?

சிறுகதை என்று எடுத்துக்கொண்டால் தமிழிலேயே மாஸ்டர்கள் இருக்கிறார்கள். புதுமைப்பித்தன் எனக்குத் தீராத ஆச்சரியம் கொடுக்கக்கூடிய ரைட்டர். அவர் முயன்று பார்க்காத வடிவிலான சிறுகதையே இல்லை. ஒரு பக்கம் கயிற்றரவு, கபாடபுரம் மாதிரியான கதைகள். செல்லம்மாள் மாதிரியான கதைகள். அதே சமயம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் மாதிரி கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். பேசுபொருள், யுக்தி, சொல்லும்முறை என்று எல்லாவற்றிலுமே நிறைய வேரியேஷன் காட்டியிருக்கிறார் அல்லவா.

பிறகு, கச்சிதமான, மிகமிக கூர்மையான சிறுகதைகளை எழுதியவர் என்றால் அது அசோகமித்திரன்தான். உலகளவிலுள்ள மாஸ்டர்களுடன் அவரை இணைவைக்கலாம்.  அந்தளவுக்கு பெரிய மாஸ்டர் அவர், என்னைப் பொறுத்த வரை. உண்மையில் அசோகமித்திரன் மாதிரி ஒரு கதை எழுதிவிடுவதுதான் எல்லா எழுத்தாளர்களின் கனவாக இருக்குமென்று நினைக்கிறேன். அவ்வளவு subtle-ஆக, அவ்வளவு நுட்பமாக, கம்மியான வார்த்தைகளை சொல்லி – தீராத வியப்பில்லையா? அப்புறம் திஜா, சுந்தர ராமசாமி, கி.ரா, அழகிரிசாமி இவர்களுடைய சிறுகதைகளும் பிடிக்கும். மலையாளத்தில் பால் சக்காரியா, பஷீருடைய சிறுகதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கன்னடத்துல விவேக் ஷன்பாக்.

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளின் வடிவத்துக்கு நான் இமிடேட் பண்ணும் எழுத்தாளர்கள் என்றால் அதிகமாக பஷீர், அ.முத்துலிங்கம், அசோகமித்திரன். அசோகமித்திரன் பதினெட்டாவது அட்சக்கோட்டில் செகந்திராபாத் நாட்களை எழுதுவாரே? அந்த வகைமாதிரியில்தான் நான் முயன்று பார்க்கிறேன்.

உலகளவில செக்கவ், ரே பிராட்பரி, ரேமண்ட் கார்வர், ஐசக் பாஷெவிஸ் சிங்கர், இடாலோ கால்வினோ, மார்குவேஸ்… மார்குவேஸ் சில நீள கதைகளை சிறப்பா எழுதியிருப்பாரு. இப்பக்கூட நினைவுக்கு வர்ர ஒரு கதை, ‘The Trail of Your Blood in the Snow’. சொல்புதிதில் செங்கதிர் அதை அழகாக மொழிபெயர்த்திருந்தார். ‘உறைபனியில் உன் குருதியின் தாரை’ என்ற பெயரில். பிறகு ஐசக் தினேசனின் fairy-tale பாணியிலான கதைகள், இவ்வளவும் என் மனசுக்கு பிடித்தமானது. ஆதர்சம் என்றால், இந்த பாணியிலெல்லாம் நான் இன்னும் எழுதிப்பார்க்கவில்லை, ஆனால் என் மனதிற்குள் இவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

கதை‘ என்று ஏன் கேட்டேன் என்றால்உங்கள் வலைதளத்தில் இடம்பெறும் கட்டுரைகள் எல்லாவற்றிலும் ஓர் அசலான புனைவுத்தன்மை உள்ளதுநினைவுக்குறிப்புகள், memoirs, என்பதை வெறுமனே சம்பவ அடுக்கு என்று எழுதாமல்ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு சிறுகதையின் வடிவைக் கொடுத்துள்ளீர்கள்இந்தப் புனைவம்சத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

முதல் காரியம், இதை எழுதத்தொடங்கும் போதே என் மனதில் இரண்டு, மூன்று நிபந்தனைகளை நானே போட்டுக்கொண்டேன். முதல் விஷயம் இது அனுபவம், ஆனால் அனுபவம், அனுபவமாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது. இரண்டாவது நிபந்தனை, அருண்மொழியுடைய அனுபவம் வெறுமனே அருண்மொழியின் அனுபவமாக மட்டும் நின்றுவிடக்கூடாது. என்னதான் வட்டாரத்தன்மை இருந்தாலும் ஏதாவது ஒரு புள்ளியில் எல்லாருமே இணைந்து கொள்ளக்கூடிய விதத்தில் அது அமையவேண்டும், உலகளாவிய தன்மை ஒன்று அதில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அப்புறம் இந்த கட்டுரைகளிலேயே மூன்று பேட்டர்ன், மூன்று வகைமைகள் இருக்கு. விட்டு வந்த இடம், கண்ணீரும் கனவும், சின்ன சின்ன புரட்சிகள், மாயச்சாளரம் எல்லாவற்றிலுமே ஒரு பரிணாம வளர்ச்சிய சொல்லியிருக்கேன். இசை ரசனை, வாசிப்பு ரசனை, சினிமா ரசனை எல்லாம் எனக்குள்ள வளர்ந்த பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டுரைகள்ல காட்டியிருப்பேன். அதுப்பக்கறம் இரண்டாவதா, என் மனம் கவர்ந்த ஆளுமைகளைப் பற்றி எழுதினேன். ‘அரசி’யில் என் ராஜம்மா பாட்டி, ராவுத்தர் மாமா, பட்டாணி, ‘நிலை’ வடிவேல் மாமா, இந்த மாதிரி. மூன்றாவது கதை. கதைன்னா, என் அனுபவங்கள்ல ஒரு கதையை புகுத்தி, ஒரு புனைவின் சாத்தியத்தைப் பரிசீலிக்கிற அம்சத்தோடு வந்த கட்டுரைகள்.

வானத்தில் நட்சத்திரங்கள்’ மூன்றாவது வகையான கட்டுரை இல்லையாஅற்புதமான கதைத்தருணம் ஒன்று இருக்குமே அதில்.

ஆமாம், வானத்தில் நட்சத்திரங்களில்ல அது சாத்தியமாச்சு. ஏன்னா அதுல பரிணாம வளர்ச்சி ஏதும் கிடையாது. ஒரு பதினாலு வயசு பெண்ணுக்கும், ஒரு ஒன்பது வயசு பையனுக்கும் ஒரு மிகப்பெரிய வாழ்க்கை அறிமுகமாகுது. அதைத்தான் அது சொல்ல வருது. அதுவரைக்கும் அவங்க கேள்விப்படாத இயேசு என்ற ஒருத்தர் அவங்களுக்கு அறிமுகம் ஆகிறார். ஒரு நாடக வடிவுல ஜீஸசோட எசென்ஸ் அவங்களுக்குள்ள இறங்குற தருணம். அதைச்சொல்லிப்பார்க்கலாம் என்று நினைத்தேன்.

இது ஒரு மூணு நாள் அனுபவம். நாடகத்துக்கு போறதுக்கான தூண்டுதல், அந்த தயாரிப்பு, அங்க போறது, அங்க அடையற அனுபவம், அவ்வளவுதானே. இந்த சம்பவம் இப்படி மூணு நாள்ள நடக்குறதுனால இதில் ஒரு சிறுகதை வடிவம் முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று ஆசைப்பட்டேன்.

சிறுகதை வடிவம்னா அதுக்கு மனசுல ஒரு சட்டகம் போட்டீங்களாஅனுபவத்துல புனைவ எங்க புகுத்தணும்னு எப்படி தீர்மானிச்சீங்க?

அதுக்கு ஒரு ஸ்கெலிட்டன் உருவாக்கிக்கிட்டது உண்மைதான். இந்தக் கட்டுரைகளில் ஒரு 70% உண்மைச் சம்பவம். அந்த ஸ்கெலிட்டனை மூடுகிறேன் இல்லையா, அதில்தான் புனைவின் அம்சம் கலந்திருக்கிறது. அந்த உரையாடல்கள் அப்படியே நிகழ்ந்திருக்குமா என்றால் இல்லை. ஆனால் அந்த வகையான உரையாடல்கள் எங்கள் வீட்டில் நிகழ சாத்தியம் உண்டு. அந்த பேட்டர்னை வைத்துக்கொண்டு உரையாடல்களை எழுதும்போது நிகழ்த்திக்கொள்கிறேன். அதில் புனைவின் அம்சம் உள்ளது. அப்புறம் கடைசியில் ஒரு ‘ஜம்ப்’ வருகிறதில்லையா, அங்கே ஒரு புனைவு எட்டிப்பார்க்கிறது.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் என் எல்லா கட்டுரைகளையும் படித்தார். உடனுக்குடன் எனக்கு குறிப்போ, வாய்ஸ் நோட்டோ அனுப்புவார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தன. ‘எங்க புனைவும் உண்மையும் கலக்குதுன்னு கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளருக்கு முக்கியமான சவால் அதுதான். அந்த சவாலில் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள்,’ என்று அவர் சொன்னார். மேற்கில் இந்த genre இருக்கு, இப்படி எழுதுகிறார்கள் அருண்மொழி என்றார். நான் சொன்னேனல்லவா, பஷீர், அசோகமித்ரன், அ.முத்துலிங்கம்தான் இந்த வகைமையில் எனக்கு முன்னோடிகள். அதுவும் முத்துலிங்கம் சாரின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் எல்லாம் கிட்டத்தட்ட இந்த மாதிரித்தான். அவர் இந்த வகைமையை ‘truth, but more truth – உண்மை, மேலும் கூடிய உண்மை’ என்று சொன்னார். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. வானத்தில் நட்சத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் புனைவுக்குரிய எல்லா உத்திகளுமே நீங்க அதுல experiment பண்ணியிருப்பீங்கஉரையாடல்வர்ணனைஎல்லாமே.

ஆமாம், ‘வானத்தில் நட்சத்திரங்கள்’ எழுதியபோது எனக்கு எல்லாமே செய்து பார்க்க ஆவலாக இருந்தது. உரையாடலை நிகழ்த்திப்பார்த்தேன். கதை மாந்தர்களைச் சொல்லிப்பார்த்தேன். சூழல் சித்தரிப்பு, வர்ணனைகள் எல்லாம் செய்து பார்த்தேன். அந்தத் திருவிழாவின் மனநிலையை உருவாக்கிப் பாத்தேன். எதெல்லாம் எனக்கு வருகிறது, வரவில்லை என்று நானே பரிசீலித்துப் பார்த்தேன்.

அதில் கொஞ்சம் போதப்பூர்வமாக செய்த அம்சம், அதன் இரண்டாம் பாகம் கனமாக இருக்கப்போகிறது என்பதால், முதல் பாகத்தை இயல்பா, நகைச்சுவை இழையோட, அந்த குடும்பத்தின் சூழலை வர்ணிக்கவேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் சஸ்டெயின் ஆகும். இங்கிருந்தே அந்தக் கனத்தைக் கூட்டிவிடக்கூடாது. ஜாலியா, லைட்டா ஆரம்பிச்சு, போகப்போக கனம் கூடி அந்த முடிவில் சென்று நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.

அந்த உணர்வை என்னால் குடுக்க முடிகிறதா? என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது. அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விடுகிறது. அன்று அந்த நாடகம் நடந்த மைதானத்தில் இருந்த 75% பேர் அழுதார்கள். அத்தனை பவர்ஃபுல்லான நாடக வடிவம். முதன்முதலாக எனக்கு இயேசு அறிமுகமானது அப்போதுதான். ஒரு நூல் வழியாக படிச்சிருந்தாலும் நான் இவ்வளவு உலுக்கப்பட்டிருப்பேனா என்று எனக்குத் தெரியாது. இயேசு, நாடகம் வழியாக எனக்குள்ளையும் என் தம்பிக்குள்ளையும் இறங்கினார். அந்தக் கண்ணீர் – பைபிளில் ஒரு வரி வரும், ‘உங்கள் கறை படிந்த ஆன்மாவை கண்ணீரால் சுத்திகரியுங்கள்’ என்று. இந்த குழந்தைகள் கறை படிந்த ஆன்மா கிடையாதுதான். ஆனால் இயேசு செய்யாத பாவத்துக்காக, மனிதகுலத்துக்காக, ரத்தம் சிந்தியவர் இல்லையா? நாம நேரடியா அதில ஈடுபடலன்னாலும் மனிதக்குலம் முழுவதும் அந்த பாவத்த கொஞ்சம் கொஞ்சம் தனக்குள்ள ஏத்துக்கணும். ஒரு பிராயச்சித்தமா கண்ணீர் சிந்தணும், அப்படின்னு நான் நினைக்கிறேன். அப்போ அந்த மொத்த பாவத்துக்காக, அவன் மேல் இழைக்கப்பட்ட துரோகத்துக்காக, ஒவ்வொரு மனுஷனும் கொஞ்சம் கண்ணீர் விடுறான். அந்தக் கண்ணீர் இருக்கில்லியா, அதை எப்படியாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அப்புறம் அந்தக் கண்ணீரோட போக முடியாது. அந்தக் கண்ணீர் முடிஞ்சு, தூய்மையாக, பாவத்தினால் வரும் இந்த உணர்ச்சிய கழுவினப்பிறகு ஒரு வெளிச்சம் வரும் இல்லையா, அந்த உணர்ச்சிய கொண்டு வரணும்னுதான் இந்த நட்சத்திரங்கள பார்க்குற சீன வைச்சேன். அது கண்டிப்பா புனைவோட ஒரு டச் தான். ஆனால் அதை நான் வேண்டி வேண்டி செய்யல, அதான் ஆச்சரியம். கோடைக்காலப் பின்னிரவில் திறந்த ரிக்ஷாவில் போகிறார்கள் என்றதுமே அந்த நட்சத்திரம் நிறைந்த வானம் வந்துவிட்டது. அந்த முடிவு அந்தத் தருணத்தில் எனக்குத் தோன்றியதுதான். அதுதான் புனைவின் மாயம் என்று நினைக்கிறேன். அது என்னை இழுத்துக்கொண்டது.

அதன் பிறகு நுரை, யசோதை முதலிய பதிவுகளில் நிறைய கதை மாந்தர் வரத்தொடங்கினார்கள். நிறைய உரையாடல்கள். அந்த வடிவம் என்னை மிகவும் ஈர்த்தது. அதற்குள் போய்விட்டேன்.

ஆமாம்அந்த கட்டுரைகள் எல்லாமே நல்ல சிறுகதைகளை வாசிக்கும் அனுபவத்தை கொடுத்தனஆனால் முழுக்கவும் புனைவென்று நினைக்கும்படியும் இல்லைஓர் அசல் நினைவுஎப்போதோ நடந்த உண்மைஎன்ற உணர்வு இருந்துகொண்டே இருந்தது.

எழுதும்போது கட்டுரை கட்டுரையாக மட்டும் இருக்கக்கூடாது, புனைவாகவும் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். சூழல் எல்லாமே கொஞ்சம்தான் ஞாபகம் இருக்கும், அதை நான் இட்டு நிரப்புவேன். அது எந்த வகையிலேயும் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும், அதை மட்டும் நான் பார்த்துக்கொள்வேன். நம்பகமாகக் கொடுக்கவேண்டும், அதுதான் சவால். அதை நிறைவேற்றினேனா தெரியவில்லை.

ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏதாவது ஒரு சாராம்சம், மையம் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த சாராம்சம், மையம் நாம் உருவாக்குவதுதான். நாம் எழுத ஆரம்பிக்கும்போதே அந்த மையம் தெரிந்துவிடும். என்னைப்பொறுத்தவரை, எந்த மனிதனுக்கும் நிகழும் அனுபவம் இயல்பிலேயே தன்னுள் ஒரு சாராம்சத்தைத் தேக்கிவைத்துக்கொண்டுள்ளது. இது என்னுடைய ‘பெட் தியரி’ என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த சாராம்சத்தின் புள்ளியைக் கண்டுபிடிப்பது மட்டும்தான் நம்முடைய வேலை. நான் ஒரு சம்பவத்தை எழுதும்போதே இதற்கான சாராம்சம் எங்கே என்று தேடுகிறேன். ஒன்று நானே வேண்டுமென்று தேடுகிறேன், இல்லை அதுவாக நிகழ்கிறது. நான் அந்த சாராம்சத்தைத் தொட்டு சரியாக அதை நிகழ்த்திவிட்டேன் என்றால் அது வெற்றிகரமான கட்டுரையாக இருக்கிறது.

நீங்கள் வலைத்தளம் எழுதத் தொடங்கியபோதுஏன் நினைவுகுறிப்புகள் எழுதலாம் என்று எடுத்தீர்கள்இவர்களைப்பற்றிஇந்த இந்த நிகழ்வுகளைப்பற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று திட்டம் போட்டு எழுதினீர்களா?

நினைவுகுறிப்புகள் எழுத வேண்டும் என்று நினைத்து கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்கவில்லை சுசித்ரா. தொடங்கும்போது இசை பற்றி எழுதலாம், வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பு ஏதாவது பண்ணலாம் என்றுதான் நினைத்தேன். ஆரம்பத்திலிருந்து நான்  ஒரு secondary writer மாதிரித்தான் என்ன உணர்ந்துகொண்டிருந்தேன். கிரியேட்டிவா செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வரவில்லை.

ஆனால்’ மரபிசையும் காவிரியும்’ எழுதிய பிறகுதான் ஜெயன் சொன்னார். “அருணா இது வேறொரு genre-ல் போகுது, இது ரொம்ப நல்லா இருக்கு, இந்த டிராக் நல்லா இருக்கு, இதுல போ,” என்று. அப்போது தளத்தில் வெளியிடுவதற்கு முன்னாலேயே உங்களுக்கும் அனுப்பினேன் அல்லவா? நீங்கள் எனக்கு ரொம்ப உற்சாகமா, ஆரவாரமான வரவேற்பு கொடுத்தீங்க.  ஒரு நாவலோட முதல் அத்தியாயம் மாதிரி இருக்குன்னு சொன்னீங்க. எனக்குள்ள ஒரு நம்பிக்கையை விதைச்சது அது. அதுக்கப்புறம் தான் வலைத்தளம் தொடங்கலாம்னு இறங்கினேன்.

பிளாக தொடங்கி முதல் மூணு கட்டுரைகள போட்ட உடனே, சரி, நம்ம பரிணாம வளர்ச்சிய எழுதுவோம்னு நினைச்சேன். வாசிப்பு ரசனை, இசை ரசனை, எல்லாம் எப்படி வளர்ந்து வந்ததென்று சொல்வோம் என்று இறங்கினேன். அப்படி சொல்லி வரும்போதே, ஒரு அனுபவம் நினைவுக்கு வந்து, இதைச் சொல்லிப் பார்ப்போமே என்று வந்தது. அதைச் சொன்னவுடனே, சின்ன வயதை தொடக்கத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தேன். ஒவ்வொருத்தரும் கேரெக்டராக எனக்குள் வந்தார்கள். வில்ஃபுல்லா முன்னால திட்டம் போடல. பள்ளி நாட்கள பத்தி சொன்னதுமே  மனோகர் சார், ஜோதி டீச்சர் வந்தாங்க.  அத்தை வந்தார்கள். அத்தை பற்றிச்சொன்னதும் அத்தையின் நிச்சயம். கல்யாணம். அப்படியே பாட்டி, ராவுத்தர் மாமா என்று தன்னால் எல்லாரும் உள்ளே வந்தார்கள். நாம் ஒரு சின்ன வாசல்தான் திறக்கிறோம். அப்புறம் அங்கிருந்து தொறந்து தொறந்து ஒவ்வொண்ணா போய் பார்ப்பதுதான் அது. ஒண்ணு இன்னோண்ண பயங்கரமா கொக்கிப் போட்டு இழுத்துட்டு வந்திருச்சு. ஒரு நினைவு இன்னொரு நினைவ கிளறி விட்டிருச்சு. இவ்வளவு வரும்னு எனக்குத் தெரியாது. உண்மையில உள்ளுக்குள்ள இவ்வளவு இருக்குன்னு தெரியாது. எழுத எழுதத்தான் கிளம்பி வருது அது. என்ன சொல்ல? அது பயங்கரமான ஒரு பிராசஸ். எனக்கு இப்ப நினைச்சாலும் வியப்பா இருக்கு.

பெண்கள் அதிகமும் சிறுவயது நினைவுகள்குடும்ப வாழ்க்கைச் சித்திரங்கள்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதுஇதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது ஒரு பொத்தாம்பொதுவான பார்வை. நான் இப்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் எழுதவருவதால் சிறுவயது நினைவுகளிலிருந்து தொடங்குகிறேன். அது இயல்பானதுதான். பெண்கள் என்று மட்டும் அப்படி சொல்லிவிடமுடியும் என்று தோன்றவில்லை. பெரும்பாலான ஆண் எழுத்தாளர்களை எடுங்க? சிறுவயது நினைவுகளை எழுதாதவங்க இருக்காங்களா? செகந்தராபாத் கதைகள் வழியா அசோகமித்திரன் சிறுவயதைத்தான் எழுதினார் இல்லையா?

தல்ஸ்தாய் கூட Childhood, Boyhood, Youth எழுதித்தான் எழுத வந்தார்.

ஆமாம். கொஸாக்குகள்ல வர்ர ஓலெனினும் போரும் அமைதியும்ல வர்ர ராஸ்டோவும் இளம் வயது தல்ஸ்தாய் தானே. சோனியா, மரியா எல்லாரும் அவருடைய அத்தைகள்தான். அதே மாதிரி தஞ்சை எழுத்தாளர்கள் பெரும்பாலும் பெண்கள் உலகத்தைத்தான் எழுதினாங்க. மோகமுள்ல இசையைப்பற்றி வருவதனால் ஒரு பொதுவான தளம் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி திஜாவினுடைய பின்னாள் கதைகளை எடுத்துக்கொண்டால் – செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே, எல்லாமே முழுக்க முழுக்க பெண்கள் உலகம் தான். அதில திஜா பேர எடுத்துட்டு ஒரு பெண் எழுத்தாளரோட பெயரைப்போட்டா அவங்க எழுதினா மாதிரிதான் இருக்கும், இல்லையா? லா.ச.ரா, கு.ப.ரா எல்லாரும் கூட அக்ரகார வாழ்க்கையத்தான் எழுதினாங்க, அதிலும் அதிகம் பெண்களப் பத்தித்தான் எழுதினாங்க, இல்லையா? அதனால இதை பெண்களுக்கு மட்டுமான குற்றச்சாட்டா வைக்கமுடியாதுன்னு நான் நினைக்கறேன்.

அப்புறம் முதன்முதல்ல எழுதவறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கை, அவன் வாழ்ந்த சூழல், இல்லையா? அதைத்தான் அவன் சொல்லியாகணும். எல்லாருமே பெரும்பாலும் ஒரு biographical novel-லத்தான் தொடங்கறாங்க. இதை எழுதுவது தான் இயல்பான பரிணாமமா இருக்குது. ஆனால் இங்கருந்து அடுத்த களத்துக்குப் போகணும், அதுதான் விஷயம்.

இதை விட்டு வித்தியாசமான களங்கள்ல எழுதற ஆண் எழுத்தாளர்களே ரொம்ப கம்மியாத்தான் இருந்திருக்காங்க. கிரா அவருடைய நாவல்கள்ல ஒரு பெரிய வாழ்க்கைச் சித்திரத்த காட்டியிருக்கிறார். யுவன் சந்திரசேகர் அவருடைய குள்ளச்சித்தன் சரித்திரம், வெளியேற்றம் போன்ற நாவல்ல ஒரு metaphysical பார்வைய முன்வைக்கிறார்.  சுரா எழுதிய புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ. சில குறிப்புகள் இரண்டுமே socio-political novels என்று சொல்லலாம். ஆனால் அவரே கூட கடைசி காலத்துல ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ எழுதினார். அது பியூர்லி ஒரு biographical நாவல்தான். முழுக்க முழுக்க அவருடைய இளமைக்கால நினைவுகள், அப்பா பத்திதான். சிவராம காரந்தோட மண்ணும் மனிதரும்ல வர்ர ராமன் காரந்தேதான். அதே மாதிரி ஒரு குடும்பம் சிதைகிறது நாவல்ல குடும்பம் மொத்தமும் இறந்து கடைசியா அந்த சாமியாரோட போற குட்டிப்பையன் பைரப்பாதான். ஆக தொடக்கமோ முடிவோ, எப்படியும் ஒரு ரைட்டர் இளமைக்காலத்துக்கு வந்து சேரறாங்க. இதில ஆண், பெண்ணுன்னுலாம் வித்தியாசம்  ஒண்ணுமில்ல.

ஆனால் பெண்களும் வேறு களங்கள்ல எழுதணும்னுதான் நான் நினைக்கிறேன். குடும்பப்பிரச்சனைகள்ல உழன்றுகிட்டு, அதுக்குள்ள சுத்திச்சித்தி வர்ரது எனக்கு உவப்பானது கிடையாது. என்னுடைய ஆதர்சம் குரதுலைன் ஹைதர் மாதிரி எழுதுணும். எவ்வளவு விசாலமா எழுதினவங்க. அக்னி நதியில பௌத்தம், முகலாய காலம், பிரிட்டிஷ் காலகட்டம், பிரிவினைன்னு எவ்வளவு களங்களைத் தொடுவாங்க அவங்க. அந்த மாதிரித்தான் பெண்கள் முயற்சி பண்ணணும்னு நான் நினைப்பேன். அதுக்கு அவங்க படிப்பும் ஒண்ணு இருக்கு. குரதுலைன் ஹைதர் லக்னோவுல பெரிய குடும்பத்துல பிறந்தவங்க. நல்ல யூனிவர்சிட்டியில படிச்சவங்க, லண்டன்  கேம்பிரிட்ஜில படிச்சுருக்காங்க. பெரிய வாய்ப்புகள் கிடைச்சவங்க. அதனால அவங்க உலகம் விரிஞ்சு பறந்து இருந்திருக்கு. பெண்கள் தங்கள  குறுக்கிக்கக்கூடாதுன்னுதான் என் எண்ணம். அதுதான் என் ஆசையும் கூட.

ஜெயமோகனின் சாயல் சிறிதும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரைகள்‘ என்று பலரும் ஒரு பாராட்டாக சொல்லியிருக்கிறார்கள்உங்கள் எழுத்தில் ஜெயமோகனின் தாக்கம் இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களாஅந்த தாக்கத்தைத் தவிர்க்க நீங்கள் ஏதும் விசேஷமாக மெனக்கட்டீர்களா?

ஆமாம். அதை எல்லோரும் பாராட்டாக சொல்கிறார்கள். ஆனால் அதை நான் பிரக்ஞைப்பூர்வமாகத் தவிர்க்க விரும்பவில்லை.  அதைப்பற்றி நான் மனதிற்குள் நினைப்பதும் இல்லை. அவருடைய மொழி பிரயோகங்கள், phrases, வெளிப்பாடு, அதை வேண்டுமென்றால் நான் தவிர்த்திருக்கலாம். மத்தப்படி ஜெயமோகன் எல்லாரையும் பாதிக்கும் அளவுக்கு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தோட நிழல்ல இருந்துகிட்டு அவரோட தாக்கம் சுத்தமா இல்லாம என்னால வர முடியாது, இல்லையா… அது ஏதாவது ஒரு வகையில் இருக்கும், பார்க்கமுடியாத விதத்துல இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று. இப்போது நான் சொல்லும் களம் ஒன்று இருக்கிறதில்லையா… அது ஜெயமோகன் எழுதியதிலிருந்து முற்றிலுமாகப் புதிய களன். தஞ்சை மண், அதனுடைய மனிதர்கள் வேறு, வாழ்க்கை வேறு, எங்களுக்குள் புழங்கிக்கொள்ளும் வார்த்தைகள் வேறு. குடும்ப அமைப்பிலுள்ள உறவுகளுடைய சிஸ்டம் வேறு. அவங்க இதுல அப்படிக் கிடையாது. ஜெயனின் புறப்பாடு, அனந்தன் கதைகள் எல்லாம் எடுத்துக்கிட்டா, அவங்க குடும்பத்துல நடக்குறதெல்லாம் பாருங்க. இப்ப ஜெயனுக்கும் அவங்க பாட்டிக்கும் உள்ள உறவு எனக்கும் என் பாட்டிக்கும் உள்ள உறவு மாதிரி இல்ல. அவங்க வேற மாதிரி பாட்டி. ரொம்ப பர்சனல் அட்டாச்மெண்ட் இல்லாத தனியா குடும்பத்தில் இருக்கக்கூடிய மெஜெஸ்டிக்கான பாட்டி. அவங்களுக்கு ஜெயன் பேரன், அவ்வளவுதான். ஒரு பர்சனல் உறவு இருக்குறமாதிரி சொல்லமாட்டாரில்ல. அப்புறம் அவங்க குடும்பம் இன்னும் கொஞ்சம் கூட விவசாயம் சார்ந்து இருக்காங்க. அதோடில்லாம குடும்பச்சூழல் இப்படி அமையல. குடும்பத்துக்குள்ள உட்காருறது, டிஸ்கஸ் பண்றது, அப்பா அம்மா குழந்தைகளோட பேசிக்கிறது. அவங்க வீட்ல  பையன் சாப்பிட வந்திட்டானா, தூங்க வந்திட்டானா, அப்படி மட்டும்தான் கேப்பாங்க. இங்க அப்படி இல்ல. அந்த லைஃப்ஸ்டைல் வேற. ஆகவே நான் எழுதுறது எல்லாமே புதுசா தோணலாம் உங்களுக்கு.

அப்புறம் மொழி. நாம் சாம்ஸ்கி சொன்ன மாதிரி மொழி அப்படீங்குறது மொழி மாத்திரம் அல்ல. It is a way of expression. நீங்க ஒண்ண எப்படி சொல்றிங்க, எதை அடுக்கா வரிசைப்படுத்தறீங்க, ஒரு சூழலை வர்ணிக்கும்போது எத உங்க மனசு பிரதானப்படுத்துது, எல்லாமே மொழி தான். எந்த கூறுகளை எடுக்குது, அதை எப்படி அடுக்குது, அதை எப்படி வெளிப்படுத்துது. இந்த மூணுமே way of expression, மொழிதான் என்று சொல்றாரு. இப்படி ஒவ்வொரு மைண்டும் ஒவ்வொரு பேட்டர்ன்ல இருக்கும்னு நினைக்கிறேன். அவர் யோசிக்கிற  மாதிரி நான் யோசிக்க மாட்டேன் இல்ல? இப்போ நாம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போறோம், ஒரு நிகழ்ச்சி நடக்குது, நாம பாக்குறோம், நாலஞ்சு வருஷம் கழிச்சு நாம ரெண்டு பேரும் அதை எழுதினோம்னா சுத்தமா வேற வேறாத்தானே இருக்கும்.

வெளிப்பாடுங்குறதுல, எதை எதை நம்ம மனசு உள்ள எடுக்குதுன்றது ஒண்ணு, எதை நாம் வெளிப்படுத்துகிறோம் என்பது ஒன்று. ஒவ்வொரு கிரியேட்டிவ் மைண்டும் இந்த விஷயத்துல வேற வேற மாதிரித்தான் இருக்குமென்று நினைக்கிறேன். 

ஒரு ஜாலி கேள்வி… ஒரே வீட்டில் இரண்டு எழுத்தாளர்களாக வாழ்வது எப்படி இருக்கிறது?

[கலகலவென்று சிரிப்பு] ஆமாம் சுசித்ரா. என்ன சொல்ல? நீங்க ஜாலி கேள்வின்னு கேட்டீங்க இல்ல? எனக்கு செம்ம ஜாலியா இருக்கு. உண்மையிலேயே ரொம்ப கலகலப்பா இருக்கு. சாதாரணமாவே நாங்க ரொம்ப ரொமாண்ட்டிக்கான கப்பிள்தான். ஆனா இப்ப எழுத ஆரம்பிச்சத்திலெருந்து ரொமான்ஸ் கொஞ்சம் கூடுதலா போயிடுச்சு [சிரிப்பு] அது ஏன்னா, அவர் பார்க்காத ஒரு முகம் இதுல இருக்குல்ல? இதுவரைக்கும் இவள எங்க ஒளிச்சு வச்சிருந்தான்னு ஒரு இது. நாம பார்த்ததுல இவள இதுவரைக்கும் காணுமே, இப்ப எந்திரிச்சு வாராளே புதுசா ஒருத்தி, அப்படி நினைப்பாரில்ல?

பொதுவாவே செம ஜாலியா இருப்பேன் வீட்ல. ஒரே டான்ஸ், பாட்டுன்னு குதிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன். அஜி கூட சொல்வான், சரியான பந்து மாதிரி இருக்கம்மான்னு. எந்தக் கவலையும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மேல எனக்கு நீடிக்காது. நான் கவலையெல்லாம் ரொம்ப மனசுக்குள்ள எடுத்துக்கற ஆளெல்லாம் கிடையாது. சாதாரணமாவே மகிழ்ச்சியா இருக்குற தருணங்களை நானே உருவாக்கிக்குவேன்.

அப்படி இருக்கும்போது இதை எழுத ஆரம்பிச்சபோது வாழ்க்கை உண்மையிலேயே இன்னும் வண்ணமயமாயிடிச்சு. ரொம்ப ரொம்ப கலர்ஃபுல்லா… இந்த வயசானவங்க கேட்டராக்ட் பண்ணிக்கிட்ட பிறகு, உலகம் இன்னும் கொஞ்சம் பிரகாசமானதுபோல் இருக்குன்னு சொல்வாங்கல்ல, அந்த மாதிரி. இன்னும் கொஞ்சம் ஜாலியா.

நான் எப்பவுமே enthusiastic-ஆக இருக்குறது அவருக்குப் பிடிக்கும். இப்ப அவருக்கு என்ன பார்க்கும்போதெல்லாம் ஹேப்பினெஸ் கூடுது, செம்ம ஹேப்பியா இருக்கோம் ரெண்டு பேரும். பலவித திட்டங்கள போடுறது, இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றது, டௌட்ஸ் கேக்குறது, நான் எழுதறப்ப இப்படி ஆயிட்டேன், எனக்கு தானா வருதுன்னு என்னோட பரவசங்கள பகிர்ந்த்துகிறது, அதெல்லாமே சந்தோஷம்தான்.

சின்ன வயது அருண்மொழி புதிய புதிய அனுபவங்களுக்கு அறிதல்களுக்கு வேட்கைகொண்டவளாகஉற்சாகமானவளாக இருந்திருக்கிறாள்உங்கள் வாழ்க்கையில் அந்த அறிதல் ஆசையெல்லாம் நிறைவேறியதென்று சொல்வீர்களா?

[சிரிப்பு] ஆமா, சின்ன வயசு அருண்மொழி ஒரு firebrand தான். அந்த அறிதல்வேட்கையெல்லாம் இருந்துக்கிட்டுத்தான் இருக்கு, இல்லாம போகல. எனக்கு எப்படின்னா, ஜெயன கல்யாணம் பண்ணத்துக்கு அப்பறமே, அவ்வளவு புத்தகங்கள் அறிமுகமாயிடுச்சி. அப்புறம் பக்கத்திலேயே ஒரு ஆசிரியர வைச்சுக்கிட்டு நான் இருந்திருக்கேன். எல்லா வித சந்தேகங்களையும் நான் கேட்டுப்பேன், எல்லாத்துக்கும் எனக்கு பதில் கிடைச்சுடும்.

நான் 1991 தொடங்கி 1998 வரைக்கும் பயங்கரமா படிச்சேன். விட்டு வந்த  இடத்துலதான் எழுதியிருப்பேனே. ரஷ்ய இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், இந்திய இலக்கியம்,  எல்லாத்தையும் படிச்சேன். நீங்க சொல்ற வேட்கை, தேடல் எல்லாமே அதில satisfy ஆயிடிச்சு. வேட்கைன்னா என்ன, உலகத்தை அறிஞ்சிக்கற வேட்கை புத்தகம் மூலமா தீந்திரும் இல்ல?

அப்புறம் ஜெயன் பயணத்தை ரொம்ப விரும்பக்கூடியவர். எனக்கும் பயணங்கள் ரொம்ப பிடிக்கும். பலவிதமான புதிய அனுபவங்கள் பிடிக்கும். அவர் போற இடத்துக்கெல்லாம் நானும் பயணம் போனேன். அப்பறம் வெளிநாட்டு பயணம். 2006 தொடங்கி நாங்க வெளிநாட்டுப் பயணம் போக ஆரம்பிச்சோம். ஒரு ரெண்டு மூணு பயணத்திலத்தான் என்ன விட்டுட்டு போயிருப்பாரு. ரொம்ப தவிர்க்கமுடியாத சூழல்ல நான் வரலன்னு சொன்னபோது மட்டும். மத்தபடி எல்லா பயணங்கள்லயும் என்ன கூட்டிட்டு போயிருக்காரு. அது எல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு. அந்த அனுபவங்கள் எதையுமே நான் மிஸ் பண்ணதில்ல. அதனால ஓரளவு எல்லாமே satisfy ஆயிடுச்சுன்னுதான் சொல்லணும். ஒரு நிறைவான வாழ்க்கை தான். அதுக்கு மேல என்ன இருக்கு?

கண்ணீரும் கனவும்‘ பதிவில்வணிக இலக்கியத்திலிருந்து சீரிய இலக்கியத்திற்கு நீங்கள் வந்து சேர்ந்த பாதையை விவரிக்கிறீர்கள். ‘வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறதுகதையும் இப்படியல்லவா இருக்கவேண்டும்‘ என்று உணர்ந்ததைக் கூறுகிறீர்கள்அந்த காலத்தில் உங்களுக்குள் வாழ்க்கையை பற்றிய கேள்விகள்குழப்பங்கள்தேடல்கள் இருந்தனவா?

சின்ன வயசிலிருந்தே நான் சூழல ரொம்ப உள்வாங்குவேன். மனிதர்கள விரும்பி கவனிப்பேன். நிறைய பெரியவங்க குழந்தைகள பொருட்படுத்தவே மாட்டாங்க. குழந்தைகளுக்கு ரொம்ப சென்சிபிளானா ஒரு மைண்ட். மனுஷங்களோட போலித்தனங்களெல்லாம் ஊடுருவிப் பார்த்திடும். அப்படி மனிதர்களை பார்த்துப் பார்த்து நான் பழகினேன்.

பதினாலு வயசுல ஆலத்தூரிலிருந்து மதுக்கூரிலும் பட்டுக்கோட்டையிலும் என்னைத்தூக்கிப் போட்டது கடல் தண்ணீரிலிருந்து மீனை வெளியே தூக்கிப்போட்டது மாதிரி இருந்தது. மதுக்கூரில் ஒரு கிராமத்தன்மையே இல்லை. கசகசவென்று, ஒரு விரிந்த தன்மை இல்லாத ஊர் அது. மாலையானா மனைவிகளை தெருவில இழுத்து போட்டு அடிக்கும் குடிகார கணவன்மார்கள் எங்கள் வீட்டு எதிரிலேயே குடியிருந்தார்கள். வாழ்க்கையோட harsh reality பலதும் நான் கண்முன்னால பார்த்தேன். ஆனால் கதைகள் வேறெதையோ ஒன்றை பேசிக்கொண்டிருந்தன.

அப்போது புனைவிலிருந்து கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்தேன். இந்துமதி, சிவசங்கரி, வாசந்தி போன்றவர்களிடமிருந்து ஒரு தூரம் உருவானது. அப்புறம் பாலகுமாரன் பெரிய சலிப்பைக் கொடுத்தார். கல்லூரியில அசோகமித்திரனை படித்த பிறகு தான் மீண்டும் புனைவுக்குள் தீவிரமாக வந்தேன். ஒரு சின்ன மிடில் கிளாஸ் லைஃப்ல இவ்வளவு வெரைட்டி காண்பிக்குறது, அதை அத்தனை நுட்பமாக, குறைந்த வார்த்தைகளில் சொல்கிறார் என்று பயங்கர ஈர்ப்பாக இருந்தது. 

அதுவரை சோவியத் புத்தகங்களை நிறைய படித்தேன். ரஷ்யாவில் இப்படி புரட்சி நடந்திருக்கிறதே, மொத்த சமுதாயத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறதே, அப்படி நமக்கும் நடக்கும், இங்கும் ஏழை-பணக்காரன் வித்தியாசம் அழியும் என்று நம்பினேன்.

தத்துவார்த்தமான  கேள்விகள் இருந்ததா?

இல்ல, அப்போதைக்கு எனக்கு அந்த மாதிரி தேடல்கள் இல்ல. பாட்டி வழியாக கடவுள் என்ற கான்செப்ட் எனக்கு அறிமுகமாயிருந்தது. அதே சமயம் அறிவியலை ரொம்ப நம்பினேன். குறிப்பாக சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’ எனக்கு பெரிய வழிக்காட்டி.

அதன் பிறகுதானே நவீன இலக்கியம் அறிமுகம் ஆனதுசீரிய இலக்கியக்காரர்கள் ஒரு குறுங்குழுவாகநக்சலைட் போலதலைமறைவாக இயங்கியவர்களெனச் சொல்லியிருப்பீர்கள்.

அது அந்த காலகட்டத்தின் நிலைமை என்று நினைக்கிறேன். அப்போது நிகழ், கல்குதிரை மாதிரியான சிறுபத்திரிகைகள் வெறும் 300 பிரதிகள் அச்சிடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் தொகை அப்போது 8 கோடி இருத்திருக்கலாம். அதில் 300 பிரதியென்றால் நான் நினைத்தது கிட்டத்தட்ட உண்மைதானே? குறுங்குழுதானே? [சிரிப்பு] சுஜாதா தப்பித்தவறி வெகுஜனப் பத்திரிக்கை எதிலோ அசோகமித்திரனை பற்றி வாய்விட்டதனால் நான் கேள்விப்பட்டேன். 

ஆனால் 1990ல், நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே, இந்த நிலைமை மாறியது. ஐராவதம் மகாதேவன் தினமணியின் ஆசிரியராக பொறுப்பேற்ற உடனேயே தமிழ்மணி என்று ஒரு சப்லிமெண்ட் கொண்டு வந்தார். அதில் தான் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி கட்டுரைகளை படித்தேன்.

அப்புறம் ‘91-ல் சுபமங்களா ஆரம்பித்தார்கள். அது ஒரு இடைநிலை இதழ். எல்லா தீவிர எழுத்தாளர்களோட பேட்டியும் அதில் வந்தன. அது வரை ‘சுந்தர ராமசாமி’ என்ற பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு அவருடைய முழு பேட்டியையும் கண்டது எவ்வளவு பரவசத்தை தந்திருக்கும் என்று உங்களுக்குப் புரியலாம்.

அப்போது சுஜாதா ஒரு நல்ல பணியை ஆற்றினார். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் எதில் எழுதினாலும் இந்த சீரியஸ் ரைட்டர்ஸ பத்தின ஒரு லைன் எழுதுவார். ‘அசோகமித்திரன் கணையாழியில்’ அப்படின்னு ஒரு வரி எழுதுவார். நல்லா படிக்குற வாசகனுக்கு கணையாழின்னா என்னன்னு ஆர்வம் வரும்.

பெண்களுக்கு சீரியஸ் இலக்கியம் அறிமுகமாக  தடைகள் இருந்ததா நினைச்சீங்களா?

பெண்கள்ன்னு இல்ல, நான் வாசித்த காலத்தில் ஆண் வாசகர்கள் இருந்தாலும் இதே பாடு பட்டுத்தான் உள்ளே நுழைந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பொதுவா அப்போ இருந்த டிரெண்டே அப்படித்தான். மூடி மறைச்சு, அட்ரெஸ் கண்டுபிடிச்சு, சந்தா கட்டி, அந்த இதழ வரவழைக்குற ஒரு தன்மைதான் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது கணையாழி, நிகழ், முன்றில், கனவு, கல்குதிரை இவ்வளவுக்கும் நான் சந்தா கட்டிக்கிட்டிருந்தேன்.

மார்க்ஸ்ஜெபிராமகிருஷ்ண ஹெக்டேமொரார்ஜி தேசாய் எல்லாருமே உங்களுக்கு பிடித்த அரசியல் நாயகர்களாக இருந்திருக்கிறார்கள்உங்களுக்கு நிறைய அரசியல் கவனிப்பு அந்த வயதில் இருந்ததென்றே தெரிகிறது. ‘தீ போல் எரிந்து கொண்டிருந்த அந்த அருண்மொழியின் பரிசுத்தமான இலட்சியவாதம் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பும் கூடÓ என்று ‘சின்னச் சின்ன புரட்சிகள்‘ கட்டுரையில் எழுதியிருக்கிறீர்கள்இன்று உங்களிடம் அந்த லட்சியவாதம் இருக்கிறதா?

அது ஒரு காலகட்டத்தோட பிரதிபலிப்புன்னுதான் எனக்குத் தோணுது. எல்லா மனுஷங்களும் சமமா, ஏற்றத்தாழ்வில்லாம இருக்குற ஒரு சமூகம்ன்னா அது ஒரு பெரிய கனவுதான், இல்லையா? அப்போது அதற்கு உவப்பா இருந்த ஒரே தியரி சோசியலிசம், கம்யூனிசம் தான். ஆகவே இயல்பாவே இப்படிப்பட்ட கனவிருந்த அனைவரும் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள். அந்த அலையில் நானும் அடித்துச்செல்லப்பட்டேன். என் வயசும் அதற்கு ஒரு காரணம்.

பிறகு கிழக்கைரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிலும் படிப்படியாக கம்யூனிச ஆட்சிகள் விழுந்தன. இறுதியாக ரஷ்யாவும் சிதறுதேங்காய் மாதிரி சிதறி உடைந்தது. அந்த நிதர்சனத்தைப் பார்த்தேன். அப்புறம் வயதாக ஒரு முதிர்ச்சியும் வந்தது. எந்த ஒரு சித்தாந்தமும் உலகத்தை அப்படியே நெம்புகோல் வச்சு திருப்பற மாதிரி புரட்டிப்போட முடியாது என்கிற பட்டறிவு நமக்கு கொஞ்சம் காலம் பிந்தித்தான் கிடைக்கிறது. குறிப்பா இது எந்தளவுக்கு வன்முறையில போய் முடியுது, எத்தனைப்பேர காவு வாங்கியிருக்கு என்றெல்லாம் யோசிக்கும்போது நம் நம்பிக்கை குறையத்தொடங்குகிறது. அதுக்குன்னு இலட்சியவாதமே இல்லாமல் இருக்கவும் முடியாது.

இன்று என்னிடம் அப்போதுபோல் தூய்மையான கனவுத்தன்மை வாய்ந்த இலட்சியவாதம் இல்லையே ஒழிய,  என் மனதில் வேறொரு இலட்சியவாதத்தை நம்பிக்கொண்டுதான் இருக்கிறேன். இலட்சியவாதம் என்பதைவிட, நேர்மறைவாதம் என்று அதைச் சொல்லலாம். ஹியூமானிட்டி போற பாதை மேல் ஒரு தீர்க்கமான நம்பிக்கை இருக்கிறது எனக்கு. போர், பஞ்சம், நோய், பேரழிவு, எவ்வளவோ வந்தாலும் மனிதகுலம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். அந்த நேர்மறைத்தன்மையே ஒரு இலட்சியவாதம்தானே…

சின்ன வயசுல அப்பா சொல்லி நிறைய அரசியல கவனிச்சேன். பிறகு நரசிம்மராவ் காலத்துக்கப்புறம் நடந்த ஊழல்கள், பேரங்கள் எல்லாமே அரசியல் மேல பெரிய சலிப்ப கொடுத்துச்சு.  எத்தனையோ இசங்கள் பரிசீலிக்கப்பட்டிருச்சு. மத அதிகாரத்த கையில எடுத்துக்கிட்ட அரசுகள், சர்வாதிகார அரசுகள், கம்யூனிசம், முதலாளித்துவம்… சீனாவுல இருந்தது போல ஒரு ரிஜிட் கம்யூனிசம். அங்க என்ன நடக்குதுன்னு இப்பத்தான் கொஞ்சம் திரை விலகி தெரிய வருது. அமெரிக்காவுல முதலாளித்துவ அரசு. அமெரிக்காவோட அதிகாரத்த ஒரு பத்து மல்டிநேஷனல் கையில வச்சிருப்பானா? நமக்கு தெரியுறது ஜோ பைடனோட முகம் தான? அந்த மாதிரி எவ்வளவோ பார்த்தாச்சு.

இப்ப என்ன தோணுதுன்னா, இன்று உலகத்துக்குத் தேவை நடைமுறை இலட்சியவாதம். அதிலே சிறந்த வடிவம் ஜனநாயகம்தான்னு நினைக்கிறேன். தோல்வியோ வெற்றியோ. பேச்சுவார்த்தை நடந்துகிட்டே இருக்க அதுதான் வழி. அதிலும் காந்தி கனவு கண்ட சமூகம்தான் நம் இலட்சியவாதமாக இருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. அதிகாரம் மையமாகவே கூடாது. கிராமங்கள்ல கூட அதிகாரத்த பிரிச்சுக்கொடுன்னு சொல்றாரில்ல? ஒரு மையத்துல அதிகாரம் குவியவே கூடாது.

அப்பா திராவிட இயக்கத்தில் இருந்தார்ஆகவே சின்ன வயதில் கடவுள் வழிபாடுபண்டிகைகள் என்று பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்ஆனால் வெண்முரசு பற்றி நீங்கள் அளித்த பேட்டியின் நிறைவில் எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள்இந்த பரிணாமம் எப்படி நிகழ்ந்ததுகடவுள் அப்போது உங்களுக்கு என்னவாக பொருள்பட்டதுஇப்போது?

 அப்பா தீவிரமான, மூர்க்கமான நாத்திகராக இருந்தார். எங்கள் வீட்டில் கடவுள் உருவம் இருக்காது, குத்துவிளக்குக்கூட இருக்காது. தீபாவளி கொண்டாட மாட்டோம் என்பதால் அந்த நாட்களில் அழுதுவடியும் எங்கள் வீட்டில். ஆனால் ராஜம்மா பாட்டியுடன் திருவிழா, கோயில் எல்லாவற்றுக்கும் போவேன். அந்தப்பக்கம், புள்ளமங்கலம் பாட்டி வீட்டுக்குப் போகும்போது ஏப்ரல், மே மாதங்களில் எல்லா குலதெய்வங்களுக்கும் கொடை நடக்கும். திருவாரூர் போனால் வீதிவிடங்கர் ஆலயம், கமலாலயம், எல்லாம் போவோம். தேரோட்டம் பார்ப்போம். அதெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையில் நிறைய இழக்கிறோம் என்று எனக்குத் தோன்றும். சின்ன வயசு அருணா அனுபவத்துக்காக ரொம்ப ஏங்கறவன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அப்பான்னால இவ்வளவு மிஸ் பண்றோமேன்னு இருக்கும். அப்படிப்பார்க்கும்போது, கடவுள் இல்லன்னு சொல்றாங்க பாத்திங்களா? அவங்க பிள்ளைங்களுக்கு கொடுக்காம விடுறது கடவுள்ன்ற கொள்கைய மட்டுமில்ல… இந்த ஹேப்பினெஸ், இந்த வண்ணமயமான உலகத்த குழந்தைங்களுக்கு இல்லாம பண்ணிடறாங்க. திருவிழான்னா கோயிலுக்கு போகுறது மட்டும்தான் திருவிழாவா? அது சொந்தமும் சமூகமும் சேர்ந்து அனுபவிக்கற ஒரு பெரிய கொண்டாட்டம் இல்லையா. அது ஒரு பெரிய இழப்புதான். அதை நான் அப்பவே உணர்ந்தேன்.

அதனால, வளர வளர எனக்கு பக்தி ஜாஸ்தியாய்டிச்சு. அப்பா என்ன சொல்றாங்களோ, அதுக்கு நேர்மாறா நடந்துக்கணும்னு இருந்துச்சுபோல. ஒரு வயசுக்கப்புறம் அப்பாவ மறுதலிப்போமில்ல… அப்பா எனக்கு எவ்வளவோ சொல்லிக்கொடுத்திருக்காங்க, லாஜிக்கலா எல்லாத்துக்கும் பதில் சொல்வாங்க. ஆனால் இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் அப்பாவ என் மனசுக்குள்ள நான் மறுதலிச்சேன். மதுரைல கல்லூரிக்குபோன உடனே மாசத்துக்கு இரண்டு முறை மீனாட்சி கோயில் போயிடுவேன். எனக்கு அந்தக்கோயில் அவ்வளவு பிடிக்கும். இழந்ததையெல்லாம் திரும்ப பெறணும்னு வெறியோட இருந்தேன்.

கல்யாணமானதும் சொல்லவே வேண்டாம். ஜெயன் பக்திமான்ல்லாம் இல்ல, ஆனால் கலை அனுபவத்தைத் தரக்கூடிய கோயில்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் பிறந்து வளர வளர எல்லா பண்டிகைகளையும் கிராண்டா கொண்டாடுவோம். எதெல்லாம் செய்யாம சின்னபிள்ளையில நான் இழந்தேனோ எல்லாமே என் பிள்ளைங்களுக்கு கொடுக்கணும்னு நினைச்சேன்.

ஆனால் கடவுள்ன்ற கான்செப்ட் மாறியிருக்கு. சிவன், விஷ்ணு, முருகன் எல்லாமே நாம கொடுக்கற உருவம்தானே? எனக்கு குமாரகோயில் முருகன் செண்டிமெண்டா பிடிச்சுப்போன கடவுள். என் கல்யாணம் அங்கத்தான் நடந்தது. பிள்ளங்களுக்கு எல்லா சடங்கும் அங்கத்தான் செஞ்சோம். இப்பக்கூட நினைச்சா அங்க போயிருவேன். ஆனால் அது முருகன்தானான்னா, இல்ல. அந்த அனுபவத்த மனசு இழக்க விரும்பல. அதுக்கு முருகன்னு ஒரு உருவத்த கொடுத்துக்குது.

அப்புறம்,  இப்பக்கேட்டா இந்துமதம் சொல்ற பிரம்மம்ற கோட்பாட்டை நான் ரொம்ப நம்பறேன். இந்துமதம் சொல்ற பிரம்மமும், பௌத்தம் சொல்ற மகாதம்மமும் மற்ற மதங்கள் சொல்ற ஒரே இறையும் ஒண்ணு தான்னு தோணுது. ஒரு great cosmic order இருக்குன்னுதான் தோணுது. அப்படி மாபெரும் நியதி ஒண்ணுதான் இந்த பிரபஞ்சத்த ஒருங்கிணைவோட, ஒத்திசைவோட, ஒழுங்கமைவோட இயக்குதுன்னு நம்பறேன்.

இப்ப நாம பேசிக்கிட்டு வர்ரப்ப ஒண்ணு தோணுதுஉங்களுக்கும் உங்க அப்பாவுக்குமான உறவு ரொம்ப தனித்துவமான ஒண்ணு அப்படீன்னுகட்டுரைகள் வழியாகவே உருவாகுற சித்திரம் அதுஉங்களுக்கும் உங்கள் அப்பாவுக்குமான உறவு எப்படிப்பட்டது?

ஒரு love-hate relationship – ன்னு வெச்சுக்குங்களேன். சின்ன பிள்ளையா இருக்கும்போது பயங்கர அட்மிரேஷனோட பாப்பேன். அப்பாவுக்கு எல்லாத்த பத்தியும் தெரியும். ஒரு சபையில அவரோட கருத்துதான் ஸ்தாபிக்குற மாதிரி நிக்கும். அப்போல்லாம் ஆகா, நம்ம அப்பா, அப்படீன்னு இருக்கும். ஒரு எட்டாவது ஒன்பதாவது படிக்குறப்பதான் அப்பாவுக்கு இருக்குறது கொஞ்சம் பழமையான பார்வைன்னு தோண ஆரம்பிச்சது. அப்புறம் திராவிட அரசியல் அப்பா மேல ரொம்ப தாக்கத்த ஏற்படுத்திச்சு. ஒரு குறிப்பிட்ட சமூகத்துமேல வெறுப்ப வளத்துக்குறது, கடவுள் மறுப்பு, இதெல்லாம் சின்ன ஒரு நெருடல உருவாக்கிச்சு. அதெல்லாம் நான் விவாதிச்சிட்டே இருப்பேன். ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பிரியம் இருந்துகிட்டே இருக்கும். பிரியத்துக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.

ஒரு 35-40 வயசு ஆனத்துக்கப்புறம்தான் நம்ம அப்பா நமக்கு என்ன கொடுத்திருக்கார்ன்னு தொகுத்துக்க ஆரம்பிக்கிறோம். என் வயசுக்காரங்களோட அப்பாக்களவிட எங்க அப்பா ரொம்ப லிபரலான ஒருத்தராவே இருந்திருக்கிறார். ஏழாவதிலேயே சைக்கிள் கத்துக்க சொன்னார். ஒன்பதாவதிலேயே டூ வீலர் ஓட்டுவேன். எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க. இப்ப அதெல்லாம் உங்களுக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் 80-கள்ல கிராமத்துல அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அப்பா அந்த மாதிரி எல்லாத்திலெயுமே ஃபார்வர்டா தான் யோசிப்பாங்க. பொம்பள பிள்ளைன்னா தனியா போகணும், வரணும், எல்லா விஷயங்களிலேயும் ஈடுபடனும், தனியா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும்னு நினைப்பாரு. அப்படித்தான் என்ன வளத்தாங்க. அதனால இப்ப வரைக்கும் யாரோட பழகுறதுக்கும் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்ல. என் ஆளுமையிலேயே அந்த போல்ட்னெஸ் இருக்கு. அது அப்பா மூலமா வந்ததுதான்.

உங்கள் கட்டுரைகளில் தஞ்சை மண்ணின் வாழ்க்கைபேச்சுஎல்லாம் இடம்பெறுகிறதுஒரு பெரிய காலமாற்றின் சாட்சிப்போல உள்ளன உங்கள் கட்டுரைகள்திருமணமான பிறகு நீங்கள் அந்த நிலத்தை விட்டு வந்துவிட்டீர்கள்இன்று உங்கள் பார்வையில் அந்த நிலம் எப்படி இருக்கிறது?

நான் என் கட்டுரைகளில் 70கள்80கள் காலக்கட்டத்தைத்தானே எழுதுகிறேன்? அப்போது பழைய தஞ்சை மாவட்டம் இப்போது போல மூன்று மாவட்டங்களாக [தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்] பிரிக்கப்படவில்லை. அதில் இரண்டு வகைப்பாடு சொல்லப்பட்டது. கீழத்தஞ்சை, மேலத்தஞ்சை. கீழத்தஞ்சை முழுக்கமுழுக்க டெல்டா பகுதி. கிழக்குப்பக்கம் உள்ள தஞ்சை, கடற்கரையை ஒட்டியுள்ள தஞ்சை. மன்னார்குடி, கும்பகோணம், நன்னிலம், வேதாரண்யம், வேளாங்கன்னி, எல்லாமே கீழத்தஞ்சை. மேலத்தஞ்சை என்பது நான் இப்போது எழுதும் பகுதி. ஆலத்தூர், பட்டுக்கோட்டை, ஊருணிபுரம், திருவோணம், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை. கீழத்தஞ்சையை விட மேலத்தஞ்சை கொஞ்சம் கூட வறண்டபகுதி என்று கருதப்பட்டது.

அப்போது இருந்த தஞ்சை இப்போது இல்லைதான். நான் சொல்லும் காலகட்டம் மிகவும் வளமான ஒரு பீரியட். காவிரி பொய்யா நதியா ஓடிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் 1995-96 வாக்கில் நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் முடிந்து நிலைமை மாறியது. எப்போதும் போல காவிரியில் தண்ணீர் வராமல் ஆனது. விடுவதில் முறை வைத்தார்கள். பாதி நேரம் தண்ணீர் வந்தாலும் தாமதமாகவே வரும். நிறைய பிரச்சனைகள். தஞ்சை மாவட்டத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது. எந்த ஒரு கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்துவது  தண்ணீர்தான். நதிதான். காவிரி பிரச்சனை வந்த பிறகு நான் கண்ட தஞ்சையே வேறு.

அதன் பிறகு குறுவைக்கு மட்டும் தான் தண்ணீர் வரும். முன்னால மூன்று போகம் விளைந்த மண் அது. குறுவை, சம்பா, தாளடின்னு சொல்வாங்க. குறுவைன்னா குறுகியக்கால பயிர். மூன்று மாதம். சம்பான்னா அடுத்தக்கால பயிர். நாலரை மாதம் போகும். தாளடின்னா தாள்-அடி – வைக்கோல அறுத்த பிறகு ஒரு சாண் அப்படியே இருக்கும். அது மேல உளுந்து, பயறு தெளிப்பாங்க. இதுதான் சிஸ்டம். அல்லது நெல் போடாதவங்க கரும்பு போடுவாங்க. பருத்தி போடுவாங்க. நான் பார்த்த காலத்துல மண்ண இப்படி முப்போகம் விளைய வைப்பாங்க.

95-96க்கு பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் வயல்கள் பாதி தரிசாகத்தான் கிடக்கும். விவசாயத்தை கைவிட்டவங்க பாதி உண்டு. நிலத்துல வருமானம் வராம வித்துட்டு ஃபாரின் போனவங்க பாதி உண்டு. குறுவிவசாயிங்க நிலத்த வித்துட்டு கூலிகளா போனதையும் கேள்வி பட்டிருக்கேன். இன்று கீழத்தஞ்சை தமிழ்நாட்டிலேயே மிகவும் வறுமை நிறைந்த ஒரு பகுதி என்று சொல்லலாம். அந்த பழைய செழுமையெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. நான் மரபிசையும் காவிரியும்ல சொல்வேன்ல, மூங்கில்கள் நிறைந்த பாதைகளெல்லாம், இப்ப கருவேலம் ஆக்கிரமிச்சிருக்கு. பார்க்கவே பகீர்ன்னு இருக்கும்.  

இந்த மாற்றம் தண்ணியால மட்டும் தானா?

தண்ணியாலன்னு நான் யூகிக்கிறேன். ஆனால் இன்னும் சமூகப்பொருளியல் காரணிகள் இருக்கலாம்.

ஆனால் 2017-18 போல நிலைமை கொஞ்சம் மாறியதுபோல் தோன்றியது. அப்போது அம்மாவை தஞ்சாவூரில் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஏழெட்டு நாள் போய்வந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு பக்கம் காவிரி தண்ணீருடன் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மறுபக்கம் குளங்களெல்லாம் தூர்வாரி, கரையெல்லாம் உயர்த்தி நல்ல நிலமையில் இருந்தது. அது மனசுக்குச் சந்தோஷமா இருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்ததால் இயல்பாக மரபிசை அறிமுகம் உங்களுக்கு கிடைத்ததைப்பற்றி எழுதியுள்ளீர்கள்நிறைய இசை கேட்பீர்களாஇசையில் பயிற்சி உண்டா? 

கண்டிப்பா இசையில எனக்கு பயிற்சி கிடையாது. சின்ன வயசுல ரொம்ப ஆசை இருந்தது, பாட்டு கத்துக்கணும்னு. ஆனால் பதினாலு வயசு வரைக்கும் அட்ட கிராமத்துல இருந்தேன். அங்க பாட்டு சொல்லித்தர்ரவங்க யாருமே கிடையாது. அதனால அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல. அப்பாகிட்ட அடிக்கடி சொல்வேன் நான். அப்பா என்ன கர்ணாட்டிக் மியூசிக் படிக்கவெச்சிருக்கலாமில்ல, நான் நல்லா பாடுவேன்ல்ல? அப்படீன்னு. அது ஒரு சின்ன ஏக்கம் எனக்கு உண்டு எப்பவுமே.

ரசனை எனக்கு குஞ்சிதய்யர் மூலமாகவே விதைக்கப்பட்டிருந்தது, எழுதியிருக்கிறேனே. ஆனால் முறைப்படி கேட்க பழகியது எப்போதுன்னா, கல்யாணத்துக்கு பிறகுதான். அதுவரைக்கும் டேப் கூட எங்களுக்கு பெரிய விஷயம்தான். ரேடியோ வந்ததும் அரங்கிசை கேட்பேன். பிறகு டேப் வாங்கி கேட்டோம், நானும் ஜெயனும். ‘மலையில் பிறப்பது’ கட்டுரையில எழுதியிருப்பேனே. அப்போ நாங்க தர்மபுரியிலிருந்து இங்க பத்மநாபபுரத்துக்கு மாற்றலாகி வந்திருந்தோம். அவ்வளவு கலெக்ஷன்ஸ்… காசெட்டே ஒரு 70-80, அப்புறம் சீடிக்கு மாறினப்பிறகு சீடி வாங்கினோம். அப்புறம் வேலைப்பளு கூடியபோது இசை கேட்பது கொஞ்சம் குறைந்தது. அடுக்களையில் வேலை பார்க்கும்போது பின்னால் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கென்றே உட்கார்ந்து கேட்க நேரமில்லாமல் போனது.

சமீபத்தில் ரொம்பவும் தீவிரமாக கேட்டது இந்த கொரோனா காலகட்டத்தில்தான். ஜெயன் வெண்முரசு முடித்தபோது பயங்கரமான வெறுமையான கொந்தளிப்பான ஒரு மனநிலைக்குப் போனேன். அப்போது மிகத்தீவிரமாக இசைக்குள் நுழைந்தேன். கர்னாட்டிக்கிலிருந்து ஹிந்துஸ்தானிக்கு போனேன். அப்போதுதான் கிஷோரி அமோன்கார் எல்லாம் கேட்டது.  படே குலாம் அலிகான், பண்டிட் வெங்கடேஷ் குமார்… அந்த ஜூலையிலிருந்து டிசம்பர் வரைக்கும். பித்து பிடிச்ச மாதிரி ஒரு ஆறு மாசம் கேட்டேன். அப்போது தான் எழுத்துக்கான உத்வேகமும் வந்தது. மரபிசையும் காவிரியும் எழுதினேன்.

கடந்த ஏப்ரல் மாதம் உங்கள் தம்பிஉங்கள் கட்டுரைகளில் சின்னப்பையனாக இடம்பெறும் லெனின் கண்ணன் இறந்துபோனார் என்று அறிகிறோம்அந்த பேரிழப்பின் பின்னணியில் இந்தக் கட்டுரைகள் இன்னும் கனம்கொள்கின்றன.

ஆம், என் தம்பி லெனின் கண்ணன் சமீபத்தில் மறைந்தான். அதை நான் கட்டுரைகளில் சேர்க்கவில்லை. ஏன் சேர்க்கவில்லை என்றால், நினைவுக்குறிப்புகள்ல பால்யகாலத்தத்தான எழுதறேன். தற்போது நடப்பதை அங்கே கொண்டு போய் வைக்கவேண்டாம் என்று நினைத்தேன். அதில வர்ர தம்பி சிரிச்சுட்டிருக்கற ஒரு பையன். பால் வடியுற முகத்தோட இருப்பான். யசோதை கட்டுரையில ஒரு கிரிட்டிக்கல் ஸ்டேட்ல போயிட்டு மீண்டு வருவான்ல? அப்பக்கூட இப்ப நடந்தத போய் அங்க வைக்கக்கூடாதுன்னு தோணிச்சு.

தம்பி இறந்ததுக்கு முன்னாலேயே முதல் கட்டுரையை எழுதிட்டேன். மரபிசையும் காவிரியும். மார்ச் 30ஆம் தேதி அவன் படிக்கட்டில் கீழே விழுந்தான். ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். நினைவு திரும்பாமலேயே ஏப்ரல் 8-ஆம் தேதி இறந்தான். கபாலம் அடிபட்டு ஹெமரேஜ் ஆயிடுச்சு. அந்த எட்டு நாளும் நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் மாறி மாறி வந்துட்டிருந்துச்சு. பொழச்சிருவான்னு வேண்டுனோம். எட்டாம் நாள் அவன் இறந்து போனான் என்று சொன்னதும் நாங்க நொறுங்கிப் போயிட்டோம். என் தம்பி அவன்.

காரியமெல்லாம் முடிச்சு ஏப்ரல் 21-22 தேதி போல் தான் ஊருக்கு வந்தேன். வீட்டில யாருமே சரியில்ல. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. ஜெயன் குமரித்துறைவி எழுதி முடிச்ச வெறுமையில இருந்தார். அஜிக்கு கொரோனா, ஆசாரிபள்ளத்துல இருந்தான்.

ஏப்ரல் 23-24 வாக்கில் எனக்கு ஒரு நினைப்பு வந்தது. இல்ல, இந்த ஃபீல நான் பெருக்கிக்கக்கூடாது. இழப்பு இழப்புதான். ஆனால் அதுக்குள்ள போயிடக்கூடாது, அதிலிருந்து மீள்றது ரொம்ப கஷ்டமாயிடும்.

அப்போது ஜெயனுக்கு சுந்தர ராமசாமி சொன்னது நினைவுக்கு வந்தது. எனக்கு சொன்னது மாதிரி இருந்துச்சு. ஜெயன் அவங்க அம்மா-அப்பாவை இழந்த நாட்கள் எப்படி இருந்திருக்கும்ன்னு யோசிங்க. நின்னிட்டிருக்குற தரைத்தளமே இளகிக் கீழே போனமாதிரி இருக்குமில்ல? அப்போ சுந்தர ராமசாமி சொன்ன ஒரே விஷயம், நீங்க எழுதுங்க, கிரியேட்டிவா எழுதினா மட்டும்தான் இதிலெருந்து வெளிவர முடியும்.

சுந்தர ராமசாமி ஜெயனுக்கு சொன்னதைத்தான் ஜெயன் எனக்கு சொன்னார். நீ எதிலாவது முழுமூச்சா இன்வால்வ் ஆகணும். இல்லைன்னா இதிலெருந்து வெளிவர முடியாதுன்னு சொன்னார். நானே ஒரு நாள் ராத்திரி முழுக்க முழிச்சிருந்து யோசிச்சு பார்த்தேன். இந்த ஃபீலிங் பெருகிப்பெருகி வரும். துக்கத்த பெருக்கிக்குறதுல என்ன இருக்கு? ஒரு பெரிய இழப்புதான். அதுக்குள்ள நம்ம மைண்ட விட்ற கூடாதுன்னு தோணிச்சு.

ஏப்ரல்-25ஆம் தேதி வலைத்தளத்த ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்ட்ட சொல்லி டிசைன் பண்ணேன். ஏற்கனவே  எழுதிய கட்டுரைகள் ஒரு இரண்டு மூணு வாரம் வந்துச்சு. அப்போ நான் எனக்கே ஒரு கம்பல்ஷன் மாதிரி விதிச்சிகிட்டேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை கண்டிப்பா எழுதி பிரசுரிக்கணும்ன்னு.

அந்த கட்டுரைகள்ல உங்க சின்ன வயசு தம்பி ரொம்ப இயல்பா வந்தார்.

ஆமா, சின்ன சின்ன புரட்சிகள்லையே வந்திருவானே! உண்மையிலேயே அதெல்லாம் எழுதறப்ப இப்ப உள்ள தம்பி, அந்த இழப்பு, எதுவுமே எனக்குத் தெரியல. என் தம்பி ஒரு காலகட்டதுல உயிரோட எங்கெயோ இருக்கான். நான் அவன் கூட அங்க போய் பேசி விளையாடிக்கிட்டு இருக்கேன் அப்படீன்ற மாதிரி ஒரு ஃபீல் வருது. என் தம்பி பழைய லெனின் கண்ணன் மாதிரி என் கூட வரான், போறான் அப்படீங்கும்போது அந்த இழப்பை ஏதோ ஒரு வகையில் என் மனசு ஈடுகட்டிக்குதுன்னு தான் நினைக்கறேன். நான் அவனோட ஞாபகங்களையெல்லாம் அகழ்ந்தெடுத்து பயங்கரமா பற்றிக்கிட்டேன்னு தான் சொல்லணும். அந்தத்  தம்பிய நான் இன்னும் இன்னும் ஒளிமிகுந்தவனா பார்த்திக்கிட்டிருந்தேன். இந்த இறப்பே மறந்து போற அளவுக்கு.

ஆறு மாசம் இந்த எழுத்துல நான் என்ன தீவிரமா மூழ்கடிச்சிக்கிட்டேன் இல்ல? அது அந்த இறப்போட துயர கரைச்சிடிச்சு. இப்ப நினைச்சுக்கிட்டா துக்கம் இல்லாம இல்ல. ஆனால் புண் ஆறியிருக்கு. அது எழுத்துனாலத்தான். எழுத்த ஒரு healing process-ன்னு சொல்றாங்க. மனச கொந்தளிக்க வைக்குறதும் அதுதான். அதோட காயங்கள ஆத்துறதும் அமைதியாக்குறதும் அதுதான். ஒரே சமயம் இரண்டையும் பண்ணுதுன்னு எனக்குத் தோணுது. ஏதோ பெரிய எழுத்தாளர் மாதிரி generalize பண்ண நினைக்கல [சிரிக்கிறார்]. ஆனால் நான் அனுபவமா பாத்ததுல எனக்கு அதுதான் தோணுது.

நான் எழுதுறது மூலமா அவன் இறப்ப முழுசாவே மறக்கடிச்சிட்டேன். அது வேறென்னமோ. யாருக்கோ நிகழ்ந்ததுன்னு நான் நம்பிக்கிட்டேன். என் தம்பி அங்க இருக்கான். எட்டு பத்து வயசுலெருந்து விளையாடின தம்பி. அங்க, அத்தனை alive-ஆக, அத்தனை உயிர்ப்போட துடிப்போட,  இருக்கான்.

யசோதை எழுதுறபோது ரொம்ப உடைஞ்சு போனேன். அப்போ ரெண்டு நாள் நினைவில்லாம இருந்து திரும்ப வந்தானே. இப்ப எட்டு நாள் நினைவில்லாம அப்படியே போய்ச் சேர்ந்திட்டானே. இந்த நாப்பத்தஞ்சு வருஷம் வாழுறதுக்குத்தான் கடவுள் அப்ப உயிர்ப்பிச்சைக் கொடுத்தாரா. போதும்ன்னு நினைச்சுட்டாரா. இந்த வாட்டி ஒரேயடியா பறிச்சிக்கிட்டாரே. இப்படியெல்லாம் தோணி கீபோர்ட்ல்லலாம் கண்ணீர் சிந்தித்தான் யசோதை எழுதினேன். எழுதுற மனசுக்கும் அதை பின்னாலிருந்து கண்காணிக்குற மனசுக்கும் சுத்தமா தடையெல்லாம் அழிஞ்சு ஒரு மனநிலையில எழுதின கட்டுரை அது.

இத்தனைப்பெரிய இழப்பை எழுத்து வழியா கடந்திருக்கிங்கஎழுத்துங்கற செயல்பாடு அப்படி எதைக் கொடுக்குது?

தொடர்ந்து படைப்பூக்கத்தோட இருக்கிறதோட மகிழ்ச்சியே ரொம்ப தனித்துவமானது சுசித்ரா. அப்புறம் எழுதும்போது அந்த வயச, அந்த வாழ்க்கைய நான் திரும்ப வாழறேன். ஒன்னொண்ணா திறந்து திறந்து பார்க்கும்போது மனசு உள்ள உள்ள போகுது, பயங்கரமா. இதைத்தான் எழுத்தாளர்கள் ‘A raid into your subconscious’ – நினைவிலிக்குள் ஓர் ஊடுருவல் – என்று சொல்றாங்கன்னு நினைக்கிறேன். தீவிரமான ஒரு பயணம். எழுத்து மூலமாத்தான் அங்க போக முடியும்.

எழுதும் அந்த நேரத்துல போதப்பூர்வமான மனசக் கடந்து உள்ள எங்கியோ போயிடறோம். குளிக்கும்போது குளத்துக்குள்ள மெல்ல ஆழ்ந்து போவோமில்ல. அங்க ஆழத்துல தம் பிடிச்சு இருந்துட்டு வெளிய வருவோமில்ல. அந்த மாதிரி, நம்ம மனசு தன்னத்தானே கான்ஷியஸ் மைண்ட விலக்கி விலக்கி உள்ள போகுறப்ப, ஒரு கட்டத்துல சப்-கான்ஷியஸ் திறந்துக்குது. அதைத்தான் சொல்லிருக்காங்க. கிரியேட்டிவ் பிராசெஸ்ஸே அதுதான்னு பெரிய பெரிய எழுத்தாளர்கள்லாம் சொல்றாங்க. அதைத்தான் நானும் நம்புறேன்.

ஏன்னா, என் கான்ஷியஸ் மைண்டால ஆலத்தூரப்பத்தி இத்தனை நினைவுகளை கொண்டுவந்திருக்க முடியாது. ஆனால் எழுதும்போது அலை மாதிரி வேறு ஒரு உலகத்துக்குள்ள கொண்டு போகுது. அதுக்கு மேல அங்க நடக்குறத நம்மால புரிஞ்சுக்க முடியாது.

ஏதோ இத்துனூண்டு எழுதிட்டு இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. என் அனுபவம் இப்படித்தான் இருந்தது. கிரியேட்டிவா எழுதுறது ரொம்ப அற்புதமான, பரவசமான ஒரு விஷயம். கடவுளுக்கு பக்கத்துல போகுற இன்பம். எனக்கு அது கிடைச்சுது.

அடுத்து என்ன எழுதப்போறிங்க?

இப்ப ஒரு இடைவெளியிலத்தான் இருக்கேன். அடுத்து என்ன எழுதணும்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு. இசையைப் பற்றி எழுதணுமா, அல்லது சின்னச்சின்ன மொழிபெயர்ப்புகள் பண்ணலாமா, இப்படி. அடுத்த வருடம் ஒரு நாவல் தொடங்கலாம்ன்னு இருக்கேன்.

என்ன தீம்?

தீம் இன்னும் முடிவு பண்ணல, ஆனால் களம் கீழைத்தஞ்சைன்னு யோசிச்சு வச்சிருக்கேன். மரபிசையும் காவிரியும்ல வருதில்ல. எங்க பாட்டி ஊர். அதுதான் களம்.

எழுத்தாளருக்கு வயதில்லை. அவர் எழுதிய வயதுகளெல்லாம் அவர். அருண்மொழிநங்கையிடம் பேசப்பேச அவ்வப்போது எட்டிப்பார்க்கும் குட்டி அருணா நெகிழச்செய்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு படைப்பாளியாக பரிணமித்திருக்கும் அருண்மொழிநங்கையில், இளமையின் உற்சாகமும் புலன்விழிப்பும், ஒரு பழுத்த நிதானமான அனுபவ அறிதலும் ஒன்று சேர காணக்கிடைக்கிறது. அவர் நாவலை எதிர்நோக்குகிறோம்.

நேர்காணல் : சுசித்ரா

புகைப்படங்கள் : நன்றி ஸ்ருதி டிவி

Goat Milk Puttu – A.Muttulingam [Translation]

A translation of Tamil writer A.Muttulingam’s short story ‘Goat Milk Puttu’ into English, published in Narrative Magazine.

ALL THIS HAPPENED in Ceylon, long before its name was changed to Sri Lanka. In those days they just called it the Post and Telegraph Service. They had not yet invented grand terms like Postal Department, Division, and so on. Every morning, the Yazh Devi left Colombo at 5:45 a.m. sharp and ran north until it reached the Kankesanthurai terminal in Yazhpanam Province; the train returned to Colombo the same day. On Fridays, Sivaprakasam, an officer with the Post and Telegraph Service, took the Yazh Devi in time to be in Yazhpanam for lunch. He started his journey back on the following Sunday in the afternoon and was in Colombo by nightfall. On Monday morning he would set out as usual, ready to lord over everyone at work.

In Yazhpanam his wife took care of their great naarsaar house, with its central yard opening up to the skies and its wide grounds. Their only daughter was married and lived in Singapore. Their three dogs and the livestock they raised—a cow, two goats, twenty hens—as well as the mice, spiders, and cockroaches they housed but did not raise kept them busy. Sivaprakasam came often to Yazhpanam, not just to be with his wife but also to take care of the house and their grounds. Even his wife thought as much. But there was another reason, a secret one.

The rest of the story can be read here.

டேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு

[நன்றி : jeyamohan.in]

மனிதன் உருவாக்கக்கூடிய எந்த உச்சபட்ச கலைகளுக்கும் நிகரான அனுபவத்தை ஒரு தூய விலங்கு அதன் முழுமையில் வெளிப்படுகையில் நம்மில் உருவாக்குகிறது. விலங்குகளின் தூய வெளிப்பாட்டை அதன் நிலத்தில் வைத்து படைப்பூக்கத்துடன் படம்பிடிக்கையில் அது ஒரு மகாகலைஞனின் படைப்புக்கு நிகரான கலைப்படைப்பாக நிற்கும் என்பதை டேவிட் அட்டன்பரோ கதைசொல்லும் இயற்கை ஆவணப்படங்களே எனக்குக் கற்பித்தன.

அதன் உச்சமாக சமீபத்தில் ‘Dynasties’ (வம்சங்கள்) என்ற தொலைக்காட்சித் தொடர் இடம்பெற்றது. இந்தத்தொடர் இந்தியாவில் SonyLIV தளத்தில் காணக்கிடைக்கிறது.

இத்தொடரை ‘எபிக்’ என்று மட்டுமே சொல்ல முடியும். போரும் அமைதியும், மோபி டிக், வெண்முரசு போன்ற ஆக்கங்களின் வழி அடையப்பெறும் உணர்வுகளற்ற உச்சத்தை இதில் பெற்றேன்.  இயற்கையின் காவிய ஒழுங்கமைதியை ஆழமாக என்னில் உணரச்செய்தது இத்தொடர்.

இந்தத்தொடரின் முதல் திரைப்படம் ‘பெயிண்டட் வுல்வ்ஸ்’ (Painted Wolves). ஆப்பிரிக்க வனப்பகுதியில், சான்சீபி நதியை ஒட்டிய நிலங்களில் நிகழ்வது.

பெயிண்டட் வுல்வ்ஸ் எனப்படும் அருகிவரும் ஆப்பிரிக்க காட்டுநாய் இனத்தில் உலகத்திலேயே மொத்தம் 6600 விலங்குகளே மிச்சமிருக்கின்றன. அவற்றில் 280 ‘டெய்ட்’ என்ற ஒற்றைகாட்டுநாய் மூதச்சியின் கொடிவழியிலிருந்து தோன்றியவை.

டெய்ட் சான்சீபி நதிக்கரையை ஒட்டிய அவளது பாரம்பரிய நிலத்தில் அவளுடைய குழுவுடன் வேட்டையாடி வசிக்கிறாள். கிழக்கே சிங்கங்களின் ப்ரைட்லான்டும் பின்னால் கழுதைப்புலிகளின் தேசமும் அவள் நிலத்தைச் சூழ்ந்துள்ளன. படம் தொடங்கும்போது டெய்ட் மெல்ல அதிகாரம் இழந்துகொண்டிருக்கிறாள்.

அவள் நிலத்துக்கு மேற்கே உள்ள புதியநிலப்பகுதியை ஆள்பவள் பிளாக்டிப். பிளாக்டிப் டெயிட்டுடைய சொந்த மகள். வளர்ந்து தனக்கென ஒரு குழுவை உருவாக்கி அதற்கு தலைவியானவள். அவளது குழுவின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பிளாக்டிப் தன்னுடைய எல்லைகளை விரிவாக்க எண்ணி, தன்னுடைய குழுவுடன் டெய்ட்டின் நிலத்தை ஆக்ரமிக்க வருகிறாள்.

காட்டுநாய்க்குழுக்கள் மோதுகின்றன. திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத டெய்ட் கடுமையான யுத்தத்திற்கு பின் தன் குழுவுடன் பின்வாங்குகிறாள். பிளாக்டிப் வெற்றிகரமாக புதிய நிலத்தில் தன் குழுவை ஸ்தாபிக்கிறாள். பின்வாங்கும் டெய்ட் சிங்கங்களின் தேசத்திற்குள் தன் குழுவுடன் செல்கிறாள்.

காட்டுநாய்களின் குழுவில் தலைவி மட்டுமே குட்டி ஈன்பது வழக்கம். மற்ற சகோதரிகளும், மகள்களும், பேத்திகளும் அந்த குட்டிகளை காக்கும் பொறுப்பை கொண்டவை. பிளாக்டிப் ஐந்து குட்டிகளை ஈனுகிறாள். ஆனால் கழுதைப்புலிகள் அவர்களின் எல்லைகளிலேயே காத்துக்கொண்டிருக்கின்றன. விரைவில் கோடையும் வறட்சியும் சேர்கிறது. பிளாக்டிப் குழு உணவு கிடைக்காமல் தங்களைவிட அளவில் பெரியவையும் ஆபத்தானவையுமான பபூன் குரங்குகளை கூட்டமாக சுற்றி வளைத்து வேட்டையாடுகின்றன.

சிங்கநாட்டுக்குள் பின்வாங்கும் டெய்ட் அனுபவமுள்ள மூதச்சி. அவள் தலைமையில் அவளது குழு கடுமையான வெப்பகாலத்தை சிங்கநாட்டில் ஓரு குழு உறுப்பினரைக் கூட இழக்காமல், ஒரு வறண்ட ஆற்றுப்படுகையில் தலைமறைவாக  பதுங்கி வாழ்ந்து கடந்துவிடுகிறது. தன் குழு சுற்றும் பாதுகாக்க ஒரு வளைக்குள் டெய்ட் அவளது எட்டாவது ஈற்றில் இருகுட்டிகளை ஈனுகிறாள்.

வெப்பம் மூத்து பஞ்சம் தொடங்கிவிடுகிறது. யானைகள் மழைக்காலத்தில் வைத்த காலடிகள் கோடைச் சூட்டில் வெந்து ஆபத்தான குழிகளாக காட்டுத்தரை முழுவதும் பரவியிருக்கின்றன. அந்நிலத்தில் மானை துரத்தி சென்று வேட்டையாடுவது மிகவும் ஆபத்தானது. தவறான ஒரு அடிகூட காலை முறித்து நடக்கமுடியாமல் செய்துவிடும். அப்படியும் டெய்ட் வெற்றிகரமாக தன் குழுவுடன் வேட்டையாடுகிறாள். ஆனால் அதை முழுதாக உண்ணத்துவங்கும் முன்னேயே சிங்கங்கள் அபகரித்துக்கொள்கின்றன. டெய்ட்டின் சகோதரிக்கு காலில் பலமாக அடிபடுகிறது. நடக்க முடியாத அவளை குழு ஒன்றாக சேர்ந்து பார்த்துக்கொள்கிறது.

டெய்ட்டின் குழுவில் அவளது இளைய மகள் டாம்மி சாதுர்யமாக அன்னையின் குட்டிகளை காக்கிறாள். ஒருமுறை சிங்கங்களுக்கும் காட்டுநாய்களுக்குமான போரில் டாம்மி மட்டும் இரு குட்டிகளுடன் தனியாக போராடுகிறாள், சிங்கங்கள் அவளை நெருங்கும் தருணம் ஒரு அற்புதம் நடக்கிறது. மயிரிழையில் குட்டிகளுடன் தப்பிக்கிறாள்.

பிளாக்டிப் தான் ஆக்கிரமித்த டெய்ட்டின் நிலத்தில் தன் குழுவின் துணையோடு வாடையால் விரிவாக அடையாளப்படுத்துகிறாள். அப்போது ஓரிடத்தில் அவளுக்கு டெய்ட்டின் வாசம் கிடைக்கிறது. அங்கே டெய்ட் வந்து போனது தெரியவருகிறது.

பிளாக்டிப் வெறி கொள்கிறாள். உடனே எல்லையை அடையாளப்படுத்தும் தன் குழுக்களை திரட்டி தன் அன்னையை முழுவதுமாக தோற்கடித்து அழிக்க அவளை தேடித் துரத்திக்கொண்டு சிங்கநாட்டிற்குள் வருகிறாள்.

அது அவள் முன்பின் கண்டிராத நிலம். காட்டுநாய்கள் அமாவாசை நாளில் ஒருபோதும் இரவில் பயணம் செய்வதில்லை. ஆனால் பிளாக்டிப் குழுவில் உள்ள தனது குட்டிகளையும் பொருட்படுத்தாமல் இரவிலும், நிற்காமல் பின் தொடர்ந்து செல்கிறாள்.

இரவில் கழுதைப்புலிகள் அவர்களை சுற்றி வளைக்கின்றன. காட்டுநாய்கள் எதிர்த்து போரிடுகின்றன. போரின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் பிளாக்டிப் தன் குட்டிகளிலிருந்து பிரிகிறாள். கணப்பொழுதில் கழுதைப்புலிகள் அவள் கண் முன்னே குட்டிகளை கிழித்துக் கொல்கின்றன.

மறுநாள் முழுவதும் பிளாக்டிப் குழு ஒரு குரலும் எழாமல் தலைகுனிந்தபடியே மேலும் தொடர்கின்றனர். பிளாக்டிப் மட்டும் மூர்க்கமாக முன்னே செல்கிறாள். கடைசியாக ஓர் ஆற்றை கடக்கும் போது குழுவின் மூத்த நாய் ஒன்றை முதலை ஒன்று கடித்திழுத்து கொண்டு செல்கிறது. கரையில் நின்று செய்வதறியாது திகைக்கிறது குழு, துள்ளியும் சுழன்றும் அவை கரையில் நின்று ஓலமிடுகின்றன.

பிளாக்டிப்புக்கு கணநேரத்தில் அனைத்தும் தெளிகிறது. அவர்கள் நிலைமையுணர்ந்து பின்வாங்கி ஓடத் துவங்குகிறார்கள். இரவும் பகலுமாக நில்லாமல் ஓடி பல மைல்கள் கடந்து தங்கள் சொந்த நிலத்தை அடைகின்றனர்.

மழை வருகிறது. பஞ்சம் முடிகிறது. சிங்கநாட்டைத் தாண்டிய பாரம்பரிய நிலம் எல்லாமே டெய்ட்டின் வம்சத்துக்கு என்று ஆகிறது. அவளுடைய குழு வென்ற நிலத்தில் குடிபுகுவதற்காக புறப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் டெய்ட் சிங்கநாட்டிலேயே இருந்துவிடுகிறாள். அவளுக்கு வயதாகிறது, இனி அவளால் திரும்பச்செல்ல முடியாது என்று அவளுக்குத் தெரிகிறது. அவளுடைய இணை நாயும் அவளுடன் தங்கிவிடுகிறான். அவர்கள் அங்கேயே சிங்கங்களுக்கு இரையாகி மறைந்திருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் ஊகிக்கிறார்கள். ஆனால் யாருக்கும் அறுதியாகத் தெரியவில்லை. அதுவரை இருந்தவள் இல்லாமலாகிறாள், அவ்வளவுதான் (டெய்ட்டின் மறைவு)

டெய்ட்டின் குழு தலைவியில்லாமல் சொந்த நிலத்துக்கு திரும்பச் செல்கிறது.  செல்லும் வழியில் அவர்கள் சில உதிரி ஆண் நாய்களை சந்திக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் இதுவரை பதிவுசெய்யப்படாத ஒரு வினோதமான சடங்கு நடக்கிறது. காட்டுநாய்கள் சேர்ந்து சுற்றி ஊளையிட்டபடி நடனமிடும் அந்த சடங்கின் முடிவில் இளையவளான டாம்மி தலைவியாக தேர்ந்தெடுக்க படுகிறாள்.

டாம்மி அவளது முதல் ஈற்றில் ஏழு குட்டிகளை ஈனுகிறாள். மழைச் செழிப்பில் அவள் வம்சம் வளர்கிறது. எல்லைக்கு மறுபக்கம் பிளாக்டிப்பின் வம்சமும் பெருகுகிறது. இம்முறை அவளுக்கு பத்து குட்டிகள் பிறக்கின்றன. வழவழப்பான மூக்குகளுடன் எல்லைக்கு இருபுறமும் புத்தும்புது காட்டுநாய்க்குட்டிகள் காட்டில் துள்ளிக் கடித்து விளையாடுகின்றன.

*

ஒரு பெரு நாவலை வாசிக்கும் விரிவை நிறைவை தரக்கூடிய கதை இது. பிளாக்டிப் ஒரு சத்யவதியாக எனக்குத் தோன்றினாள். காவிய உணர்வு வெளிபட்ட இடங்கள் பல இருந்தன. டெய்ட்டின் குட்டிகள் காப்பாற்றப்படும் அற்புதக்கணம். பபூன் குரங்கின் குட்டியை காட்டுநாய்கள் திசைத்திருப்பிக் கவர்ந்துவிடும்போது, அதுவரை வெறியுடன் போரிட்ட ஆல்ஃபா குரங்கு நடந்தது புரியாமல் அப்படியே அமர்ந்து ஓலமிடும் இடம். டெய்ட் அவள் வென்றநிலத்துக்கு குழுவோடு திரும்பாமல் அமையும் இடம். இவற்றைத்தாண்டி சில விலங்குகள் தங்கள் இருப்பின் வழியாகவே  காட்டின் அர்த்தத்தை ஆழப்படுத்துகின்றன. மான்கள் காட்டின் எச்சரிக்கையை. சிங்கம் காட்டின் இரக்கமின்மையை. யானை காட்டின் காலாதீதத்தை.

ஆனால் இது திரைப்படம் என்பதால் இதன் முதன்மை அனுபவம் காட்சி. கண்ணில் மட்டுமே திறக்கக்கூடிய அனுபவங்கள் வழியாக இதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக அமைந்தது.

காட்டுநாய்க்குட்டிகள் பிறக்கின்றன. மண்ணுக்கு அடியில், குழிகளில், பொந்துகளில். கண்திறந்து அவற்றை அம்மா வெளியே கூட்டி வருகிறாள். ஒளி கூச முழித்துப் முழித்துப் பார்க்கின்றன. திடீரென்று அவற்றின் கண்களில் விரிவு. அருகே, மடிப்பு மடிப்பாக கனத்த உடல். காற்றைக் குத்தும் தந்தங்கள். வளையும் துதிக்கை. குட்டியின் தலையும் அதன்கூடவே உயர்கிறது. தான் இருக்கும் காடு எத்தகையது என்று கண்டுவிடுகிறது.

இன்னொரு உதாரணம். பிளாக்டிப் பின்வாங்கும் இடம். அதுவரை கொண்டுவந்த துணிவெல்லாம் இழந்து காட்டுநாய்கள் வாலைத் திருப்பிக்கொண்டு வந்தவழியெல்லாம் ஓடுகின்றன. கண்ணை மேலே கொண்டுபோய் அவர்கள் ஓடுவதைக் காட்டுகிறார்கள் படப்பிடிப்பாளர்கள். அத்தனை மாதக்காலம் இஞ்ச் இஞ்சாக கைப்பற்றிய நிலத்தை ஒரே கோட்டில் கடந்து ஓடுகின்றன அவை. அந்திச்சூரிய வெளிச்சத்தில் அவர்களுடைய ஓடும் நிழல்கள் பூதாகரமாக பக்கவாட்டில் விழுகின்றன.

ஆனால் இவற்றுக்கு மேலாகவும் பாதித்த காட்சிகளென்றால் நேரடியான உயிரின், உடலின் சூட்டையும் அவசரத்தையும் துடிப்பையும் உணரச்செய்த காட்சிகள். காட்டுநாய் ஓடும்போது அதன் கண்ணில் பசியும் குறிக்கோளும் ஒருசேரத் தெரிகிறது. இழுத்துக்கட்டியது போன்ற தசைகளின் அசைவு ஒவ்வொரு பாய்ச்சலிலும் ஒரு வில்லாக உடல் மாறுவதைக் காட்டுகிறது. காட்டில் சில விலங்குகள் வேகமானவை. மான்களைப்போல. சில விலங்குகள் ஆர்ப்பாட்டமில்லாதவை. யானைப்போல, முதலையைப்போல. ஆனால் எல்லா விலங்குகளும் உடலே கவனமானவை. பல விலங்குகள் கலந்து நிற்கும் காட்சிகளில் இதைப்பார்க்கலாம். காட்டுநாய்கள் சிங்கத்தைப் பார்த்து சிதறுகின்றன. சிங்கம் எந்தக்கவலையும் இல்லாததாக அதன் பாட்டுக்கு நடுவே நடந்துகொண்டிருக்கிறது. யானைகள் ஓரமாக நின்று புல்லை மெல்லுகின்றன. பறவைகள் அப்பால் நிற்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் முழுமையாக கண்விழித்திருக்கிறது. அந்த விழிப்பின் சரடே காட்டை இணைக்கும் உயிர்.

விலங்குகளின் உடல் பிளந்து சதையும் நிணமும் பொத்திச் சிந்துகிறது. பிடிபடும் கணம் ஒவ்வொரு உடலும் உச்சக்கட்ட உயிராசையில் துடிக்கிறது. பெரும்பாலும் மெல்லிய காலாலேயே விலங்குகள் பிடிபடுகின்றன. காலை ஒன்றும் கழுத்தை ஒன்றும் உடலுக்கடியில் உள்ள மெத்தான பகுதியை இன்னொன்றும் பிடித்து இழுக்க வேட்டைவிலங்குகின் உயிர் ஒவ்வொரு திசையிலும் இழுக்கப்பட்டு ஒரு திமிறல் திமிறி அடங்கி மறைகிறது. அதிலும் குட்டிகள் பிடிபடும்போது உயிர் இறக்கையுள்ள பறவையாக அவற்றின் சின்ன உடலில் படபடவென்று அடித்துக்கொள்கிறது. உயிர் என்பது இத்தனை நொய்மையானதா என்று எண்ணச்செய்கிறது.

ஆனால் இந்தப்படம் நெடுக ஒன்று நிகழ்ந்தது. குட்டிகள் முதன்முதலில் பிடிபடும்போது அடைந்த பதைபதைப்பு படம் வளரவளர இல்லாமலானது. ஒவ்வொன்றும் உண்கிறது. உண்ணப்படுகிறது. சொந்த ரத்தத்தை நக்குகிறது. இரையின் ரத்தத்தை நக்குகிறது. பங்காளியின் ரத்தத்தையும் நக்குகிறது. காட்டுக்குள் ஓடுகிறது ரத்தம். காட்டின் ஊற்று அது. காட்டின் கனிகளின் சாறு.

காட்டுவிலங்குகள் அத்தனை இயல்பாக அதன் அறத்துடன் – காட்டின் தர்மத்துடன் – பொருந்தி வாழ முடிகிறது. ஒரு விலங்கால் விலங்காக இருப்பதன் வழியாகவே அசாத்தியமான பெருந்தன்மையை, மகத்துவத்தை, ராஜகம்பீரத்தை, அடையமுடிகிறது.

மனிதனுக்கு அறமென்ன என்று மனிதன் தான் விலங்கல்ல என்று நிச்சயித்த காலம் தொட்டு தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கும் ஒன்று. அறங்களை சிந்தித்து விவாதித்து வகுக்க நினைத்த எத்தனையோ சான்றோர்களால் நமக்குக் கலாச்சாரம் புகுத்தப்பட்டது. கலாச்சாரம் வளர வளர நாம் விலங்குகளின் சஞ்சலமற்ற தூய உலகிலிருந்து அன்னியப்பட்டுப் போனோம். எந்த ஒரு விலங்கும் தன் சுற்றத்துடன் சரியாக பொருந்திப்போகையில் சுதந்திரமாக தன் தர்மத்தை நிறைவேற்றி வாழ்கிறது. மனிதன் அப்படியொரு மனிதவிலங்காக வாழ்வது எப்படி?

தைத்திரீய உபநிஷத் ரத்தச்சதைக்குள் மூச்சையும் மூச்சுக்குள் மனதையும் மனத்துக்குள் புத்தியையும் புத்திக்குள் பிரம்மானந்தத்தின் நிறைவையும் வைக்கிறது. அந்த உச்சத்தை சொல்லி முடித்தப்பிறகு, பித்தேறிய ஒரு ரிஷி  முன்னால் வந்து இவ்வாறாகக் கூத்தாடுகிறான். இந்தத்தொடரை பார்த்து முடித்த இரவின் மௌனத்தில் இந்த வரிகள் மெல்ல உள்ளத்தில் எழுந்தன.

“நான் அன்னம்! நான் அன்னம்! நான் அன்னம்!
நான் உண்ணப்படுபவன்! நான் உண்ணப்படுபவன்! உண்ணப்படுபவன் நானே!
நான் பாடல்களை இயற்றுபவன்! நான் பாடல்களை இயற்றுபவன்! பாடல்களை இயற்றுபவன் நான்!
நான் அறங்களின் முதல்மைந்தன்! தெய்வங்களுக்கு முன்னால் தோன்றியவன்! அமுதத்தின் மூலவன்.

என்னை கொடுப்பவன் என்னை இங்கே நிலைக்கச்செய்பவன்.
நான் அன்னம், உண்பவனையும் உண்பேன்.
இவ்வுலகத்தை முழுவதையும் வென்றுவிட்டேன் நான்
அதன் மகிமையில் சூரியனைப்போன்றது என் ஒளி”

இறுதி யாத்திரை [சிறுகதை]

சங்கரலிங்கம் தன்னைக் கண்ணாடியில் பார்த்தார். வலதுபுறக் கன்னம் மேலே எழுந்திருந்தது. நாக்கு மெல்ல நகர்ந்து மேலுதட்டுக்கடியில் ஊறி மறுபக்கமாகக் கீழிறங்க நரைத்த முடி முகத்தில் கொத்துக்கொத்தாக எழுந்தெழுந்து அடங்கியது.

பெருமூச்சுடன் நாற்காலியில் பின்னால் சாய்ந்துகொண்டு கைகாட்டினார். “ஆரம்பிக்கலாம்”

[மேலும் வாசிக்க]

நன்றி – அரூ இணைய இதழ்